எல்லாளனாக உருவெடுத்து, அரங்கை அதிரவைத்த பேராசிரியர் மௌனகுரு!

எல்லாளனாக உருவெடுத்து, அரங்கை அதிரவைத்த பேராசிரியர் மௌனகுரு!

— மௌனகுரு —

ஆரம்பம்

 ஒரு மாதத்திற்கு முன்னால் ஒரு பின்னேரப் பொழுதில் எனது இருப்பிடத்திற்கு அருகே இருந்த அழகான அமைதியான “துவாரகா” என பெயரிய  அடக்கமான ரெஸ்டாரண்டில் என்னைச் சந்திக்கிறார் திவ்யா சுஜேன்.

அபிநய சேத்திர ஆடலக நிறுவனர் அவர். இருவரும் இணைந்து ஏலவே   சில ஆற்றுகைகள் நிகழ்த்தியும் உள்ளோம். புதுமை படைப்பதில் நாட்டம் உள்ளவர். அவரோடு நான் இணைந்த காரணங்களுள்  அதுவும் ஒன்று.

காத்திருப்பு

ரவி பந்துக்காகக் காத்திருக்கிறோம். 

ரவிபந்து சிங்கள நடனத்தை 1940 களில் பலே ஆக்கிய சித்திர சேனாவின் தலை மாணவர். 

மிகச்சிறந்த நாட்டிய கலைஞர்.

சிறிது நேரத்தில் ரவி பந்துவும் வந்து விடுகிறார்.

தான் தயாரிக்க இருக்கும் கதிரமலைக் கோவே கந்தவேளே என்ற நாட்டிய நாடகம் பற்றியும் அதில் தான் புகுத்தவுள்ள பல்வேறு நடன வகைகள் பற்றியும் உரையாடுகிறார் திவ்யா.

அவரது அந்தப் புதுமை நோக்கும் ஆர்வமும் துணிவும் எங்களுக்குப் பிடித்துப்போய்  விடுகின்றன.

ஒன்றரை மணி நேரம் தன் நாடகத்திற்கான முழு இசையையும் எங்களுக்குப் போட்டுக் காட்டுகிறார் திவ்யா. 

இசை

இசை எங்களை மிகவும் கவர்கிறது. அற்புதமான  இசை.

நானும் ரவிபந்துவும் ரசித்து ரசித்துக் கேட்கிறோம். எங்கள் கை கால்கள் எங்களை அறியாமலேயே அசைகின்றன. ரெஸ்டாரன்ட் பையன்கள் எங்களை வினோதமாக பார்க்கிறார்கள். இசைக்கு மூலக்கர்த்தா ராஜ்குமார் பாரதி. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இசைக் கோலம் அது.முக்கியமாக  கைமுனுவும்  எல்லாளனும் மோதும் கட்ட இசையைப் போடுகிறார். 

ராஜ்குமார் பாரதியின்  “ஜதி” கூறும் முறை  ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் எடுத்தும் படுத்தும் நீட்டியும் சுருக்கியும் அழுத்தியும் நாடக பாணியில் ஜதிக்கோர்வைகளை  உச்சரித்த விதம் அப்போதே  எழுந்து ஆட வேண்டும் போல உணர்வு தருகிறது. அவரது கனதியான குரலில்  அற்புதமான  ஜதி கூறல்

 இசைக்கு உயிர்தரல்

“இந்த இசைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்,  இசையை காட்சிகள் ஆக்கிக் கொண்டிருக்கிறேன், சில முக்கிய நடனக் கலைஞர்களிடம் பொறுப்பை  ஒப்படைத்து இருக்கிறேன். அவர்கள் அதில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிக்  கலந்துகொள்வோர் பட்டியலைக் கூறினார் திவ்யா.

ஆச்சரியம் தரும் பட்டியல்.. 

 பிரபலமான கலைஞர்கள். இந்தியக் கலைஞர்கள், இலங்கையின் தமிழ் சிங்களக் கலைஞர்கள், வடக்கு கிழக்கு  கொழும்பு மலையகக் கலைஞர்கள். 

வேண்டுகோள்:

“நீங்களும் இதில் இணைய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் திவ்யா. எல்லாளனாக என்னையும் கைமுனுவாக ரவி பந்தையும் வேடம் ஏற்கும்படி வேண்டுகிறார். 

“உங்கள் வயதுக்கு அந்த வேஷம் பொருந்தும் அங்கிள்” என்று கூறுகிறார். ஏற்கனவே பேசியதுதான்.

எல்லாளன்  கைமுனுவோடு போரிட்டு இறந்த போது அவனது வயது  74. கைமுனுவுக்கு இளம்  வயது.

