உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

— கருணாகரன் —

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம்ஒரு வீடுஒரு கதைஒரு கனவு இருந்தது

‘ஆக்கிரமிப்பு இஸ்ரேல்’ அரசினால், நீதிக்கு மாறான முறையில் முடிவற்று எரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் பலஸ்தீனத்தின் கண்ணீரையும் இரத்தத்தையும் உயிர்ச் சாட்சியமாகத் தமிழில் தந்திருக்கிறார் அ.சி. விஜிதரன். ‘மரித்தோரின் பாடல்கள்’ – காஸாவில் கொல்லப்பட்டவர்களின் இறுதி வார்த்தைகள் என்ற தலைப்பில், ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் கொல்லப்பட்டோர் எழுதிய அல்லது கொல்லப்படுவதற்கு முதற்கணங்களில் – அந்தத் துயர்க்கணத்தில் பகிர்ந்த இறுதி வார்த்தைகள் தொகுத்து, நூலாக்கப்பட்டுள்ளது.  272பக்கமுள்ள இந்தச் சிறு நூலில், இந்த உலகத்தால் தாங்க முடியாத, சுமக்க முடியாத பெருந்துயரம் நிரம்பி வழிகிறது.

முதற் பதிவே இதயத்தை உலுக்குகிறது. 

2024 ஜனவரி 29 ஆம் நாள்  காஸாவின் டெல் அல் ஹாவாவில் இருந்து பாதுகாப்புத் தேடி, காரில் சென்று கொண்டிருந்தது ஒரு குடும்பம். அப்பொழுது ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இராணுவ டாங்கி, அந்தக் காரின் மீது தாக்குதலை  மேற்கொண்டது. காரில் இருந்த 15 வயதான ஹிந்த் ராஜ்ப் மற்றும் 05 வயதான லாயன் ஹமதா ஆகியோரைத் தவிர, ஏனையவர்கள் காரிலேயே கொல்லப்பட்டு விடுகின்றனர். தப்பிய சிறுவர்களில் ஒருவரான ஹிந்த் ராஜ்ப், செம்பிறைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களுடைய ஆபத்தான நிலையை விளக்குகிறார். இதை அவதானித்த இஸ்ரேலியப் படையினர் ஹிந்த் ராஜ்ப்பைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். காருக்குள் தப்பியிருப்பது ஐந்து வயதுடைய லாயன் ஹமதா மட்டும்தான். அந்தக் குழந்தை ஹிந்த் ராஜ்ப் பேசிய கைத் தொலைபேசியை எடுத்துப்பேசுகிறது. மறுமுனையில் செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த பெண் பேசுகிறார். அந்த உரையாடலின் பதிவுகள் பின்வருமாறு உள்ளன –  

செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த ராணா அல் – ஃஅல்பாக் என்ற  பெண் ஊழியர் (செ.பி): “ஹலோ.. யாராவது உயிரோடு இருக்கிறாங்களா? ஹலோ…”

லாயன் ஹமதா: “இல்ல..எல்லாரும் செத்துட்டாங்க… .. எல்லாரும் செத்துட்டாங்க…”

செ.பி: “எல்லாருமா?”

லாயன் ஹமதா: “ஆமா…”

செ.பி: “நீங்க இப்ப எங்க ஒழிஞ்சிருக்கிறீங்க?”

லாயன் ஹமதா: “காருக்குள்ள…”

செ.பி: “செல்லக்குட்டி நீங்க காருக்குள்ளேயே இருங்க… இறங்கக் கூடாதுநான் உங்க கிட்ட போன் பேசிக்கிட்டே இருக்கேன்… நான் கட் பண்ண மாட்டன்உங்க கூடத்தான் பேசிட்டே இருப்பேன்போன கட் பண்ணாதீங்க… சரியா!”

லாயன் ஹமதா: “டாங்கி எங்க கார் பக்கத்துலதான் நிக்குது

செ.பி: “எந்தப் பக்கமா நிக்குது?”

லாயன் ஹமதா: “பக்கத்துல நிக்குது

செ.பி: “ரொம்பப் பக்கமா நிக்குதா?”

