செங்கதிரோன் சிறு கதைகள்

செங்கதிரோன் சிறு கதைகள்

– இரண்டாம் விசுவாமித்திரன்- 

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து நம்மையெல்லாம் திணறடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவற்றில் ஒன்றிரெண்டு தொகுதிகள் பாராட்டும் வகையில் அமைந்து வருவதுமுண்டு.

அவ்வாறான பாராட்டும் வகையில் வரும் சிறுகதைத் தொகுதியொன்றை யாவும் கற்பனையல்ல என்ற பெயரோடு வெளிக் கொண்டு வந்திருக்கிறார் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள்.

கோபாலகிருஸ்ணன் அவர்களோடு எனக்கு ஐம்பத்தைந்து வருட கால பழுதுபடா நட்பு இருந்து வருகின்றது.

புலமைப் பரிசில் பெற்ற மாணவர்களின் புனித பூமி என்று விசுவாசிக்கப்படுகின்ற வந்தாறுமூலை மத்திய கல்லூரியில்தான் நானும் அவரும் சந்தித்துக் கொண்டோம்.

அந்தக் கல்லூரி விடுதியில் உண்டு உடுத்து படித்து படுத்து எங்கள் காலம் கழிந்தது.

அங்கேதான் மாலைப் பொழுதிலும் மற்றைய சில பொழுதுகளிலும் இலக்கியத்தை பேசவும் எழுதவும் பயிற்சி எடுத்தோம். 

முதுமையடையாமல் இளமையோடிருக்கும் அந்த நட்பு இன்றுவரை அடம்பன் கொடியாக படர்ந்தும் அடர்ந்தும் வருகிறது.

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் இலக்கியம்,இலக்கியச் செயற்பாடுகள், அரசியல்,அரசியற் செயற்பாடுகள் என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இயங்கி வருபவர்.

இலக்கியத்தில் கவிதை,கட்டுரை, சிறுகதை,நாவல்,நூல் மதிப்பீடு,ஆய்வு, சொற்பொழிவு என்று பல தளங்களில் தன்னைத் தொடராக ஈடுபடுத்தி வருபவர். 

ஏற்கனவே அரசியல் தொடர்பில் ஒரு நூலையும் கவிதையில் ஒரு குறுங்காவியத்தையும் உருவகக் கதைத் தொகுதி ஒன்றையும் எழுதி வெளியிட்டவர்.  இன்று சிறுகதை தொடர்பில் இந்தத் தொகுதியை வெளியிடுகிறார். 

சிறுகதை தொடர்பில் அவரின் செயற்பாட்டுத் தளம் எது?

நண்பர் கோபாலகிருஸ்ணன் சிறுகதை தொடர்பான தனது கருத்தை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையில் அக்டோபர் 2016 இல் கடும் தொனியில் விளக்கி இருக்கிறார்.

நவீனத்துவம் பின்நவீனத்துவம் யதார்த்த வாதம் கட்டுடைப்புவாதம் என்றெல்லாம் கலை இலக்கிய கோட்பாடுகள் குறித்த கருத்தியல்கள்  மேற்குலக நாடுகளில்  எழுந்து தமிழ்நாட்டுக்கு தொற்று முன்பாகவே ஒரு முற்போக்கான கதையை பாரதி 1905 இலே பின்னியிருக்கிறார். 

எனவே நல்ல முற்போக்கான சிறுகதையொன்றைப் படைப்பதற்கு எந்த இசம்களும் தேவையில்லை. எந்த வாதங்களும் அவசியமில்லை.

மனித நியாயமும் அந்த நியாயத்தை மனதார விசுவாசிக்கின்ற மனிதநேய உள்ளமும் அந்த நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தர்மா வேஷமும் அந்த வெளிப்பாட்டை இலக்கியமாக்கும் எத்தனமும் அதற்கேற்ற மொழிப் புலமையும் கற்பனை வளமும் படைப்பாற்றலும் இருந்து விட்டால் ஒரு படைப்பாளி நோக்காடு உறுவதும் அந்த நோக்காடு சிறந்த ஒரு இலக்கியத்தை பிரசவிக்கும் என்பதும் தானாகவே நிகழும். இதற்கு எந்த மேற்கு நாட்டுக் கலை இலக்கியக் கோட்பாடுகளும் வழிகாட்டல்களும் தேவை இல்லை என்று கூறுகிறார்.