  திவ்யா  செய்யப்போவதோ பெரும் காரியம், புதுமை.  செய்யவிருக்கும் இவருக்கு  உதவ  வேண்டும் என்று  ஏற்கனவே  முடிவெடுத்திருந்தேன். இப்போது உறுதியாகிறது ரவியும் ஒப்புகொள்கிறார். வீட்டில் என் முடிவைக் கூறுகிறேன்.

 “இந்த வயதில் ஆடக்கூடாது”, மறுப்புதான் முதல் பதில்.

“ஆடல் உங்கள் உடலுக்கு ஒத்து  வராது, சிலவேளைகளில்   தடுமாறி விழுந்து விட்டால்  எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே  கிடக்கவேண்டி  வரும்”, என் உடல்  மீது அக்கறையுடனான  மறுத்தல். 

நான் என் பக்க நியாயங்களைக் கூறுகிறேன்.

“அசையலாம்  ஆனால்  ஆடக்கூடாது உற்சாகத்தில் “ஜம்” பண்ணக்கூடாது”, என்ற  நிபந்தனையுடன் ஒப்புதல் கிடைக்கிறது. அன்புள்ளவர்களின்  அக்கறையை புறந்தள்ள  முடியுமா?

திட்டமிடலும் பயிற்சியும்

ஐந்து நிமிடக் காட்சிதான், அதனை எவ்வாறு அமைப்பது என நானும் ரவி பந்துவும் திட்டமிடுகிறோம். ஒரு நாள் பயிற்சிக்காகச் சரஸ்வதி மண்டபம் செல்லுகிறோம்.  

ஒருபுறம் ரவி பந்து ஆட, மறுபுறம் நான் அசைகிறேன்.

அசையும் போது  ஆடலும்  வந்து  விடுகிறதே. 

ஒப்பந்தத்தை மீறுகிறேனே  என்று  ஒரு உறுத்தல். அது முதலாவது பயிற்சி. நான் வீட்டில்  தனியாகப் பயிற்சி  எடுக்கிறேன். மனைவிக்கு அசைந்தும் ஆடியும்  காட்டுகிறேன்.

  “மெல்லமாக ஆடலாம்’  என்று அனுமதி  கிடைக்கிறது. உற்சாகம் பிறக்கிறது. 

நான் வசிக்கும் தொடர்மாடி வீட்டில் மேற்தளம் மிக அகண்டது. குடியிருப்போரில் சிலர் அதில், பின்னேரம்  நடை பயில்வர், நான் இசையைப்  போட்டுவிட்டு, வாள் சுழற்றி  நடந்து ஆடிப் பயிற்சி பெறுவதை  நடைபயில்வோர்  வியப்புடன் பார்க்கின்றனர்.

ஒரு கிழவர் இப்படித் துள்ளுகிறார் என அவர்கள் எண்ணியிருக்கவும் கூடும்.

எம்மோடு  ஒரு பைத்தியமும் குடியிருக்கிறது என்றும் சிலர் எண்ணியிருக்கலாம்.

நான் பேராசிரியராகப்  பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்ததை  அவர்களுள் சிலர் அறிவர். அப்பயிற்சியை நின்று ரசித்த   அங்கு வசிக்கும் ஒரு  சிங்கள  டொக்டரையும் கண்டேன்.

அது பற்றி அவருக்கு விளக்கினேன். ஒருமுறை பயிற்சியில் என்னோடு தினேஸ் இணைந்து கொண்டான். ஆலோசனை கூறினான்.

ரவி பந்துவுடனான பயிற்சிக்கு நாள் குறிப்பிட்டிருந்தோம், என் வீட்டில் பயிற்சி. என் வீட்டுக்கு வருவதாகக் கூறிய ரவி பந்து கீழே விழுந்து முழங்காலில் அடிபட்டுவிடுகிறார். அவருக்கு நடக்க முடியாத சூழல். 

தனக்குப் பதிலாக தனக்கு நிகரான இன்னொரு சிங்கள நடனக் கலைஞரை அனுப்பி வைக்கிறார். அவரே வந்து பயிற்சியும் தருகிறார். அவருடன் கூட இன்னும் நான்கு சிங்கள மாணவர்கள். 