லாயன் ஹமதா: “ஆமா

செ.பி: “அது நகருதாஇல்ல நிக்குதாயாராவது அதுல இருந்து இறங்குறாங்களா?”

லாயன் ஹமதா: “அது நகருது

செ.பி:  “அது போகுதாஇல்ல காருக்குப் பக்கத்தில வருதாஎந்தப் பக்கத்தில இருந்து வருது..? முன்னாடி இருந்தா… இல்ல… பின்னாடி இருந்தா…?”

லாயன் ஹமதா: “காருக்கு முன்னாடி இருந்து வருது

செ.பி: “உங்க காருக்கு முன்னாடி இருந்துகாரப் பார்த்த மாதிரி வருதா?…”

லாயன் ஹமதா: “ஆமா

செ.பி: “ரொம்பப் பக்கத்துல வருதா?”

லாயன் ஹமதா: “ஆமா… ஆமா… ரொம்ப… ரொம்ப பக்கத்தில..”

செ.பி: “வந்துக்கிட்டே இருக்கா…?”

லாயன் ஹமதா: “ஆமா..”

செ.பி: “சரி செல்லக்குட்டி நீங்க பயப்படாதீங்க… நீங்க எங்கூட பேசிட்டே இருங்க.. நான் உங்க கூடத்தான் இருக்கேன் செல்லம்யாராவது வந்து உங்களக் கூட்டிட்டு போறவரைக்கும் நான் உங்க கூடப் பேசிட்டே இருக்கேன்… சரியாநீங்க பயப்படாதீங்க…”

லாயன் ஹமதா: “யாராவது வந்தா போன வெச்சிடுவீங்களா?…”

செ.பி: “என்ன மா…?

லாயன் ஹமதா: “யாராவது வந்தா நீங்க போன கட் பண்ணிடுவீங்களா?

செ.பி: “இல்ல… நான் உங்க கூடப்பேசிட்டே இருக்கேன்…. செம்பிறைச் சங்கம்இல்ல யாராவது உங்களப் பத்திரமா கூட்டிட்டுப் போற வரைக்கும் பேசிட்டு இருக்கேன்… இராணுவம் வந்தா… கடவுள் தடுப்பாரு… நீங்க போன வைக்கக் கூடாது…. செல்லம்இந்த லைனைக் கட் பண்ணக் கூடாதுநான் உங்க கூடத்தான் இருக்கேன்”. 

லாயன் ஹமதா: “தயவு செஞ்சு வாங்களேன்… வந்து என்னைக் கூட்டிட்டு போங்க…. ப்ளீஸ்….” (அழுகிறது குழந்தை)

செ.பி: “என்ன மா?”

லாயன் ஹமதா: “எங்கூட இருங்க ப்ளீஸ்….”

செ.பி: “செல்லக்குட்டி… நான் பிள்ளைய விட்டு எங்கயும் போகமாட்டன்.  சத்தியம்….இங்க உங்கக் கூடப் பேசிட்டுத்தான் இருப்பன்

லாயன் ஹமதா: “இப்ப என்ன நேரம்?….”

செ.பி: ”என்னமா?”

லாயன் ஹமதா: “இப்ப என்ன நேரம்..? இங்க இருட்டீட்டு வருது…”

செ.பி: “என்ன ஆச்சு… தங்கம்

லாயன் ஹமதா: “இருட்டுது….எனக்குப் பயமா இருக்கு… என்னய ப்ளீஸ் கூட்டிட்டுப் போங்க… ப்ளீஸ்… (மீண்டும் குழந்தை அழ ஆரம்பிக்கிறது)

செ.பி: “கண்டிப்பா… மா…. இப்ப எனக்கு அந்தச் சக்தி இருந்துச்சுன்னா… உங்கக்கிட்ட ஓடி வந்து பிள்ளையத் தூக்கிட்டு வந்திருப்பேன்…. நாம.. அல்லாஹ் கிட்ட வேண்டுவமாஅல்லாஹ் அல்லாஹ்… எங்களக் காப்பாற்றுங்க… 

லாயன் ஹமதா: “அல்லா..எங்களைக் காப்பாற்றுங்கள்…. ”

செ.பி: “அல்லா.. எங்களைக் காப்பாற்றுங்கள்…. ”

லாயன் ஹமதா: “அல்லா..எங்களைக் காப்பாற்றுங்கள்…. ”

இத்தோடு அந்த அழைப்புத் துண்டிக்கப்படுகிறது. 