மிகவும் தெளிவான சிறுகதை தொடர்பான அவரின் கருத்து அது.

2016இல் தெரிவித்த இந்தக் கருத்து எப்படி தொகுதியில் அதற்கு முன்னர் எழுதிய கதைகளுக்கும் பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.

கோபாலகிருஸ்ணன் 2008 இல் செங்கதிர் என்ற சஞ்சிகை தொடங்கும்போதே இந்தக் கருத்துடன் இருந்தார் 

இத்தொகுதியின் முதலாவது கதை 2008 இல் எழுதப்பட்ட கதையே. ஏனைய கதைகள் அதற்குப் பின்னர் எழுதியவைதான்

எனவே இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சிறுகதை பற்றிய பலமான அடித்தளத்தில் நின்றுதான் எழுதியுள்ளார் என்பதை மனதில் நாம் இருத்திக் கொள்ள வேண்டும். அவரின் சிறுகதைகள் பற்றி திறன் நோக்குப் பார்வைக்கு அது உதவும்.

இன்னுமொரு விடயம் 2008க்கு  முன்னரும் அவர் சிறுகதைகள் எழுதினார் என்பதும் அவ்வாறான கதைகள் விடயத்திலும்  இதே கொள்கையுடன் அவர் இருந்தாரா என்ற கேள்வியும் ஆகும்.

இலங்கையில் நவீனத்துவமும் ஏனைய கோட்பாடுகளும் தொடங்குமுன்னரே அவர் சிறுகதைகள் எழுதினார். நமது நாட்டில் முற்போக்குவாதம் சடைத் தெழும்பிய 1963இல் முற்போக்குவாதம் பற்றிய அறிவு சிறிதும் இன்றி வந்தாறுமூலை மத்திய கல்லூரியின் 7ம் வகுப்பு மாணவனாக இருந்து கடமை என்ற கதையை எழுதினார். இது பற்றிய அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தை என்னீடு என்ற பகுதியில் நீங்கள் வாசிக்கலாம்

அவரின் முதலாவது சிறுகதை இதுதான்.  

கதைநாயகனின் தாய் சுகவீனமுற்று படுக்கையில் இருக்கிறாள்.வறுமை காரணமாக  மருந்து வாங்கப் பணமில்லை. பஸ் நிலையத்தில் படுக்கையில் இருந்த ஒரு பிச்சைக்காரனின் பணத்தைத் திருடி மருந்து வாங்கி தாயிடம் சென்ற பொழுது அவள் மரணம் அடைந்திருந்தாள்.

அதிரடியான கதை முடிவு. அந்த கதை அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. ஆயினும் அந்தக் கதையை இன்று பிரசுரித்தாலும் சிறப்பான ஒரு கதையென்று  இலக்கிய  உலகம் அதனை வரவு  வைக்கும் என்று திடமாக நம்பலாம். அப்படிப்பட்ட கதை அது.

நண்பர் செங்கதிரோன் எழுதிய முதலாவது கதையே இத்தனை சிறப்பு வாய்ந்த கதையா? என்று நாங்கள் வியக்கிறோம்.

வறுமையில் வாடும் ஒருவனின் பரிதாப நிலையை தெட்டத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த கதை.

சமூக நேசத்திற்கான ஊடகமாகவே இக்கதையை அவர் எழுதியுள்ளார்.

நோய்க்கு மருந்து தர அரசு இல்லையென்பதையும் நோய் தீர்க்கப் பணம் தேவையென்பதையும்

அவன் குடும்பம் பிச்சைக்காரனின் பணத்தைத் திருடும் அளவுக்கு வறுமையில் வாடியது என்பதையும் கூறி சமூக விமர்சனத்துக்கான களமாகவே இக்கதையை செங்கதிரோன் எழுதியுள்ளார்.

7ம் வகுப்புப் பயிலும் காலத்திலேயே சிறுகதைபற்றிய தேற்றத்தை அவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அவர்வசம் அக்கதை இல்லாததால் இத்தொகுப்பில் அக்கதை உள்ளடக்கப் படவில்லை என்பது துரதிஸ்டமாகும்.