நானும் அவரும் சேர்ந்து கைமுனுவையும் எல்லாளனையும் உடல் மொழியால் யுத்த களத்தில் எவ்வாறு கொண்டு வரலாம் என்று உரையாடுகிறோம். நான் சொன்ன ஆலோசனைகளை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

எல்லாளன்-  பாத்திரம்  உருவான  விதம்

 இலங்கையை ஆண்ட பெரும் வீரர்களுள் ஒருவன் எல்லாளன். 74 வயதினன். உடலால் தளர்ந்தவன் உள்ளத்தால் வலியவன். தன்னிலும் பல மடங்கு இளையவனும் உடல் வலிவு உள்ளவனுமான துட்ட கைமுனுவைப் படையுடன் எதிர்கொள்கிறான். 

படையோடு படை மோதி, மக்கள் அழிவதை அவன் விரும்பவில்லை. தன்னிலும் பல மடங்கு இளையனான துட்ட கைமுனுவைத் தனியாகப் போருக்கு வரும்படி அழைக்கிறான். 

அவன் பெரும் குணம் கண்டு படையோடு வந்த துட்ட கைமுனு அதிசயிக்கிறான். 

இருவருக்கும் இடையில் தனிப்போர் நடக்கிறது. போரில் தன் முதுமையினை எல்லாளன் உணருகிறான்.தனது முழுச்சக்தியையும் பயன்படுத்தி,  துட்ட கைமுனுவோடு தனிப் போர் புரிகிறான். தனிப்போரில் சோர்வடைகிறான். சோர்ந்தே. போகிறான். எனினும், தன் முழுச் சக்தியையும் திரட்டி இரண்டாவது சுற்றில் கைமுனுவோடு மோது கிறான். வீரத்தோடு சாவைத் தழுவிக் கொள்ளுகிறான்.

கைமுனு எல்லாளன் குணாதிசயம் கண்டு அவனை மதித்து வணங்குகிறான்.

நானும் என்னோடு நடித்த நண்பரும் இணைந்து இவ்வண்ணமாகத் தான் முடிவெடுத்தோம். இந்த வியாக்கியானத்தை அந்த நண்பரும் ஏற்றுக்கொண்டார். 

எல்லாளன் பாத்திரம் உருவான பின்னணி இது. ஐந்து நிமிட நேர நிகழ்ச்சி இது. கூத்து ஆடல்களைக் குறைத்து, கூத்தின் மணம் வீசத்தக்கதாக நடிப்பை அதிகம் கலந்து, கூத்து அசைவுகளையும் இணைத்து  அதனை உருவாக்கினேன். கூத்து மரபு நடிப்பு முறை இதில் கையாளப்பட்டுள்ளது. 

எல்ளாளனுக்கான உடை, முடி என்பன கலையரசு சொர்ணலிங்கம் 1940 களிலே புனைந்த எல்லாளன் வேசத்தில் இருந்து  பெறப்பட்டது. 

எல்லாளனுக்கும்  நாடகத்திற்குமான  உடை ஒப்பனையும் அண்ட்றூ.  யூலியஸும்

உடை, முடி அமைப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஒப்பனைக் கலைஞர் அண்ட்றூ ஜூலியஸ் செய்தார். நான் சில ஆலோசனைகள் கூறினேன். 

1940 களில்  கலையரசு  சொர்ணலிங்கம்  எல்லாளனுக்கு   வேடமிட்ட  பழைய  படம் ஒன்றை  அனுப்பி வைக்கிறேன். 

மினு மினுப்பு  இல்லாமலிருக்க  வேண்டும். ஆனால், ஆழமாக இருக்கவேண்டும். இதுவே  எனது  வேண்டுகோள். 

செயலில் இறங்கிய அவர்,   செய்து முடித்ததை எனக்கு  படம் எடுத்து அனுப்புகிறார். 

   எல்லாளன் தலையில்  வைக்கும் கிரீடம்  சற்று நீளமாக  இருந்ததால் குறைக்கும்படி கூறினேன். 

அதன் அடியாக அவர் இந்த முடி உடை என்பனவற்றை உருவாக்கியதுடன்

இந்த நாடகத்திற்கான அதிகமான  உடை ஒப்பனைப் பொறுப்புகளையும் அவரே மேற்கொண்டார். 

எல்லாளன் படைத்தலைவர்களாக இன்னும் மூவர் வந்தனர்

ஒருவர்  கொழும்பில் வதியும் ஒரு முதிர்ந்த பெண்மணி பரதம் பயின்றவர். மற்றைய இருவரும் எனது மாணவர்கள்.. 

 பிராணுஜா , தினேஷ். இருவரும் இராவணேஷனில் அங்கதனாகவும்

இலக்குமணனாகவும் வந்தவர்கள். 