ஆனால், கொலை வலயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அந்தக் குழந்தையோடு (லாயன் ஹமதா),செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த ராணா அல் – ஃஅல்பாக் என்ற பெண் ஊழியர் மூன்று மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கிடையில் தமது செம்பிறை அணியைச் சேர்ந்தவர்களை அங்கே அனுப்பி, அந்தக் குழந்தையை மீட்டு விடலாம் என்பது அவருடைய நம்பிக்கை. அதற்காக கடுமையாக முயற்சித்தார். செம்பிறைப் பணியாளர்கள்  குழந்தையிடம் செல்லும்வரையில், குழந்தையைச் சோர்வடைய விடாமல் அந்தக் குழந்தையை தேற்றிப்  பேசிக் கொண்டிருந்தார். ஆனால்,செம்பிறை அணியினர் அங்கே செல்வதற்கு முன், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கி அந்தக் காரின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, அந்தக் குழந்தை (லாயன் ஹமதா) யையும் கொன்று விடுகிறது. மட்டுமல்ல, மீட்புக்குச் சென்ற செம்பிறைச் சங்க அவசர மருத்துவ ஊர்தியின் (Ambulance)மீதும் ஷெல்லை வீசித் தாக்கி, அதிலிருந்த இரண்டு செம்பிறை ஊழியர்களையும் கொன்று விடுகிறது. 

இதெல்லாம் கிட்டத்தட்ட 12 நாட்களின் பின்னரே தெரியவந்தது. அதுவரையிலும் அந்தப் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் யாரையும் விடவில்லை. அதற்குப்பின்னர் அங்கே சென்றவர்களே, குழந்தை லாயன் ஹமதா உட்பட மொத்தக் குடும்பத்தினரும் காரிற்குள் கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்டனர். அவர்களிடமிருந்து சில மீற்றர் தொலைவில் அந்தக் குழந்தையை (லாயன் ஹமதா) மீட்கச் சென்ற செம்பிறைச் சங்க ஊழியர்களும் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தனர். 

மருத்துவ ஊர்தியின் மீது அமெரிக்கத் தயாரிப்பான எம் M83OA1 வகைக் குண்டை வீசியுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இராணுவம். கிட்டத்தட்ட 365 துப்பாக்கிக் குண்டுகளை அந்தக் கார் இருந்த பகுதியை நோக்கி ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் சுட்டிருப்பதாக பின்னர் நடந்த ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் குழந்தைக்கும் செம்பிறைச் சங்க ஊழியர் ராணா அல் – ஃஅல்பாக்குக்கும் இடையில் நடந்த கடைசி உரையாடலின் சில நிமிட ஒலிப்பதிவு YouTube இல் காணப்படுகிறது. அதற்குரிய விவரங்களை இந்த நூலின் இறுதிப்பகுதியில் பார்க்கலாம்.

இப்படி நெஞ்சை உலுக்கும் 90 பதிவுகள், மரித்தோர் பாடல்களில் உண்டு. ஒவ்வொன்றும் பெருந்துயரத்தின், பேரவலத்தின் வெளிப்பாடு. அத்தனைக்கும் ஆதாரமாக – சான்றுகளாக ஒளிப்படங்களும் (Photos) இணையச் சுவடிகளும் உள்ளன. இவற்றை விஜிதரன், இணையத் தளங்களிலிருந்து எடுத்துத் தொகுத்திருக்கிறார். இருந்தாலும் இவற்றைத் தொடர்ச்சியாக நம்மால் படிக்க முடியவில்லை. அந்தளவுக்கு உளநெருக்கடி – உளப்பாரம் – ஏற்படுகிறது. ரத்தமும் நிணமுமாகச் சிதறிக்கிடக்கும் பிணங்களின் ஊடே நடப்பதாக, கண்ணீரோடும் மீள முடியாத துயரத்தோடும் கதறும் குரல்களைக் கடக்க முடியாமல் திணறுவதைப்போல ஓருணர்வு ஏற்படுகிறது. அதனால் ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவுக்குச் செல்வதற்கிடையில் பெரியதொரு இடைவெளி வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் இவற்றையெல்லாம் படித்துத் தொகுக்கும்போது விஜிதரனுடைய உளம் எப்படி இருந்திருக்கும்? அதையும் விட மேலே குறிப்பிட்ட பதிவில் உள்ள செம்பிறைச் சங்க ஊழியரான ராணா அல் – ஃஅல்பாக்கின் உளம் எப்படி இருந்திருக்கும். இந்த மாதிரிக் களத்தில் உள்ள மக்களுக்கும் களப்பணி ஆற்றுகின்ற பணியாளர்களுக்கும் ஏற்படுகின்ற உள நெருக்கீடு (Mental stress) உளப்பாதிப்பு (Mental disorder) சாதாரணமானதல்ல. அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது மிகச் சிரமமானது. நிச்சயமாகச்  செம்பிறைச் சங்கத்தின் இந்தப் பெண் பணியாளர் உள அதிர்ச்சிக்கு (Trauma) உள்ளாகியிருப்பார்.  