அவரது முதல் கதைபோல இன்று அவர் தொகுதியில் தந்திருக்கும் 13 கதைகளும் சிறப்பாக அமைந்திருக்கும் என்ற  ஆவலோடு கதைகளை வாசித்தேன். 

இந்த சிறுகதைத் தொகுதியின் 

முதலாவது கதை குடை கவனம் என்ற தலைப்போடு வருகிறது.

குடை போன்ற பொருட்களை இலகுவில் மறந்து விடுவது நமது வாழ்நாள் அநுபவமாகும். அந்த அநுபவத்தை  கதையாக்கி வந்துள்ளார் செங்கதிரோன்.

சிறிய விடயங்களையும் பேசுபொருளாக்கி கதைகளை ஆக்கும் வல்லமை செங்கதிரோனின் தனித்திறமை என்பதை குடை கவனம் என்ற இந்தக் கதை ருசுப்படுத்துகின்றது.  

ஊர் மானம்,துரோகி,அங்கிருந்து வந்தவர்கள்,சகோதரத்துவம் ஆகியநான்கு கதைகளைத் தவிர ஏனைய கதைகள் இவ்வாறான சிறிய பேசுபொருளோடுதான் தொகுதியில் உலா வருகின்றன. 

ஒரு கதையின் பேசுபொருள் எத்தகைய சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கதைக்குள் அது எதனை நிகழ்த்துகிறது என்பதுதான் முக்கியம் ஆகும்.

குடை கவனம் என்ற  கதையில் குசும்புத்தனமானதும்தான் வாழ்க்கை என்று அவர் எழுதி இருக்கிறார்.

ஊர்மானம் என்ற கதை தொகுதியில் முக்கியமானது.

செல்லையாவின் மூத்தமகள் முஸ்லிம் வாலிபனை இரகசியமாகத் திருமணம் செய்ததால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய கதை.

கலப்புமணம் பற்றி பல கதைகள் நமக்குக் கிடைத்துள்ளன. 

தமிழ் இலக்கியப் பரப்பின் முதலாவது சிறுகதை வவேசு ஐயர் எழுதிய  குளத்தங்கரை அரசமரம் என்று சிறு கதைவரலாறு தொடங்கப்படுவதுண்டு. அக்கதை 1915 களில் எழுதப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னரே சுப்ரமணிய பாரதியார் 1905இல் சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையில் துளசியாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் கதை என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினார். அந்தக் கதை கலப்புமணம் பற்றிய ஒரு கதை. இந்துப் பெண் ஒருத்தியை முஸ்லிம் வாலிபன் திருமணம் செய்கிறான்.

ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்ததாலும் மாற்றுமத்தைச் சேர்ந்த ஒருவனை திருமணம் செய்ததாலும் ஊர்மானம் போய்விட்டதாக இளைஞர்கள் குழம்புகிறார்கள் என்று செங்கதிரோனின் கதை பேசுகிறது.

உண்மையில் இங்கு ஊர்மானம் சம்பந்தப்படுகிறதா?

ஆத்திரமடைந்த இளைஞர்களைப் பார்த்து என்னிடம் இன்னும் நான்கு குமர்ப்பிள்ளைகள் உள்ளனர். அவர்களை நீங்கள் திருமணம் செய்ய முன்வருவீர்களா என்று  செல்லையா கேட்கிறார். இளைஞர்கள் அங்கிருந்து நழுவிச் சென்று விடுகின்றனர். 

இப்போது ஊர்மானம் எங்கே?

ஏழைப் பிள்ளைகளை சீதனம் பெறாமல் திருமணம் செய்ய இளைஞர்கள் மறுக்கும் நிலையில் கலப்புமணம் என்பது தவிர்க்க முடியாதது.

ஒரு சமூகத்தின் வேண்டப்படாத முகத்தை இந்த கதையில் நாங்கள் காணலாம். உதவாமல் இருந்து கொண்டு உபத்திரவம் செய்பவர்களின் முகத்தில் காறித் துப்புகிறது ஊர்மானம் என்ற கதை. 

இனங்களுக்கிடையே நல்லுறவு என்பதுபற்றி துரோகி மற்றும் சகோதரத்துவம் என இரண்டு கதைகள் உள்ளன.