இறுதி ஒத்திகைகள்

 பெரும்பாலான  ஒத்திகைகள்  ஒரு  மாதகாலம் கொழும்பு  சரஸ்வதி மண்டபத்தில்  நடந்துகொண்டிருந்தன. இறுதி  மூன்று  நாட்கள் ஒத்திகை  கொழும்பு கதிரேசன் மன்டபத்தில் நடைபெற்றது. 

இறுதி ஒத்திகையின் போதும் திவ்வியா சில புதிய  விடயங்களைப் புகுத்திக் கொண்டேயிருந்தார். அது படைப்பின்போது நடைபெறும். படைப்பாளிகள அதனை  அறிவார். 

எல்லாளான் – துட்ட கைமுனு  சண்டையின்போது  பின்னணியில் கேரள  களரிப்பயிற்றில் பயிற்சி  பெற்ற  ஒருவரை  அதன்படி  அசையச் சொன்னார். 

இறுதி நாள் ஒளியமைப்புடனான  பயிற்சி  பின்னணிக் காண்பியங்களுடன்  நடந்தது. 

அதனை உருவாக்கியவர்  என் அருகில் இருந்தார். தான் அதனை உருவாக்கிய விதம் பற்றி அவர்  கூறினார். அனைத்தும்  அவரது  படைப்பு. 

எமது போருக்கான காண்பியம் சற்றுத் திருத்தப்பட வேண்டும் என ஆலோசனை கூறினேன். 

 மறு நாள், அது திருத்தப்பட்டு  அருமையாக  இருந்தது. 

எனக்கு வேடமிட  3.00  மணிக்கு  ஆரம்பித்த  அன்ட்ரூ  5.00  மணிக்கு என்னைத் தோற்றத்தில்   எல்லாளனாக்கி விட்டார். வேடமிட்டதும் அரசதோரணை  வந்து விட்டது. அரசனோடு படம் எடுக்கக் சிலர் விரும்பினர். 6.30 க்கு  நாடகம் தொடங்கியது. வேடமிட்டுக்கொண்டு, வசதிகளும் காற்றோட்டமும் இல்லாத அந்தச் சிறிய  இடத்தில்  அரங்கின் ஓரத்தில் அமர்ந்திருப்பது மிகமிகச் சிரமாக இருந்தது. 

மீசை, தாடி, டோபா அலங்கார  உடுப்புகள் மிகவும் பாரமாக  இருந்தன. அவற்றோடு  அமர்ந்திருக்க மிக்கச் சிரமப்பட்டேன். 

 ஆனால் வேடமிட்டாகி  விட்டது  நடிக்கத்தானே வேண்டும்

இந்த பின்னணியில் தான் எல்லாளனாக  மேடையேறினேன். 

 ஆனந்தம்  மகிழ்ச்சி

மாணவர்களோடு இணைந்து   மேடையில்  நாடகம்  செய்வது எவ்வளவு இனிமை எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு ஆனந்தம்?

அந்தச் சின்னக் குழந்தைகள்  சிறுமிகள்  மற்றும் கலைஞர்கள்  ஒரு படம் எடுத்துகொள்வோம்  என்று கேட்டுப்  படமும் எடுத்துகொண்டனர்.

அவர்களின் சிரிப்பும் கலகலப்பும்   அன்பும் வாஞ்சையும்…  

நடிக்க  ஆயத்தமாக  நிற்கும்  ஆர்வ முகபாவமும் சூழலின் நெருக்கடியை  இலேசாக்கின. 

நான் இருந்த அசௌகரியம் கண்டு ஒரு குழந்தையின் தாயார்  எனக்கு ஒரு மின்சார கைவிறி  தந்தார். அவர் தனது குழந்தைக்காகக் கொண்டு வந்த  விசிறி அது. நான் மறுத்தும் அந்தத் தாயும்  சிறுமியும்  என்னை விடவில்லை. இந்த அன்புகளை நாடகமும் உருவாக்கும். 

எல்லாளன்  உருவான  கதை இது. 

ஏனைய முக்கிய  பாத்திரங்கள்

இதில்  வரும் ஏனைய முக்கிய பாத்திரங்கள் அனைத்தும் உருவானதிற்குப் பின்னால் இன்னும் பல  பல கதைகள்  இருக்கும். 

முக்கியமாக.. முருகன், வள்ளி, ஹனுமான், வனமுறை வேடன், விஜயன், சங்கமித்தை, வடநாட்டு  அரசன், பாலசுந்தரி, கண்டிய மன்னன் இராஜசிங்கன், முத்துலிங்க  சுவாமி என இன்னோரன்ன பாத்திரங்கள். 

இப்பாத்திரங்களுக்கு  உரியவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை உள்வாங்கி  இதனைச் செய்திருந்தார் திவ்யா.   