இதேபோன்ற பேரவலப் பரப்பொன்றின் காலம் ஈழத்தமிழர்களுக்கும் 2009 இல் நேர்ந்தது. முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனத்தைப்போல முற்றுகையிடப்பட்ட வன்னி நிலம் (முள்ளிவாய்க்கால்) அன்று இருந்தது. அதற்குள் சிக்கிய மக்களின் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்புப் பணியாட்களால் போர்க்களத்துக்கு வெளியே சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதற்கு முன் உடனடிச் சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கும் மீட்டுச் செல்ல முடியாத சூழலில் சிக்கியவர்களுக்கும் மயக்க மருந்தின்றியே அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஏன் குழந்தைகளைப் பிரசவிக்கும் பெண்களுக்குக் கூட எந்த மருத்துவ வசதிகளும் இருக்கவில்லை.   

இதைப்பற்றிக் கவிஞர் சேரனின் கவிதை ஒன்றின் வரிகள் –

……………………..

……………………..

எறிகணை பட்டுத் தெறிக்கக் 

காயம்பட்ட 

இரண்டரை வயதுக்குழந்தையின் கைகளை 

மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்

இக்கணம் கடவுள்

நீரற்ற விழிகளுடன் அலறும்தாய்

ஒரு பிசாசு

(கொலைக்காட்சி)

அக்கணத்தில் இந்த மருத்துவனுடைய உளநிலை எவ்வாறிருக்கும்? தாயின் மனது எப்படிச் சமனிலையடையும்?ஆனால், இப்படித்தான் உலகம் முழுவதும் ஆதிக்கச் சக்திகளின் அநீதித் தீயில் அப்பாவி மனிதர்கள் கருக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

2023 அக்டோபர் 07 இல் காஸாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலுக்குள் இரகசியமாக நுழைந்து, இராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அங்கிருந்து சிலரைக் கடத்திச் சென்று விட்டதற்குமாகவே தன்னுடைய பதிலடித்தாக்குதல்கள் என்று சொல்கிறது இஸ்ரேல். இதை இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்து வழிமொழிந்திருக்கின்றன. இந்த உற்சாகத்தில் கடந்த ஓராண்டுக்குள் மட்டும் அறுபது ஆயிரம் பலஸ்தீனர்களைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல். இன்னும் அதனுடைய கொலைவெறி அடங்கவில்லை. ஏனென்றால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எல்லைகள், வரையறைகள் கிடையாது. ஆக்கிரமிப்பு வெறியானது நிலங்களையும் விழுங்கும். உயிர்களையும் விழுங்கும். அவர்களிடம் நீதியும் நியாயமும் என்றுமே இருப்பதில்லை. பொய்யும் புரட்டும் புனைவுமே அவர்களுடைய நியாயப்படுத்தல்களில் மீந்திருக்கும். நீதி இல்லாத இடத்தில் அன்பும் கருணையும் இருக்காது. ஆனாலும் ‘கடவுளின் தேசம்‘ தங்களுடைய நாடு என்று இஸ்ரேலியர்கள் வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள். கடவுளின் தேசத்திலிருப்போர் கடவுளின் குழந்தைகளாக, கடவுளுக்கு நிகரானவர்களாக அல்லவா இருக்க வேண்டும்! கடவுளின் குழந்தைகள் என்றால், அன்பும் கருணையும் கொண்டவர்களாக, நீதியுணர்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டுமே! 