இனக்கலவரம் ஒன்றின்போது  தன்னோடு வேலை செய்த சிங்களவர்களை பத்திரமாக அனுப்பி வைக்கும் தமிழ் மேலதிகாரியை துரோகியாகப் பார்க்கும்  இன்னுமொரு மேலதிகாரி பற்றிய கதை.

இனக்கலவரம் ஒன்றின்போது மாற்று இனத்தவரை காப்பாற்றி அனுப்புபவன் துரோகியா? அல்லது தம் இனத்துக்குள்ளே பிரதேசவாதம் பேசுபவன் துரோகியா?என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்கள் சுமந்து கொள்ளலாம்.

மற்றொரு கதை சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயர ஆயத்தமானபோது பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்தாய் ஒருவருக்கு முஸ்லிம் இளைஞன் ஒருவன்  அடைக்கலம் கொடுக்க முன்வரும் கதை.

இரு கதைகளும்  இன நல்லிணக்கத்தை

வேண்டி நிற்கும் கதைகள்- 

சிங்களவர்களைப் பாதுகாத்து அனுப்புகிறது ஒரு கதை. முஸ்லிம் பக்கமிருந்து தமிழர்களுக்கு உதவ முன்வருகிறது இன்னுமொரு கதை. 

நமது நாட்டில் இன்றைய நிலையில் இனங்களுக்கிடையிலான உறவின் முக்கியத்துவம் எவ்வளவு என்பது நமக்குத் தெரியும். 

இலக்கியப் படைப்புகளின் ஊடாக இன்றைய சமூகத்தின் சூழ்நிலையை விளங்கிக்கொள்ள இது போன்ற கதைகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. 

பேய் பிசாசு ஆவி ஆத்மா போன்ற விடயங்களைப் பேசும் மூன்று கதைகள் இத்தொகுதியில் உள்ளன.

கூடுவிட்டு என்பது ஒரு கதை. யாவும் கற்பனை அல்ல என்பது மற்றொரு கதை. அந்த ஏவறைச் சத்தம் என்பது மூன்றாவது கதை.

யாவும் கற்பனை அல்ல என்ற கதையிலே ஒரு ஆவி வருகை தந்து உதவி செய்கின்றது.

கதையின் நாயகனும் சாரதியும் காட்டு வழியே இரவிலே வந்து கொண்டிருக்கும் பொழுது  வாகனம் பழுதடைந்து நின்றுவிடுகின்றது. திருத்தம் மேற்கொள்ள முடியாத நிலையில் இருவருமாக வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்லுகின்றனர். அவர்களுக்கு உதவியாக அந்த இருட்டில் இன்னும் ஒருவர் வந்து உதவி செய்கிறார். அவர் யார் ? அது பேய். யாருடைய ஆவி அது ?

அந்த ஏவறைச் சத்தம் என்ற மற்றொரு கதையில் இறந்தவரின் ஆத்மா வருகிறது.

ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவருக்கான எட்டாம் நாள் சடங்கில் படையல்  அல்லது மடை வைத்தல் இந்துக்களின் வழமை.

படையல் செய்து அறையில் வைத்து கதவுகளை மூடி விளக்குகளை அணைத்துவிட்டு வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது  மரணித்தவரின் ஆத்மா அங்கு வந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாக ஒரு ஐதீகம் உண்டு. இந்தக் கதை அப்படிப்பட்ட நிகழ்வையே பேசுகின்றது. 

குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வாசலில் வெளியில் இருட்டில் இருக்கிறார்கள். கதைசொல்லி இவற்றில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தன்னுடைய மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியில் தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

சற்று நேரத்தில் கதை சொல்லியின்

காதுகளில் ஒரு ஏவறைச் சத்தம் கேட்கிறது. 

வழமையாக அவனது தாய் சாப்பிட்ட பின்னர் விடும் ஏவறைச் சத்தம் அது. 

அதே சத்தம். அதே ஒலி.  அதே ஒழுங்கு. அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அருகில் இருந்தவர்களிடம் ஏவறைச் சத்தம் ஒன்று கேட்டதா என்று வினவுகிறான். எவரும் இல்லை என்று சொல்கிறார்கள். அத்துடன் கதை முடிகிறது

இந்தக்கதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இவ்வாறான பல கதைகளை நாம் படித்திருக்கிறோம். ஆனாலும் இதுபற்றிய எந்த நம்பிக்கையும் இல்லாத இந்தக் கதை சொல்லி அந்த ஏவுறைச் சத்தம் ஒன்றின் மூலம் இறந்தவரின் ஆத்மா வருவதை எண்பிக்கின்றார். அதுவே இந்தக் கதையின் முடிவின் திரும்பு புள்ளியாகும்.

இந்த விடயத்தில் மூன்றாவது கதை கூடு விட்டு என்பதாகும். உடலில் இருந்த உயிர் வேறாகி இன்னு மொருவரின் உயிரற்ற உடலுக்குள் சென்று இயங்குவதை கூடுபாய்தல் என்று சொல்லுவார்கள். 

பரகாயா பிரவேசம் என்று இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு..

சில யோகா கலாசார நிலையங்களில் கூடு விட்டு கூடு பாயும் வழிமுறை பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்

திருமூலர் என்ற சித்தர் மூன்று தடவைகள் கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக அவரின் வரலாறு கூறுகின்றது

ஆனால் செங்கதிரோனின் கதை சற்று வித்தியாசமானது.

கூடு விட்டு என்ற தலைப்பில் வரும் கதையில் உயிர் வேறாகி வெளியே வந்து காட்சியொன்றினைப்பார்த்து விட்டு மீண்டும் கட்டிலில் கிடக்கும் பழைய உடலுக்குள் வந்து புகுந்து விடுகின்றது

கூடுவிட்டு கூடு பாய்தல் என்று கூறாமல் கூடு விட்டு என்று மட்டும் தலைப்பு வந்ததோடு ஒரு உடலில் இருந்து இன்னும் ஒரு உடலுக்குள் ஆவி செல்லவில்லை என்றும் வருகிறது.

உடலில் இருந்து உயிர் வெளியேறிச் சென்று மீண்டும் உயிருக்குள் வரும் புதிய அணுகுமுறை.

யாவும் கற்பனையல்ல என்ற பேய்பற்றிய கதையும் அந்த ஏவறைச் சத்தம் என்ற ஆத்மாபற்றிய கதையும் கூடு விட்டு என்னும் இன்னுமொரு கதையும் மூன்று வெவ்வேறான தளத்தில் நின்று கதை சொல்லுகின்றன.

ஜாவர் சீதாராமன் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் பூதங் களோடு சம்பந்தப்பட்டது. 

விக்கிரமாதித்தன் கதையின் சில அங்கங்களிலும் அம்புலி மாமா பத்திரிகை கதைகளிலும் பல மாயாவாத கதைகளை நாங்கள் வாசித்திருக்கிறோம்

சமகாலத்தில் சிறுகதைப்பரப்பில் மாயாவாத கற்பனைக் கதைகள் என்றொரு பகுதியும் இடம் பிடித்து வருகின்றன. 

இவற்றிலிருந்தெல்லாம் செங்கதிரோன் வேறுபடுகிறார்.

தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகின்ற விடயத்தில் அவை சரி என்று நிறுவும் பாங்கினால் 

கதைசொல்லி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார்.

கரப்பத்தான் பூச்சி என்றொரு சின்னக் கதை வருகிறது.

குசினியிலும் குளியலறையிலும் காணப்படும் கரப்பான்பூச்சிகளை அடித்துக் கொல்லும் கதைசொல்லி உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கரப்பத்தான்பூச்சிகளை அடிக்க வரும் பருவம் அடையாத தனது சின்ன மகனை கரப்பான்பூச்சிகளை அடிக்க வேண்டாம் பாவம் என்று  தடுத்து விடுகிறார்.

உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவற்றுக்கு இடையூறு விளைவிப்பது பாவம் என்ற கருத்தியலை மகாபாரதக் கதைக்குள் சென்று பாண்டுவின் கதையை நமக்கு சாட்சியமாகக் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

உடலுறவு என்பது ஒரு உயிரியின் உடல் தேவை. அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விழுமியம் சார்ந்தது. அதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாங்கில் நமக்குச் சொல்கிறார் கதை சொல்லி. 

மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டுவந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை இன்று உயிருடன் இருந்திருந்தால் இக்கதை எழுதியமைக்காக செங்கதிரோனை வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருப்பார்.

தொகுதிக்கு முடிசூடி மகிழ்கிறது கரப்பத்தான் பூச்சி கதை. 

லயன் என்ற ஒரு கதை தொகுதியில் உள்ளது. லயன் என்பது குடிகாரனான தம்பிராசாவின் ஒரு வளர்ப்பு நாய்.அவன் ஒரு குடிகாரன்தானே தவிர மற்றவர்களுக்கு தேவை உணர்ந்து உதவும் மனப்பாங்கு கொண்டவன். அவனை மனைவி காத்திருப்பது போலவே லயனும் அவனுக்காகக் காத்திருக்கும்.  வழமைபோல் மது போதையில் வீட்டுக்கு வரும் அவன் அன்றைய தினம் நள்ளிரவு தாண்டியும் வரவில்லை.  அவனை தேடி லயனும் அவனின் மனைவியும் உறவினர்களும் வீதி வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது மெயின் வீதியிலே குடிபோதையில் மயங்கி விழுந்து கிடக்கிறான்.அப்பொழுது வேகமாக ஒரு வாகனம் வந்து அவனை மோத இருந்த கணத்தில் லயன் முன்னால் பாய்ந்து  வாகனத்தில் மோதி சக்கரத்தில் நசுங்கி  தன் உயிரை எஜமானுக்காக தானே போக்கிக்கொண்டது. ஒரு உயிர் போய்விட்டது. தம்பிராசா தப்பி விட்டான். பாவம் லயன் என்று கதை முடிகிறது. 

நன்றியுள்ள விசுவாசம் பற்றி கதை சொல்லி இந்த கதையின் மூலம்  நமக்கு பாடம் நடத்துகின்றார். 

இது போன்ற சிறு பிராணிகளை முன் வைத்து கதைகள் சொல்லும் வழமை பெரும்பாலும் வெளிநாட்டவர்களிடமே உண்டு. நம்மவர்கள் சிலரும் சில கதைகளை எழுதி இருக்கின்றனர். அவர்களில் கோபாலகிருஸ்ணனும் ஒருவர். 

ஆறறிவு படைத்த தனது எஜமானின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஐந்தறிவு படைத்த பிராணியான நாய் தன் உயிரைப் பணயம் வைக்கும் கதை. 

நெஞ்சை நெகிழ வைக்கிறது லயன்.

துறவு, ராஸ்கல் ஆகிய இரண்டு கதைகளும் சமாந்தரத் தன்மை கொண்ட கதைகள். தெளிவான சிந்தனையோடும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பக்குவத்தோடும் கதாயகன்  தனது வாழ்வை அமைத்துக் கொண்டவன். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளை  சந்தேகக் கண்கொண்டு சமூகம்  பார்க்கிறது. 

ஏழைக் கிழப்பெண் ஒருத்தி தன் சம்பாத்தியத்தினை பஸ்ஸினுள் திருடனிடம் பறிகொடுத்து அழும்போது திருடு போனபணத்தை அவளுக்குக் கொடுத்து  உதவுகிறான் கதையின் நாயகன்.

உன்னை ஏமாற்றி அவள் பணம் பெற்றுக் கொண்டாள் என்று பஸ்ஸால் இறங்கி வந்து சக நண்பன் கூறியபோது அதனை மறுத்து அவனுக்கு ஏசுகிறான் நமது நாயகன்.

அவ்வாறே ராஸ்கல் என்ற கதையும் நகர் கிறது. மாலை ஐந்து மணிக்குப் பின்னரான ஒரு அவதிப் பொழுதில் வெளியூரில் இருந்து வந்த ஒரு பெண் ஆஸ்பத்திரிக்குச் சென்று தன்னுடைய தாயைப் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  அவளின் நிலைமையை அவதானித்து அழைத்து விசாரித்து ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி காரியத்தை முடித்து நேரகாலத்தோடு வீடு செல்ல உதவுகிறான்.

அவளுக்கு பணம் கொடுத்து உதவி செய்தபொழுது அதனை வித்தியாசக் கண்கொண்டு பார்த்த ஒருவனை ராஸ்கல் என்று ஏசி அவனது கன்னத்தில் அறைகின்றான்.

இன்றைய சமூகத்தின் நிலையை ஒலிபரப்புச் செய்கிறது இந்தக் கதைகள். சந்தேகப் பார்வை கொண்டோரை

எட்டி உதைக்கிறது இந்தக் கதைகள். 

அங்கிருந்து வந்தவர்கள் என்ற கதை தமிழ் மக்களின் இயக்க அரசியலைப் பேசுகிறது.

ஒவ்வொரு இயக்கங்களினதும் பின்னால் மறைதேற்றம் ஒன்று உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.

ஒன்று மறியாத ஒரு குழந்தை தன்னை நெஞ்சில் அணைத்து தோளில் போட்டு வளர்த்தவர் யார் என்பதை மட்டும் அறியும் என்று குழந்தை உளவியல் பற்றிச் சுழலும் கதை.

இவ்வாறாக தொகுதியின் ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகைத்து

புதுமைப்பித்தன் நவீன சிறுகதையின் முன்னோடி. அவன் பொன்னகரம் என்ற கதையை இரண்டு பக்கங்களிலும் துன்பக்கேணி என்ற கதையை முப்பத்தி இரண்டு பக்கங்களிலும் எழுதினான். எழுத்து விஞ்ஞானி எஸ்.பொன்னுத்துரை தனது தேர் என்ற கதையை நீளமாகவும் சுவை என்ற கதையை 90 சொற்களிலும் எழுதினார்.  எனவே ஒரு சிறுகதையின் நீளம் முக்கியமானதல்ல. தேவையின் அளவைப் பொறுத்தது.

இத்தொகுதியில் எல்லா கதைகளுமே  சிறிய கதைகள்.தேவையும் அதுதான் என்பதால் சோம்பல் முறிக்காமல்

சுமையாக இருக்காமல் தொய்வுகள் எதுவுமின்றி கதை இனிதே

நகர்கிறது. இது தொகுதியின் சிறப்பு. 

தொகுதியின் இன்னுமொரு சிறப்பு கதைக்கான பொருள் சாதாரண நாளாந்த விடயங்கள் என்பது.

அணிந்துரை வழங்கிய பேரா. செ.யோகராசாவும் இத்தொகுதியின் நான்கு கதைகள் தவிர ஏனைய கதைகள் சாதாரண விடயங்களைப் பேசுவதாக சொல்லி உள்ளார். 

இதுவும் சிறுகதைப் பொருளா?  என மூக்கில் விரல் வைத்துப் பார்க்கும் விடயத்தை சிறுகதையின் பேசுபொருளாக்கியுள்ளார் செங்கதிரோன்.

புலம் பெயர் வாழ்வு, போர்க்கால அநுபவம்,பெண்ணிலைவாதம்,சாதி ஒழிப்பு, சீதனக் கொடுமை, பாலுணர் ச்சிச் சிக்கல் என்று கதைக்குக் கருதேடி அலைந்து திரியாமல் நமது கைக்கெட்டிய தூரத்தில் இருந்து  கதையின் பேசுபொருளைத் தேடியெடுத்து கோர்வையாக்கி இத்தொகுதியை நமக்குத் தந்துள்ளார்

செங்கதிரோன்.

கதையில் ஏதாவது அகலிப்பை நிகழ்த்துமாயின் அதுவே சிறுகதைக்கான பேசுபொருளேதவிர சாதாரணம், விசேசம் என்பதெல்லாம் போலியான கோட்பாடுகளாகும்.

இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளினதும் பேசுபொருள் கதைக்குள் புதிது சமைக்கின்றது.

அதன்மூலம் சமகால இலக்கியச்

செல்நெறியில் இருந்து விலகி செங்கதிரோன் வேறுபட்டு நிற்கிறார்.

பிறிதொரு சிறப்பம்சம் உவமைகளை கதைகளில் நுட்பத்துடன் கையாள்வதாகும். 

