தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?

தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர்.   

கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுக்கும் இதொரு நல்ல முடிவாக அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு (இனப்பிரச்சினை, சமூக, பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துக்கும்) தீர்வை எட்டுவதற்கு ஒரு சரியான கட்டமைப்பும் மாற்று அரசியலும் வேண்டும் எனவும். 

 “கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பொதுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். நிரந்தரத் தலைமைக்குப் பதிலாக அதில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகளுக்குச் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தனித்த முடிவுகள் எடுக்கப்படாமல், முடிவுகள் திணிக்கப்படாமல், கூட்டாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட  வேண்டும். மக்களுக்கான அரசியலானது செயற்பாட்டரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பல நியாயமான கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தரப்புகளால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் “அரச ஆதரவு நிலைப்பாடு என்றால் அது எந்த அடிப்படையிலானது? அதனுடைய முன்னேற்றமென்ன? அரச எதிர்ப்பு என்றால் அதன் தாற்பரியமென்ன? அது தருகின்ற அரசியல் வெற்றிகள் என்ன? இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? அது எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன?” என்ற கேள்விகளையும் இவை எழுப்பியிருந்தன.

இதையெல்லாம் தமிழரசுக் கட்சி பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. அதனுடைய மூத்த தலைவர்களான இரா. சம்மந்தன், மாவை சேனாதிராஜா தொடக்கம் சுமந்திரன், சிறிதரன் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலையாளர்கள் வரையில் அனைவரும் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள மறுத்தனர். இவர்கள் எவரும் கூட்டமைப்புக்கான அரசியற் பண்புடனும் அதற்குரிய மனப்பாங்குடனும் செயற்படவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்தியும் முதன்மைப்படுத்தியுமே வந்தனர். தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிற் செயற்பட்டும் வந்தனர். 

இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து நொறுங்கியது. 2010 இல் ஒரே அணியாக இருந்த கூட்டமைப்பு, உடைந்து இப்பொழுது ஏழு துண்டாக நிற்கிறது. கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி, சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா என ஒவ்வொரு தரப்பாக வெளியேறி, இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவையும் தனித்து நிற்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  

மட்டுமல்ல, கூட்டமைப்பில் உச்சச் செல்வாக்கைச் செலுத்தி வந்த தமிழரசுக்கட்சி அரசியல் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரசுடன் மென்னிலை எதிர்ப்பையும் உள்வளையும்  ஆதரவையும் கொண்டிருப்போர். ஐக்கிய இலங்கைக்குள் ஏனைய சமூகத்தினருடன் இணைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட முயற்சிப்பவர்கள். 

மறுதலையாக மாவை சேனாதிராஜா, சிறிதரன், அரியநேந்திரன், ஸ்ரீநேசன் போன்றோர் தீவிர அரச எதிர்ப்பு, விடுதலைப் புலிகள்  ஆதரவு என்ற நிலைப்பாட்டையுடையவர்கள். கற்பனாவாதத்  தன்மையுடையவர்கள். தமிழரசுக் கட்சியின் இந்த இரட்டைநிலை,  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் பிரதிபலித்தது. இப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சிறிதரன் அணியும் மென்போக்கைக் கொண்ட சுமந்திரன் அணியும் தலைமைத்துவப் போட்டியில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.  

இதனால் உரிய  – பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முடியாதிருந்தது. இதற்கு நல்ல உதாரணம், ‘நல்லாட்சிக் காலம்’  என வர்ணிக்கப்பட்ட 2015 – 2020 வரையான மைத்திரி – ரணில் ஆட்சியின்போது சுமந்திரனும் சம்மந்தனும் வெளிப்படையாகவே அரச ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தனர். ஏனையோர் அதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு பற்றிச் சுமந்திரன் தமிழ்மக்களுக்கு  வியாக்கியானம் செய்து வந்தார். இதனை கூட்டமைப்பிலிருந்த சுரேஸ், செல்வம், சிறிதரன் போன்றோர் விமர்சித்து வந்தனர்.

இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த பின்னணியில்தான் DTNA இன் உருவாக்கம் 2023 இல் நிகழ்ந்தது. அது தடுமாற்றங்களிலிருந்து விடுபட்டு,  தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதியதொரு வழிமுறையைக் காண்பதாக இருக்கும் என நம்பப்பட்டது. 

இதற்குக் காரணம்,  DTNA இல் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியன ஆயுதப்போராட்ட அரசியலிலும் ஜனநாயக வழிமுறை அரசியலிலும் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அவற்றின் தலைவர்களுக்கு இவை இரண்டிலும் தொடர்ச்சியான அரசியல் அனுபவமுண்டு. ஆகவே இரண்டு அனுபவங்களின் வழியாகவும் புதிய அரசியலை – குறிப்பாகச் செயற்பாட்டு அரசியலை – DTNA யினால் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 

முக்கியமாக தமிழ்ப்பரப்பில் செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் மக்களிடம் இருந்தது. போராட்ட அரசியலுக்கு முன்னரும் பின்னரும் செயற்பாட்டு அரசியல் இல்லை. இரண்டு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசுக் கட்சியிடத்திலும் தமிழ்க் காங்கிரஸிடமும் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியமோ அனுபவமோ இல்லை. ஆனால், விடுதலைப் போராட்ட இயக்க அனுபவங்களுக்கூடாகப் பயணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்றவற்றுக்கு செயற்பாட்டு அரசியற் பாரம்பரியம் இருந்தது. 

ஆகவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும். அது கற்பனாவாத (மிதவாத) அரசியலில் இருந்து விடுபட்டு, நடைமுறை அரசியலை, மக்களுக்கான அரசியலை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு  மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன  செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். 

TNA யிலிருந்து வெளியேற்றத்துக்குப் பின்னர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு DTNA இன்னும் தன்னைத் தனித்த அடையாளமாகக் காட்டவில்லை. அதாவது, கொள்கை ரீதியாகவும் கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றிலும் தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட வேறுபட்டதாக உணர முடியவில்லை. 

இந்தப் பின்தங்கிய நிலை தொடருவதற்கான காரணம் என்ன?

தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட்டு வெளியேறிய பின் DTNA இன்  புதிய செயற்பாட்டுப் பரப்பு, புதிய செல்வாக்குப் பரப்பின் விரிவாக்கம் எதுவாக உள்ளது?

DTNA இன் புதிய பெறுமானங்கள், அது பெற்றுக் கொண்ட – உருவாக்கிய நல்லடையாளங்கள் என்ன? 

இந்தக் கேள்விகளை DTNA விடம் ஏன் எழுப்ப  வேண்டியிருக்கிறது என்றால் –

1.      ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஒரு (TNA)  கட்டமைப்பிலிருந்து வெளியேறி, புதிய அணியாக DTNA செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக முன்னதற்கும் பின்னதற்குமான வேறுபாட்டை அது காண்பிக்க  வேண்டும். அரசியல் ரீதியாகவும் அதை முன்னெடுத்துச் செல்லும் அணுகுமுறைகள் எப்படியானவை எனவும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டுக்குமிடையிலான அரசியல்  வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்துவதோடு, பிரிந்து சென்று புதிதாக இயங்குவதற்கான நியாயத்தையும் சொல்வதாக இருக்கும். ஆனால், அப்படி எதையும் இதுவரையில் உணரமுடியவில்லை. 

2.      குறிப்பிட்ட அளவுக்கு அவ்வப்போது தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறது DTNA. அதேவேளை அது மீண்டும் தமிழரசுக் கட்சியோடு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு) இடைநிலைச் சமரசத்துக்கும் முயற்சிக்கிறது. இந்தத் தத்தளிப்பு நிலை அல்லது தடுமாற்றம் ஏன்? ஏனென்றால், DTNA உம், தமிழரசுக் கட்சியைப் போலச் செயற்பாட்டு அரசியலை விட்டு, பிரமுகர் அரசியலிலும் முற்று முழுதான கற்பனாவாத அரசியலிலும் மூழ்கிப்போயுள்ளது. அதனால்தான் அதனால், கொள்கை, கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றால் தனித்துவப்படுத்திக் காண்பிக்க முடியவில்லை.  