இஸ்ரேலியர்கள் அப்படியா இருக்கிறார்கள்? சாத்தான்களாக, கொலைவெறியர்களாக, நீதி மறுப்பாளர்களாக, கருணையற்றோராக, ஆக்கிரமிப்பாளராக, கொடூரமானவர்களாக, மானுட விரோதிகளாக  அல்லவா இருக்கிறார்கள்!குழந்தைகளையும் பெண்களையும் முதியோரையும் கூட விட்டு வைக்காமல் கொன்று கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வதையிட்டு அவர்களுக்கு வெட்கமே இல்லை. இதை இந்த நாகரீக(?) உலகமும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. மனித உரிமையாளர்கள், மனித உரிமைகளுக்கான அமைப்புகள், ஐ.நா போன்ற சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் அறிக்கைகள், கண்டனங்களுக்கு அப்பால், நியாயமான செயலில் நகர முடியாமல் உள்ளன. அவற்றின் திறனும் வலுவும் அவ்வளவுதான்.  இதனால்,பலஸ்தீனர்கள், தமது சொந்தப் பலத்திலேயே போராட வேண்டியிருக்கிறது. எல்லா அநீதிக்கும் எல்லாக் கைவிடல்களுக்கு மத்தியிற்தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறைக்குட்படுகின்ற அனைத்து மக்களின் நிலையும் நியதியும் இதுதான். என்பதால்தான் இவர்களுக்கான நியாயக் குரலை நாம் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கடப்பாடு நமக்கு ஏற்படுகிறது. ‘ஆம், நாம் உங்களோடு இருக்கிறோம். உங்களோடு இணைந்து ஒடுக்குமுறையை அம்பலப்படுத்துகிறோம். ஒடுக்குமுறையாளர்களை எதிர்க்கிறோம்‘ என்று அவர்களுடைய தோள்களை அணைத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.   

இந்த நூலில் இஸ்ரேல் நாட்டை ‘ஆக்கிரமிப்பு இஸ்ரேல்‘ என்றும் இஸ்ரேலிய இராணுவத்தை ‘ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணும்‘ எனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியல் பிரக்ஞையோடு பிரயோகப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலை இப்படிக் குறிப்பிடுவது மிகச் சரியானதே. இதுதான் அதற்கு, அதனுடைய செயலுக்கு (நடத்தைக்கு) பொருத்தமானது. அதனுடைய வரலாற்றில் இந்தச் சொல் ஆழமான வடுவை, கறையை உண்டாக்கட்டும். இப்படித்தான் இலங்கை அரசும் அதனுடைய படைகளும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆக்கிரமிப்பைச் செய்துள்ளன.இதேபோன்றுதான் மக்களைக் கொன்று குவித்தன. பலஸ்தீனர்களைப்போலவே தமிழர்களும் பல ஆண்டுகளாக அகதிகளாக விரட்டப்பட்டனர். பலஸ்தீனர்களுடைய நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று எப்படி இஸ்ரேல் மாற்றிச் சொல்கிறதோ, அப்படியே தமிழர்களின் போராட்டத்தை இலங்கை அரசும் பயங்கரவாதம் என்கிறது. காஸாவில் கொல்லப்படும் பலஸ்தீன மக்களைப்போலவே முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மட்டுமல்ல, கொக்கட்டிச்சோலை, வல்வெட்டித்துறை, சத்துருக்கொண்டான், நவாலி, நாகர்கோயில், மன்னார் – முருங்கன், அல்லைப்பிட்டி, உடும்பன்குளம், ஒதியமலை, கல்முனை, செட்டிகுளம், புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், தம்பிலுவில்,  மிருசுவில், செம்மணி, மயிலந்தனை, இரணைப்பாலை எனப் பல இடங்களில் இலங்கை அரச படைகள் பல நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்தன. ஆகவே, ‘ஆக்கிரமிப்பு இஸ்ரேல்‘,‘ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணும்‘ என்று சொல்வதைப்போலவே, ‘ஒடுக்குமுறை இலங்கை அரசு‘, ‘ஒடுக்குமுறை இலங்கைப் படைகள்‘ என்று சொல்வதே சரியாக இருக்கும். அதற்கு இந்த நூல் ஒரு சரியான முன்னுதாரணத்தை வழங்குகிறது. இதில் ஒடுக்குமுறையாளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களின் துயரமும் வரலாற்றிற் பதியப்படுகிறது. இந்தத் துயரம்  ஒன்றும் கழிவிரக்கத்தைக் கோருவதற்காக இங்கே பகிரப்படவோ, பதியப்படவோ இல்லை. பதிலாக, உலக அறத்தின் முன்னும் வளர்ச்சியடைந்த  அறிவின் மீதும் கேள்வியை எழுப்புதற்காக முன்வைக்கப்படுகின்றது. 

