— அன்பழகன் குரூஸ் —
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் தாம் தமது சமூகத்திற்கு இதுவரை செய்த சேவைகளையும், வெற்றி பெற்றால் தாம் தம் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதனைப் பட்டியலிட்டு வாக்குகளை வாங்கி வெற்றிபெறவேண்டும் என்று போராடுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்த வட்டாரத்திற்கு தான்தான் சகலதும் என நினைப்பதும், தன்னால் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வேடிக்கையாக இருக்கின்றது.
இவர்கள் முதலில் உள்ளூராட்சியை தெரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி என்பது பிரதேச அளவில் காணப்படும் ஒரு சிறிய ஆட்சி முறையாகும். பிரதேசம் என்பது பல வட்டாரங்களை உள்ளடக்கியதாகும். இங்கு மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் (வட்டாரம்(நேரடி) மற்றும் விகிதாசார முறையில்) தமது பிரதிநிதிகளை தாமே தெரிவு செய்வர்.
தெரிவு செய்யப்பட்டவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக அந்த அந்த உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுவர்.
இவர்கள் சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு முன்மொழிவுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், கருத்துரைத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சபைத் தீர்மானங்களை மேற்கொண்டு, தமது பிரதேச அபிவிருத்திக்காகச் செயற்படுவர். அதாவது உள்ளூராட்சி மன்றங்களில் சபைகள் (Council) இவர்களைக் கொண்டு இயங்கும்.
பாராளுமன்றத்தால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரவரப்பினுள், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் கூடி (குறைந்தது மாதம் ஒருமுறை) பொது மக்களுக்குச் சேவை செய்வதே இவர்களது கடமையாக அமைகின்றது.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளும் பொறுப்புக்களும், அவர்கள் சேவையாற்றும் அதிகார எல்லை என்பன கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டியதாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிதி நிலைமையில்தான் அபிவிருத்தி தங்கியுள்ளது.
வரிகள், வாடகைகள், கட்டணங்கள், தண்டப்பணங்கள் மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் சுயமாக வருமானத்தை ஈட்டி அவற்றினையே அபிவிருத்திக்குச் செலவு செய்ய முடியும்.
இது தவிர அரச நிதி மற்றும் மாகாண நிதி என்பன பெறப்படலாம்.
அபிவிருத்தி என்பது உள்ளூராட்சி மன்றங்களின் நிதி நிலைமையில் தங்கியுள்ளது.
எனவே மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக பின்வரும் விடயங்களில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.
• உள்ளூராட்சியினால் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சேவைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
• சட்டத்தைப் பின்பற்றி சட்டத்தை மதித்து நல்லாட்சி புரியும் தனித்துவமான அர்ப்பணிப்பு வேண்டும். குறிப்பாக பிரதேச சபை சட்டம் 15/1987 நகர சபைக் கட்டளைச்சட்டம் 61/1939, மாநகர சபைக் கட்டளைச் சட்டம் 29/1947 மற்றும் உள்ளூராட்சி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 69/1971 என்பன உள்ளூராட்சியின் அடிப்படைகளாகும். இவைதவிர அதிகமான கட்டளைச் சட்டங்களும், சட்டங்களும், நியதிச் சட்டங்களும், துணை விதிகளும் தொடர்புபடுகின்றன.
• வருமானமீட்டக்கூடிய வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைப் பெறக்கூடிய உபாயங்களை வகுக்க வேண்டும்.
• அரச நிதிப் பிரமாணத்திற்கு அமைவாகச் செயற்படவேண்டும்.
• குறிப்பாக ஊழல் இல்லாத ஆட்சி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். முரண்பட்ட ஆர்வம் (Conflict of Interest) இல்லாத ஒரு பிரதிநிதியையே தற்போது எதிர்பார்க்கின்றனர்.
• அரச சொத்துக்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
• எதிர்தரப்பு ஆளுந்தரப்பு என்றில்லாத ஒருமித்த கையோர்ப்பு உள்ளூராட்சியின் தனித்துவமானதாகும்.
• பொதுமக்களின் பங்களிப்பினைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வது நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை உருவாக்கும்.
வெற்றி பெறுபவர்கள் மக்கள் சேவகர்கள் எனும் நிலையிலிருந்து மாறாதிருப்பின் அவர்களது அரசியல் வாழ்வு அடுத்த படிநிலையை அடையும்….
இல்லாவிட்டால் காலம் பதில் சொல்லும் ……