“1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர் நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியாது.
இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும் அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது.”