3.      இதனை மறைத்துக் கொள்வதற்காக அது தீவிர அரசியலைப்  பேச முற்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற கதையாடலே தமிழ்த்தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத தடுமாற்றத்தின் விளைவுதான். அதொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல, தமிழ் மக்களுடைய அல்லது தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் மீட்சிக்கான வழிமுறையும் அல்ல. 

மட்டுமல்ல, தீவிர அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டே, அதனுடைய தலைவர்கள் அதிதீவிர அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதிதீவிர அரசியல் தமக்குரிய அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தமிழ்ச்சமூகத்திடமிருந்து பெற்றுத் தரும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதைப் பேசுவதற்கும் அந்த  வழியில் செயற்படுவதற்கும் கஜேந்திரகுமாரின் அணியும் சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரின் அணியும் இருக்கிறதே. பிறகேன் இவர்கள் (DTNA)? 

தேவையேற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படத் தயார் என DTNA  இன் தரப்பிலிருந்து சித்தார்த்தன், செல்வம் போன்றோர் சொல்லியிருக்கின்றனர். அதாவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு ஒற்றுமையாக – ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதற்காகவே இப்படிச் சிந்திக்கிறோம் என்கிறார்கள்.

அப்படியென்றால், பிரிந்து செல்வதற்கு காரணமாக இருந்த நிலவரங்களை தமிழரசுக் கட்சி சீராக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை.  அப்படியிருக்கும்போது எதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மீளிணைவைப் பற்றி DTNA சிந்திக்கலாம்? அப்படியாயின் தனித்து இயங்குவதில் DTNA க்கு உள்ள தயக்கம் – அச்சம்தான் காரணமாக இருக்க வேணும். நிச்சயமாக. இன்னும் மக்கள் DTNA ஐ பிறிதொரு சக்தியாக அடையாளம் காணவில்லை. ஒரு தேர்தல் வருவதற்கு முன்பு, மக்களிடம் கணிப்பீடு வரமுன்னர் எப்படி இப்படிச் சொல்லமுடியும்? என்று DTNA தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம்.  தமது கூட்டணிக்குப் பெயர் சூட்டப்பட்ட விதத்திலிருந்து, முன்னெடுக்கப்படும் அரசியல், அவ்வப்போது கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சியினருடனான பொது நிகழ்வுப் பங்கேற்புகள் வரையில் DTNA தனித்துத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக தான், இன்னும் கூட்டமைப்பின் நிழலாக இருக்கிறேன் என்றே காட்ட முற்படுகிறது. தனித்து DTNA என நின்றால், பின்னடைவைத் தந்து விடுமோ என்ற அச்சம் அதற்குண்டு. 

இந்த அச்சத்துக்குக் காரணம், DTNAதான். ஏனென்றால், தமிழ் அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் இல்லாது போன 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளிலும் DTNA இன் கட்சிகளால் (இயக்கத்தினரால்) ஒரு புதிய அரசியலை, தங்களுடைய தனித்துவ அடையாளத்துடன் முன்னெடுக்க முடியவில்லை. அப்படிச் செய்வதற்கு முன்பு புலிகள் தடையாக இருந்தனர். அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். 2009 க்குப் பிறகு அப்படிச் சொல்ல முடியாது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியைக் கூட DTNA உள்ளிட்ட பிற சக்திகள் எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே. அதை மேவிச் செல்லவும் முடியவில்லையே. 

4.      தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது வெறும்கோது மட்டுமே. அதிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வெளியேறி விட்டனர்.  தமிழரசுக் கட்சி மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற லேபிளில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிளவுண்டு சிதையக் கூடிய நிலையில். உள்முரண்பாடுகள் முற்றி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.  இந்த வாய்ப்பான சூழலில் DTNA தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். தனக்கு  வெளியே உள்ள சக்திகளையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் சமரசம் செய்வதற்கு முயற்சிப்பதை விட அதற்கு வெளியே உள்ள சக்திகளை இணைத்துத் தன்னை விரிவாக்கம் செய்வதே  பயனுடையது. ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. அதில் அக்கறை  கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. 