எளிய (சாதாரண) மனிதர்களின் மீது (குழந்தைகள், பெண்கள், முதியோர் மீதெல்லாம்) கொலைவெறித் தாக்குதலை நடத்தும் போரை – இராணுவத்தை – அரசை அல்லது அமைப்புகள், தரப்புகளை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவை மனிதக் குணாம்சத்தை இழந்த காட்டுமிராண்டிகள். மூளைக் கோளாறுடையவை.

இலங்கையில் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அல்லது இலங்கை அரசினால் முடித்து  வைக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் (2009 மே – 2025 மே)ஆகி விட்டது. ஆனால், இன்னமும் தமிழர் பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் படைவலயங்களாகவே நீடிக்கின்றன. ஒவ்வொரு நகரிலும் படைத்தளங்கள் உண்டு. பிரதான வீதிகள் அத்தனையிலும் சோதனைச் சாவடிகளும் சோதனை நிலையங்களும் உள்ளன. தெருக்களெங்கும் படையினர் நடமாடுகிறார்கள். பல நூறு கிராமங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சொந்த வீடுகளுக்கும் திரும்ப முடியாதிருக்கின்றனர். இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் 2025 மே 01 இல் வந்திருக்கும் அரச அறிவித்தலில், வடக்கிலுள்ள கடலோரத்தில் மக்களுடைய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை அரசு, தன்னுடைய ஆக்கிரமிப்பைச் சட்டபூர்வமாகச் செய்ய முயற்சிக்கும் தந்திரோபாயமன்றி வேறென்ன?  இதை மறுதலிக்கும் மக்களுடைய எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் படைகள் உள்ளன. மேலதிகமாகச் சட்டங்கள் உள்ளன. எத்தனையோ எதிர்ப்புகள், மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்கள், விமர்சனங்களின் மத்தியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, கேள்வி கேட்கவே முடியாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இலங்கை அரசு வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசாங்கம் (தேசிய மக்கள் சக்தி – NPP) கூட இதில் மாற்றங்களைச் செய்யத் தயாரில்லை. ஒடுக்குமுறை அரசு இயந்திரம் மாற்றமில்லாமல் அப்படியேதான் உள்ளது. ஆக, ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிக்காக, வாழ்வுக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.  

மரித்தோர் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது முள்ளிவாய்க்கால் நினைவுகள் – அனுபவங்கள் – மேலெழுகின்றன. அந்தக் களத்தில் இருந்தவன் என்றவகையில் இந்தப் பதிவுகளைப் படித்தால் – பார்த்தால் –  பல நூறு முள்ளிவாய்க்கால்களாக காஸா உள்ளது என்று தெரிகிறது. நமது அவலத்தையும் துயரத்தையும் விட பல மடங்கு அவலமும் துயரமும் காஸா மக்களினுடையது. நம்மைப்போலவே அவர்களுக்கும் இந்த உலகத்தின் கருணையும் நீதியும் அரசியற் பலமும் கிடைக்கவில்லை. சமானியர்களின் அனுதாபங்களும் அன்பும் இரக்கமும் மட்டுமே அவர்களுக்கும் கிடைக்கிறது. அப்படியானதே இந்தக் கட்டுரையும், விஜிதரனின் ‘மரித்தோர் பாடல்கள்‘ போன்ற வெளிப்பாடுகள் எல்லாம். இதற்கு முன் பாலஸ்தீனக் கவிதைகளும் ஓவியங்களும் அவர்களுடைய அரசியல் கோரிக்கைகளும் தமிழ்ப்பரப்பு உட்பட பல்வேறு மொழிச் சமூகங்களினாலும் எடுத்துப் பகிரங்கப்படுத்தப்பட்டன. ஆனாலும் அதெல்லாம் அந்த மக்களின் அரசியல் விதியை – அரசியல் வெற்றியை – பாதுகாப்பை நிலைப்படுத்தக் கூடிய அளவுக்கு வலுவானவை அல்ல. அதற்கு வலுவான அரசியற்தரப்புகளின் (நாடுகளின்) ஆதரவும் தீர்மானங்களுமே உதவும். 