“மொத்தம் எத்தனை பேர்  அம்மா?” என்று கேட்டேன்

“130” என்றார். 

வட்டும் வழுதலையுமாக, குஞ்சு குருமானாக  மிகப் பலர். 4 வயது தொடக்கம் என்போல 83 வயது தாண்டியவர்  வரை. இவளால் முடியுமா  என்று யோசித்தேன். 

முடியும் முருகன் அருள் புரிவான் என்றாள் அவள். 

ஒப்பனையில்  கண்ட  காட்சி

அரங்கேற்றமன்று பிற்பகல் 2.00  மணிக்கு கதிரேசன் மண்டபம் சென்றேன் மண்டபத்தின் அருகே  ஒரு பெரிய நீண்ட மண்டபம் அதிலே மிக அதிகமானோர்   ஒப்பனை செய்துகொண்டு இருந்தனர். 

பெரியவர்கள், சிறியவர்களுக்கு  ஒப்பனை செய்தனர். பெரும் பாலும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் ஏற்கனவே  அரங்குகள் கண்ட பரத நர்த்தகிகள், ஒப்பனைக்கு பழக்கப்பட்டவர்கள்

 தாமே ஒப்பனைக்குத் தயாராகினர். கதிரேசன் மண்டபத்தின் ஒப்பனை அறை மிக மிகச் சிறியது. அதிகம் பேரைக் கொள்ளாது.

 கொழும்பில் லயனல் வெண்ட், எல்பின்ஸ்டன்  அரங்கு, டவர்ஹால், நெலும் பொக்குன-(தாமரைத் தடாகம்), பண்டார நாயக்கா அரங்கு, ஜோன் டீ  சில்வா அரங்கு என்பனவும் இன்னும் சிலவும் 

சகல வசதிகளும் கொண்டவை   அதற்காகக் கட்டப்பட்டவை ஒளி  வசதிகளும் எனைய வசதிகளும்   உடையவை. 

ஆனால் கொழும்பில் வாழும் தமிழர் இவற்றிற்குப் பழக்கப்படவில்லை. அங்கு நடக்கும் சிங்கள நாடகம் கலை நிகழ்வுகளுக்குப் போவதும் குறைவு. 

கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம், கதிரேசன் மண்டபம தான் அவரகள்தான் அறிந்த  பழக்கமான மண்டபம். வாடகையும் அதிகம். 

 அவை நாடக ஆற்றுகைக்காகக் கட்டப்படாமையினால் அந்த  வசதிகள் அதிகம் அங்கு இல்லை. 

அவை பரத அரங்கேற்றங்களுக்கும் பெரு விழாக்களுக்கும் திருமண  வைபவங்களுக்கும் மாத்திரமே  பயன்படுத்தப்படுகின்றன. 

 கொழும்பில் ஒளி வசதிகள் உள்ளவை தொலைக்காட்சி நிலைய கலை அரங்குகளே

இந்த  நிலையில்தான் கொழும்புத் தமிழர் நாடகம்  செய்கின்றனர். அது  ஒரு  தனிக்கதை. சொல்ல  முடியாத  சோகக் கதை. 

நாடக  முன் தயாரிப்புகள் 

நான் முன் சொன்னவை யாவும் நாடக முன் தயாரிப்புகள். 

பார்ப்போருக்கு இவை தெரியாது. இவை யாவும் முன் தயாரிப்புகள். 

முன் தயாரிப்புகளையும் அவற்றின் பின்னால் உள்ள கடும் உழைப்புகளையும் கஸ்டங்களையும் பார்ப்போர்  அறியார். அவையும் வெற்றிகரமாக நாடகம் அமையக்  காரணங்கள் ஆகும். 

 பார்வையாளருக்கு  இவை புரியாவிடினும் ஆற்றுகை  ஆய்வாளர்கள்  நாடக  ஆய்வாளருக்கு அவை மிக மிக  உதவும். அவர்களையும் மனதில் கொண்டே  இக்குறிப்புகள்  எழுதப்பட்டன. 

அன்ட்றூ எனக்கு ஒப்பனை  செய்த முறையையும்  ஏனையவர்களுக்கு ஒப்பனை  செய்த முறையையும்  நெருக்கடி  நிலைகளை அவர் கையாண்ட முறையையும் அவதானித்தேன்.   அவர் ஒப்பனை புரிந்த கதை  ஒரு தனிக்கதை. அதோடு வெகு  சுவையான  கதையும் கூட. அதனையும் விரைவில் இங்கு பதியவுள்ளேன்.