இது ஏன்?

5.      தமிழரசுக் கட்சியை DTNA இன்னும் விமர்சிப்பதற்குக் காரணம், அதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்ற – எதிர்காலத்தில் முன்னணியில் திகழப்போகின்ற – சுமந்திரன், சிறிதரன் போன்றோருடன் DTNA வினரால் உடன்பட்டுப் பயணிப்பதில் உள்ள நெருக்கடியே! இந்த விமர்சனத்தைக் கூட சுரேஸ் பிரேமச்சந்திரனும் ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி போன்றோரும்தான் செய்கின்றனர். அபூர்வமான சந்தர்ப்பங்களில் செல்வம் அடைக்கலநாதன் ஏதாவது சொல்வார். சித்தார்த்தன் எதுவுமே பேசுவதில்லை. ஆனால் DTNA என்ற வகையில் தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அனைவரும் உடன்பாடு கொண்டேயுள்ளனர். அந்தளவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. 

முக்கியமாகச் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை விடச் சிறிதரனும் சுமந்திரனும் அரசியல் வரலாற்றில் ஜூனியர்கள். ஜூனியர்களாக இருந்தாலும் ஏனையவர்களை விட இருவரும் செல்வாக்கோடும் அரசியல் அதிகாரத்தோடும்  தற்போதுள்ளனர். கூட்டமைப்பில் எல்லோரும் இணைந்திருந்த காலத்திற் கூட சுமந்திரனும் சிறிதரனும் ஏனையவர்களை மிஞ்சும் வகையிலேயே, அவமதிக்கும் வகையிலேயே நடந்து கொண்டனர். சிறிதரன் பல சந்தர்ப்பங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,  ரெலோ ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சாடியிருக்கிறார். கிளிநொச்சியில் ஏனைய கட்சிகளின் செயற்பாட்டை அவர் முற்றாகவே மட்டுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுமிருந்தார். அத்துடன்,  தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தொடர்ச்சியாகவும் காட்ட முற்படும் சிறிதரனுக்கு ஏனையவர்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்கள் என்ற கடந்த கால வரலாற்றைத் தோண்டியெடுத்து முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. 

சுமந்திரனுக்கு இது வேறு வகையில் இருந்தது. அவர் சம்மந்தனின் தொடர்ச்சியாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து பெறக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார். இது தமது கடந்த கால வரலாற்றின் நிழலை மறைத்து புதிய (அரச எதிர்ப்பு – தமிழ்த்தேசிய) அரசியலைத் தீவிர நிலையில் முன்னெடுக்கும் சுரேஸ், செல்வம் போன்றோருக்கு ஏற்புடையதாக  இருக்கவில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சமநிலையான அடையாளத்தையும் உரிமையையும் வழங்குவதற்குச் சுமந்திரன் ஏற்புடையவராகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏனையவர்கள் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு – அனுசரித்து – நடக்க வேண்டும் என்று சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சம்மந்தன், மாவை சேனாதிராஜா வரையில் அனைவரும் நடந்து கொண்டனர். அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதை அனுசரித்து ஏனையவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றவிதமாகச் செயற்பட்டமை. 

இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஒரு செயற்திட்டத்தைக் கூட DTNA உருவாக்கவில்லை. பதிலாக அது கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சிறிதரன் போன்றோரின் அதிதீவிர அரசியலின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பின்னோடி எந்தப் புதிய சாதனைகளையும் DTNA வினால் நிகழ்த்த முடியாது. தன்னை இழப்பதில்தான் அது போய் முடியும். குறைந்த பட்சம் தம்முடைய முன்னோடித் தலைவர்கள் பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்றோரின் அரசியற் தொடர்ச்சியையாவது பேண முற்படலாம். அதாவது விஞ்ஞானபூர்வமான, சமகாலத்தன்மையுடைய அரசியலொன்றைப் பகுத்தாய்ந்து முன்னெடுக்கும் விதமாக. 

காலம் எதிர்பார்த்து நிற்பது அதையே. அதையே DTNA செய்ய  வேண்டும். அல்லது, அதுவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்தான் தள்ளப்படும். 

00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *