பெண் வேட்பாளர்கள்:  கறிவேப்பிலையும், போடுகாயும் ….!  (வெளிச்சம்: 055)

பெண் வேட்பாளர்கள்:  கறிவேப்பிலையும், போடுகாயும் ….! (வெளிச்சம்: 055)

— அழகு குணசீலன்—

2025 .மே. 06 ம் திகதி உள்ளூராட்சி தேர்தல். கவுண்டவுண் நெருங்குகிறது. இந்த நிலையில்  தமிழ், முஸ்லீம் கட்சிகள்  அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ வேட்பாளர் பட்டியலில் பெண்களின் “பெயர்களை” உள்ளடக்க வேண்டிய கட்டாயத்தில் சேர்த்துக் கொண்டுள்ளன. இது தேர்தல் சட்டத்தின் நிர்ப்பந்தம். ஆனால் தமிழ், முஸ்லீம் கட்சிகள் இந்த பெண் வேட்பாளர்களை பட்டியலிலுக்கு “குஞ்சாரம்” கட்டி களத்தில் இறக்கி சபைகளில் கதிரை பங்கீட்டில்  “வஞ்சகம்” செய்கின்ற  காட்சியே அரங்கேறப்போகிறது. இந்த புறக்கணிப்புக்கு தேர்தல் சட்டமும் ஒத்துழைக்கிறது.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும், பாராளுமன்ற விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவரின் அரசியல் இலக்கை அடையவே உருவாக்கினார். கடந்த காலங்களில் பல திருத்தங்கள் அதில் உள்வாங்கப் பட்டுள்ளபோதும் அடிப்படையில்  உள்ளடக்க படத்தில் மாற்றம் இல்லாமல் “பிறேமை” மட்டும் மாற்றிக் கொள்வதாகவே இது உள்ளது.

1970 பாராளுமன்ற தேர்தலில் தொகுதிவாரியான தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெற்ற வெற்றி தொகுதிவாரி முறையின் குறைபாடு என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் முடிந்த முடிவு. சாதாரண பெரும்பான்மை முறையிலான இந்த தொகுதிவாரி தேர்தல் முறை நாட்டு மக்களின் விகிதாசார விருப்பை பிரதிபலிக்கவில்லை என்பது அவரின் வாதம்.  விகிதாசார  தேர்தல் முறைமை இந்த குறைபாட்டை நீக்கி ஜனநாயகத்தை மீட்கும் என்று அவர் நம்பினார். ஜனநாயகம் மீட்கப்பட்டதோ என்னவோ கதிரைகளை ஆண் அரசியல்வாதிகள் நிரப்பினார்கள். இதற்கு பெயர் ஜனநாயகம்?

தேர்தல் முறைமை ஒன்றில் மாற்றம் செய்யப்படும் போது  பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுவது வழக்கம். இது பன்மைத்துவ சமூககட்டமைப்பு, சமூக, பொருளாதார, அரசியல் வேறுபாட்டு மட்டம்,  பிரதேச அபிவிருத்தி வேறுபாடு, புவியியல் அமைப்பு, சனத்தொகை பரம்பல், பெண், ஆண்  சனத்தொகை அமைப்பு என்பன குறித்தும் நோக்கப்படுவது முக்கியமானது.  இதன் அடிப்படையிலேயே உள்ளூராட்சி வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட வீதம் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் என்ற நிபந்தனை தேர்தல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் தமிழ், முஸ்லீம் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலில் பெண்களை வெற்றி பெறச் செய்வதற்கு மாறாக சட்ட நிபந்தனையை நிறைவு செய்யவே “போடுகாய்களாகவும்”, “கறிவேப்பிலைகளாகவும்” சேர்த்துள்ளனர் என்று கொள்ள வேண்டி உள்ளது.

இந்த உள்ளூராட்சி தேர்தலானது வட்டார (தொகுதி) ரீதியான சாதாரண பெரும்பான்மை முறையிலும், பிரதேசம் தழுவிய மொத்த வாக்கு விகிதாசார  அடிப்படையிலும் நடைபெறவுள்ளது. இன்னும் சொன்னால் உள்ளூராட்சி அமைப்பு ஒன்றுக்கான மொத்த பிரதிநிதிகளில் 60 வீதமானவர்கள்  அவர்கள்  வட்டாரத்தில் தமக்கு பெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் சாதாரண பெரும்பான்மையாலும்,  மிகுதியான 40 வீதமான உறுப்பினர்கள் அவர்களின் கட்சி/ சுயேச்சை குழு பெறும் பிரதேச ரீதியான மொத்த வாக்கு விகிதாசாரத்தினை கொண்டும் தெரிவு செய்யப்படுவார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறுகின்ற கட்சி அள்ளிக்கொண்டு போகும் போனஸ் ஆசன முறை உள்ளூராட்சி தேர்தல் முறையில் இல்லை என்பது முக்கியமான ஒன்று. மறுபக்கத்தில் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபையில் வட்டாரத்தில் எந்த ஒரு ஆசனத்தையும்  வெற்றி பெறாத ஒரு கட்சி/குழு  சகல வட்டாரங்களில் பெற்ற மொத்தவாக்குகள் விகிதாசார அடிப்படையில், 40 வீதத்தில் பங்கிடப்படுகின்ற விகிதாசார பிரதிநிதித்துவத்தை பெற வாய்ப்புண்டு. இது ஓரளவுக்கு எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத ஒரு கட்சிக்கு மொத்த வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் தேசிய பட்டியலுக்கு சமமானது.  இதற்கு எந்த மாவட்டத்திலும் வெற்றி பெறாத ஐக்கிய தேசியக் கட்சியில்  எம்.பி யான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடவும் அரசியல்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த உதாரணம்  இல்லை.

எல்லாத்தேர்தல் முறைகளும் குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவே திருத்தி அமைக்கப்படுகின்றன எனக்கூறப்பட்டாலும், குறைபாடுகள் முழுமையாக களையப்பட்டுள்ளன எனக்கூறுவதற்கு இல்லை. இந்த முறையிலும், கட்சிகளின் சுயமான செயற்பாட்டிலும் அடிப்படையிலும் ஐனநாயக மறுப்பின் மறுபக்கம்  ஒன்றை நாம் காண முடியும். இலங்கையின் பன்மைத்துவ சமூகங்களுக்கு இடையிலான சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் குறித்த சமூகங்களின் சமூக மதிப்பீடு சமமாக இல்லை.

 சமூகக்கட்டமைப்பில் ஆண்,பெண் சமத்துவம் பேசப்படவில்லை. இதனால்தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களுக்கு இடையே சமூக விடுதலை குறித்த ஆர்வம் வேறுபடுகிறது. இது சமூக விஞ்ஞானமான அரசியல் செயற்பாடுகளிலும் சிங்கள பெண்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்தில் உள்ளது. இது  தமிழ்ப்பெண்களை  புலிகள் தலைமுடியையும் கட்டையாக வெட்டி, காற்சட்டையும், சேர்ட்டும் , துப்பாக்கியும் கையில் இருந்தால் அதுதான் பெண்விடுதலை என்ற “சோதனையின்” விளைவும்தான்.  சட்டங்கள் சிங்களப்பெண்களின் சமூக அபிவிருத்தி மட்டத்தில் வைத்து உருவாக்கப்படும் போது  அதற்கும் குறைவான மட்ட சமூக அபிவிருத்தியை கொண்ட இனக்குழுக்களுக்கு அந்த மட்டத்தை அடைய அதிக காலம் தேவைப்படுகிறது. இதற்கு தமிழ்த்தேசிய அடையாள அரசியல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதும் ஒரு காரணம்.

உள்ளூராட்சி சபை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட வீதம் பெண் வேட்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்று கூறுகின்ற தேர்தல் சட்டம் அந்த பங்கீட்டை  உள்ளுராட்சி சபை பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு உறுதிப்படுத்த தவறியுள்ளது. தமிழ்ச் சமூகத்தில் எதிரணி ஆண் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெறுவது எமது  பாரம்பரிய சமூகச் சூழலில் அவ்வளவு இலகுவானதல்ல. அரசியல் கட்சி கொள்கை அடிப்படை மட்டும் அன்றி சமூகத்தில் பெண்களின் அரசியல் பிரவேசம், செயற்பாடு  என்பன குறித்து இருக்கின்ற பாதகமான, இறுக்கமான கருத்துக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.  இதனால் ஆண் வேட்பாளர் ஒருவரை விடவும் பெண் வேட்பாளர் ஒருவர் இரட்டிப்பு அல்லது அதற்கும் கூடிய அரசியல் சுமையை சுமக்க வேண்டியதாகிறது. அந்த வகையில் இங்கு பெண்கள் கட்சிகள்/ சுயேட்சை குழுக்களுக்கு வாக்கு சேகரித்து, தேர்தலில் ‘கறிவேப்பிலை ‘ கதையாக அடிபட்டு போக அதிக வாய்ப்பு உள்ளது. தமிழ்க்கட்சி முக்கியஸ்தர்கள் 40 வீத விகிதாசார முறையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகின்ற போதும், தமிழ்க் கட்சிகளின் கடந்த கால வரலாறு இந்த ‘அரிச்சந்திரன்’ களை நம்ப மறுக்கிறது. தமிழ், முஸ்லீம் கட்சிகளின் கடந்த கால தேசியப்பட்டியல் நியமனங்கள் எமக்கு போடும் வெளிச்சம் இது.