2011 செப்ரெம்பர் வரை, ஐக்கிய நாடுகள் அவையின் 193நாடுகளில் 127 நாடுகள் (65.8%)பலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை ஓரளவு தூதரக உறவைப் பேணிவருகின்றன. விடுதலைப் பிரகடனம் வழியாகப் பலஸ்தீனம் தன் தலைநகரம் எருசலேம் என்று அறிவித்தாலும், நடைமுறையில் இன்று எருசலேம் இஸ்ரேலின் தலைநகராகவே இஸ்ரேலினால் சொல்லப்படுகிறது.  பன்னாட்டளவில் எழுந்த சர்ச்சை இன்னும் தீர்வைப்  பெறவில்லை. 2012, நவம்பர் 29 ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19தீர்மானத்தை நிறைவேற்றி, பலஸ்தீனத்துக்கு “அமர்வோர்” நிலையிலிருந்து “உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு” (non-member observer state) என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து 138 நாடுகள் வாக்களித்தன. எதிர் வாக்குகள் 09. நடுநிலை வகித்தோர் 41. பலஸ்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என  உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலஸ்தீனத்தின் பதட்டமும் துயரமும் கண்ணீரும் நிற்கவில்லை. அங்கிருந்து மரித்தோரின் பாடல்கள் மட்டுமல்ல, மரித்துக் கொண்டிருப்போரின்,மரிக்கப்போகின்றவர்களின் துயரக் கதைகளும் வந்து கொண்டேயிருக்கப்போகிறது. இதைத் தடுப்பதற்கு இந்த அறிவு யுகத்தில், ஆற்றல் மிக்க மனித சமுதாயத்தில், நாகரீக உலகில் யாருக்கும் வல்லமையில்லை. பதிலாக பல கோமாளித்தனத்தை மட்டும் இந்த உலகம் வெட்கமின்றி, துணிச்சலோடு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. பாருங்கள் ஒரு எளிய உதாரணத்தை – மிக மோசமான வேடிக்கையை. 

பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இலங்கை அரசு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதை உங்களால் நம்பமுடியாதிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்துள்ளது இலங்கை. ‘பலஸ்தீன மக்களின் மாநில உரிமைக்கான நியாயமான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.  இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மக்கள் சமாதானம்,பாதுகாப்பு மற்றும் பரஸ்பர அங்கீகாரத்தின் பக்கபலமாக இலங்கை தனது நிலைப்பாட்டில் நிற்கிறது. அனைத்து விடயங்களும் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்‘ என  இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ 2021 இல்  தெரிவித்திருந்தார். மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ஸ, பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கைச் சபையின் தலைவராகவும் உள்ளார்.