தவளை பிடிக்க என்று வீட்டுக்குள் நுழைந்த சாரைப்பாம்பு மண்ணெண்ணெய் ஊற்றியவுடன் விரைவாக நழுவி வெளியே செல்வது போல இளைஞர் கூட்டத்தினர் நழுவிச் சென்றனர் என்று ஊர்மானம் கதையிலும்

தூண்டிலில் அகப்பட்ட மீனை நீரிலிருந்து வெளியே தரையில் தூக்கிப் போட்ட மாதிரி துடிப்பு என்று அங்கிருந்து வந்தவர்கள் என்ற கதையிலும்

அம்பறாத் தூணியில் அம்புகளை அடுக்கினாற்போல பனங்கிழங்குகள் கட்டுக் கட்டாய் பெட்டிக்குள் அடுக்கப்பட்டிருந்தன என்று துறவு என்ற கதையிலும்

புல்லில் பனித்துளிபோல் என் கண்களில் நீர் துளிர்த்தது என்று அந்த ஏவறைச் சத்தம் என்ற கதையிலும்

நன்றாக வெயிலில் காய்ந்த பின் காற்று வழக்கத்தைப் பார்த்து ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்தால் புஸ் என்று முழுவதும் பற்றியெரியும் வேகத்தில் ஒலிபெருக்கி அறிவித்தல் காட்டுத்தீயாய்ப் பரவியது என்று சகோதரத்துவம்  கதையிலும்

இவ்வாறாக  தொகுதி முழுவதும் உவமைகளும் படிமங்களும் ஆமைகளாக நகர்ந்தும் முயல்களாகத் துள்ளி ஓடியும் திரிவதை அவதானிக்கலாம்.

சிறப்பான மொழிக் கட்டமைப்பும் தொகுதியைச் சிறப்பிக்கின்றது.

பிரதேசமொழிப் பயன்பாட்டை நளினமாகக் கையாண்டமை பற்றி

பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

எங்கடையாக்கள வெலிக்கடையில சீனாக்கள் சாக்கொண்டு போட்டினம். நீர் என்னென்டாக் காணும் அவயளக்  காப்பாத்தி நேற்று அவயன்ர  ஊருக்கு அனுப்பிப் போட்டெல்லோ வாறீர். நீரெல்லாம் தமிழினத் துரோகி ஐசே

என்று யாழ்ப்பாணப் பேச்சுவழக்கையும் 

அம்மாவ நான் எங்கட ஊட்ட கூட்டிப் போய் முஸ்லிம் பகுதிக்குள்ள பாதுகாப்பா வச்சிருக்கன். பொறகு நிலமய பாத்து நடந்துக்கலாம். நீங்க  எல்லாரும் கோமாரிக்குப் போக ஆயத்தப் படுத்துங்க என்று பொத்துவில் முஸ்லிம் இளைஞன் பேசுவதையும்

நானும் ரெண்டு நாளா ஊர்ல இல்ல மனே.மல்லிகத் தீவுக்கு வட்டைக்குள்ள போய்த்தன்.வாற வழில இவன் வண்ணார வைரண்ட பொஞ்சாதிதான் என்னவோ சொன்னாள்  என்று அம்பாரைத் தமிழும் 

இன்னும் மட்டக்களப்புத் தமிழும் என்று மாறி மாறி  பிரதேச மொழிப் பயன்பாட்டை துல்லியமாக  வெளிக் கொணரும் மொழிக் கட்டமைப்பை  செங்கதிரோன் வல்லமையோடு கையாண்டுள்ளார்.

இந்தத் தொகுதியில் குறை சொல்ல ஒன்றுமே இல்லையா  என்று என்னைப் பார்க்கிறீர்கள். 

விவரணப் பாங்கிலான சில விபரிப்புகள்  நேரத்தை வீணாக்குகின்றது.

எடுத்துக்காட்டாக சகோதரத்துவம் என்ற

கதையில் சுதா யார் என்று வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

இது குறைபாடு அல்ல.  சுருக்கமாக விளக்கின் சிறப்பாக இருந்திருக்கும் என்ற சொல்வதுதான்.

 .

மிடுக்கான தலைப்பும் அதிரடியான  முடிப்பும்  கையடக்கமான கதை அளவும்

வசீகரமான தமிழ் நடையும் வாலாயமான கதை உத்தியும்  வண்ணத்துக்கொன்றும் வகைக் கொன்றுமாக கதைப்பாங்கும்

என்று  கைதட்டல் வாங்குகிறது “யாவும் கற்பனையல்ல” என்ற சிறுகதைத் தொகுதி .