இந்த முறைமையில் உள்ள மற்றொரு குறைபாடு பாராளுமன்ற தேசியப்பட்டியல்  முறையில் கூறப்படும் ஜனநாயகம் பற்றிய குறைபாடு தான். இந்த நாற்பது வீதமானோர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்களுக்கு நியமன அங்கத்துவம் வழங்கும் போது கட்சி உயர்பீடத்தின் சுய விருப்பு, வெறுப்பு தீர்மானம் எடுக்கும்  திறனில் செல்வாக்கு செலுத்துவது  தவிர்க்க முடியாததாக இருக்கப்போகிறது. இதற்கும் தமிழ், முஸ்லீம் கட்சிகளின் கடந்தகால ஒழித்துப்பிடித்து விளையாடும் அரசியல் அனுபவங்களையே காரணம் காட்டவேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் பல பிரதேசசபைகளுக்கான தலைமை வேட்பாளர்கள்/தவிசாளர்கள் கட்சிகளால் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமது பிரதேசத்திற்கான அல்லது நகர, மாநகர சபைக்கான தலைமைப்பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று மக்கள் தீர்மானிக்க முடியாதவாறு கட்சிகளால் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய ஜனநாயக மறுப்புக்கான தீர்வையும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக கட்சியின் பெயரில்/ மத்திய குழு/ தேர்தல் குழு என்ற பெயரில் அந்த சர்வ வல்லமைகளே தீர்மானிக்கப்போகின்றன. எந்த ஒரு சபையிலும் பெண் தவிசாளர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான களநிலையை  தமிழ் கட்சிகள் ஏற்படுத்தவில்லை. சில இடங்களில் தமிழரசுக்கட்சி பட்டியலில் அதிகூடிய வாக்குகளை பெறுபவரே தவிசாளர் என்ற கதையை கட்டிவிட்டுள்ளது. அப்படியானால் வாக்காளர்கள் அதிகமாகவுள்ள பெரியவட்டார வேட்பாளருக்கே இது சாதகமாக அமையும். இதை மொத்த வட்டார வாக்குகளின் வீதாசாரத்தை கொண்டு பார்ப்பதே சரியானதாக அமையும். 

சுதந்திரத்தின் பின்னரான பாராளுமன்ற வரலாற்றில் (1948-1978) பாராளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் எம்.பி.யாக ரங்கநாயகி பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதுவும் தமிழ்த்தேசியம் கொலை செய்த எம்.சி. கனகரெட்ணத்தின் இடத்திற்கு ஒரு சிங்கள, பௌத்த தேசியவாதக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே அவரை நியமித்தது. இதற்கும் மூன்று தசாப்தங்கள் எடுத்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கு மேலான தமிழ்த்தேசிய அரசியல் குறித்து பெருமை பேசும் நம்மவர்களுக்கு இது வெட்கப்படவேண்டிய விடயம்.  சிலவேளை “கனரெட்ணத்தை சுட்டதினால்தான் ரங்கநாயகி எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இது தமிழ்த்தேசிய அரசியல் தந்திரோபாயம்” என்று வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது சிங்கள மக்கள் பத்துப்பெண்களை  பாராளுமன்றம் அனுப்பியிருந்தார்கள். 

அதற்கு பின்னரான காலத்தில்  இராஜமனோகரி புலேந்திரன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தமிழ்த்தேசியத்தால் கைம்பெண்கள் ஆக்கப்பட  அதே ஐக்கிய தேசியக் கட்சியினால் எம்.பி. ஆனார்கள்.  முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் மறைவுக்கு பின்னர் பேரியல் அஷ்ரப் வந்தார். ஜே.வி.பி. அஞ்சான் உம்மாவை  அதற்கு முன்னரே பாராளுமன்றம் அனுப்பியிருந்தது. 

இவ்வளவும் சிங்கள கட்சிகளால் நடந்த பின்னர் தான்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பில்  பத்மினி சிதம்பரநாதன், தங்கேஸ்வரி கதிர்காமர்  ஆகியோரை மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது.   அதுவும் புலிகள் காலத்தில்  நடந்தது. இதற்கு 2004, 2010 வரையும் காத்திருக்க வேண்டியிருந்தது. தேசிய பட்டியலில் 2015 இல் சாந்தி சிறிஸ்கந்தராசா நியமிக்கப்பட்டார். அதற்கு பின்னர்  இரத்தக்கறை படியாத கரங்களுக்கு உரிமை  கோருபவர்களோ, அல்லது  கறைபடிந்த கரங்களைக்கொண்டவர்கள் என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் “முன்னாள்  போராளிகள்” (?) கட்சிகளோ பெண்களுக்கான  தலைமைத்துவ அரசியல் உரிமையை  வழங்க முன்வரவில்லை. 2024 தேர்தலில் ஜே.வி.பி. மூன்று தமிழ்ப்பெண்களை சரோஜா, கலைச்செல்வி, அம்பிகா  ஆகியோரை அதுவும் மலையகம், தென்னிலங்கையில் வெற்றி பெறச்செய்திருக்கிறது. அடுத்த தேர்தலில் யாழ்ப்பாண தமிழிச்சியை ஜே.வி.பி. பாராளுமன்றத்திற்கு அனுப்பும் போதும் இந்த தமிழ் மறவர்கள் தங்கள் கதிரைகளை வெட்கம், ரோசம் இல்லாமல் கட்டிப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள். 

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், இன்று இருக்கின்ற 22  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில்   வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்த்தேசியம், விடுதலை, தேசத்திரட்சி என்று பேசுபவர்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ள பெண்கள்   எவரும் இல்லை. இவர்கள் கூறுகின்ற தேசத்திரட்சி  பெண்கள் இல்லாத ஆண்களின் திரட்சியா? வடக்கு கிழக்கில் தமிழ் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?  சனத்தொகை வீதாசாரத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு ? பெண்களுக்குரிய  பங்கை ஏப்பம் விட்டிருப்பவர்கள் யார்?  இந்த ஏப்ப அரசியலுக்கு உரிமைப்போராட்டம் என்ற ‘முலாம் ‘ வேறு. தமிழ்க் கட்சிகளின் இந்த “போடுகாய்”, “கறிவேப்பிலை” அரசியல்  உள்ளூராட்சி சபைகளிலும் தொடரப்போகிறது.

இந்த அனுபவங்கள் தான் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்ப் பெண்கள்  ‘பயன்படுத்தப்படுகிறார்கள்’ என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது. இந்த நிலையில் தமிழரசுக்கட்சி க்கு 75 வருடம்  என்ற பம்பாத்து வேறு.  ஒரு கட்சியின் அரசியல் வெற்றியை மதிப்பிடுவது அதன் வயதில்  – வருட எண்ணிக்கையில்  என்ற முட்டாள்தனம் இந்த உலகில் தமிழரசுக்கட்சியில் தான் இருக்க முடியும். இதனால்தான் சம்பந்தரின் அரசியல் அடைவை முதுமையை கொண்டு  மதிப்பிட்டார்கள் போலும். அதற்குள் தந்தை செல்வாவின் சிலைக்கு ஏணிவைத்து ஏறி   ஆண்டு தோறும் ‘காதிலே பூவும், பூமாலையும்’. போதாக்குறைக்கு கூடவே  மஞ்சள், சிவப்பு சாறி அணிந்து  கலாச்சாரத்தை காவிக் கொண்டு, கோர்ட் சூட் கணவான்(?) களுக்காக பன்னீர் தெளிக்கவும், சந்தணம், குங்குமம் பகிரவும் , ஆலாத்தி எடுக்கவும் கலாச்சாரத்தை தனியாக சுமக்க பெண்கள் தேவை என்ற விளம்பரம் வேறு……!

 தமிழ்க் கட்சிகளின் – தமிழ்த்தேசியத்தின் இந்த சமூகக் கொடுமையை யாரிட்ட சொல்லி அழ……?