தன்னுடைய நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் உரிமைகளை மறுத்து, அவர்கள் மீது ஒடுக்குமுறையை மேற்கொண்டவாறு இன்னொரு நாட்டில் நடக்கும் ஒடுக்குமுறையை எதிர்த்து,அங்கே நடக்கும் உரிமைக்கான போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நாடகத்தை(சாத்தானின் வேதத்தை)  இந்த உலகம் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu) காஸாவில் நடத்தும் இனப்படுகொலையைப்போன்றதே, முள்ளிவாய்க்காலிலும் வன்னிப் பெருநிலத்திலும் மகிந்த ராஜபக்ஸ நடத்திய இனப்படுகொலைகளும். அப்படியென்றால், எப்படி – எந்த முகத்தோடு – மகிந்த ராஜபக்ஸ பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச முடியும்? அதற்கான தகுதி என்ன?இன்னொரு வேடிக்கை, மகிந்த ராஜபக்ஸவுக்கு ருஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 2010பெப்ரவரி 06 இல் ‘உலக அமைதிக்கான பங்களிப்பு மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் சிறந்த வெற்றி பெற்றமை‘க்காக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறது. போதாதற்கு, கொல்கத்தா, விஸ்வபாரதி பல்கலைக்கழகம், மாண்புமிகு பேராசிரியர் விருதை அவரது மனித உரிமைகள் குறித்த சாதனைகளுக்காக வழங்கியிருக்கிறது. (சிரித்து விடாதீர்கள். இப்படித்தான் உலகத்தில் கோமாளித்தனங்களும் அநீதியும் நடந்து கொண்டிருக்கிறது). நாளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுக்கும் இந்த உலகம் இப்படி விசித்திரமான அலங்காரங்களைச் செய்து வேடிக்கை பார்க்கக் கூடும். நம்மை அவமானப்படுத்தும். 

நம்முடைய துயரங்களையும் விட – நாம் சந்தித்த அவலங்களையும் விடப் பெரியது காஸாவில் நடந்து கொண்டிருப்பவை. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் மீது நடத்தப்படுவதெல்லாம். இது இணையக் காலம் என்பதால் உடனுக்குடன் உலகமெங்கும் இந்தச் சேதிகள், அவலங்கள்,துயரங்கள் ரத்தமும் சதையுமாகப் பகிரப்படுகின்றன. ஆனாலுமென்ன? நம்மிற் பலரையும் இவை பாதிப்பதில்லை. அப்படியே கணநேரச் செய்திகளாகப் பார்த்தும் படித்தும் கடந்து போய் விடுகிறோம். இல்லையென்றால்,விஜிதரனின் இந்த நூல், (மரித்தோர் பாடல்கள்) இந்தப் பணி ஏன் நமது பரப்பில் இன்னும் போதிய கவனம் கொள்ளப்படவில்லை?  முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு,அழிவுக்கு உலகின் முன் நீதியைக் கோருகின்ற நாம், காஸாவின் துயரத்தைப் பொருட்படுத்தத் தவறுகிறோம் என்றால், அது நமது அரசியற் தவறும் அரசியற் புரியாமையுமன்றி, வேறென்ன?

1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும். 

முள்ளிவாய்க்காலைப்போல, ‘பலஸ்தீனம் இன்னும் பற்றியெரியும் நெருப்பாகவே உள்ளது. காஸா பற்றியெரிந்து கொண்டேயிருக்கிறது. அந்த நெருப்பு வெளிச்சமாகத் தெரியாதபடிக்கு மூடப்பட்டுள்ளது. இது வெறும் காஸா அல்லது பலஸ்தீனம் சந்திக்கும் பிரச்சினையல்ல. ஒடுக்கப்படும் மக்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இதுவே நிலை. நிலத்திற்கு நிலம் ஒடுக்குமுறையின் வடிவம் மாறலாம். ஆனால், ஒடுக்குமுறை ஒன்றே. ஆதிக்கச் சக்திகளின் கரங்கள் எல்லை தாண்டுவதைக் காட்டிலும் ஒடுக்குமுறையைச் சந்திக்கும், அதற்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி, தங்களது கைகளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமையே விடுதலைக்கான பெரும்பாதை..‘ என இந்த நூலின் பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பது ஊன்றிக் கவனிக்க வேண்டியது. நம்முடைய துயரமும் நீதிக் கோரிக்கையும் பொதுப்பரப்பில் உணரப்படவேண்டுமானால், ஏற்கப்படவேண்டுமென்றால்,உலகத் துயரத்தோடும் ஏனைய ஒடுக்கப்பட்டோருக்கான நீதியோடும் நாம் இணைந்து நிற்பது அவசியமாகும். அதுவே விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.

காஸா 

வரைபடத்தில் உள்ள ஒரு இடமல்ல

அது 

என்றும் தோற்காத போராட்டத்தின் 

ஆன்மா

ஈழமும்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *