வரலாறு கண்ட  பெரும் தொற்று நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும்

வரலாறு கண்ட பெரும் தொற்று நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும்

— சீவகன் பூபாலரட்ணம் —

உலகமே கொரொனா வைரசுக்கான நோய்த்தடுப்பு மருத்துக்காக காத்திருக்கின்ற காலம் இது. விரைவில் அதற்கான பல நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், உலகம் ஒரு தொற்று நோய்க்காக தடுப்பு மருந்தைத் தேடுவது உலக வரலாற்றில் இது முதல் தடவையல்ல. 

இதற்கு முன்னரும் பல தொற்று நோய்கள் உலகெங்கும் மக்களை தாக்கியதுடன், பல்லாயிரக்கணக்கான, அவ்வளவு ஏன் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் உலகில் நடந்துதான் இருக்கின்றன. அப்படியான காலகட்டங்களில் பல நோய்த்தடுப்பு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து மக்களை காப்பாற்றியும் இருக்கிறார்கள். 

அவ்வாறான 5 முக்கிய நோய்த்தடுப்பு மருந்துகளை இங்கு பார்ப்போம். 

அனைத்து நோய்த்தடுப்பு மருந்துகளும் மனித குலம் கண்ட ஒரு சாதனைதான். அப்படியான பல சாதனைகள் இன்றுவரை நிலைத்து உதவுகின்றன. 

பெரியம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து: 

எட்வேர்ட் ஜென்னர் என்னும் விஞ்ஞானியால் 1796இல் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து இது. பெரியம்மை நோய்த்தடுப்புக்கான இந்த மருந்தை ஜென்னர் மிகவும் பிரபலமாக்கினார்.  

மனித குலம் அறிந்த மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்று பெரியம்மை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. வைரஸால் ஏற்படும் இந்த நோய், ஒரு தொற்றுக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும், பின்னர் உடலெங்கும் சீழ் நிறைந்த கொப்பளங்கள் ஏற்படும். சரித்திரத்தை பார்க்கும்போது இந்த நோய் தொற்றிய பத்துப்பேரில் மூவர் இதனால் இறந்ததாக விஞ்ஞானிகள் இன்சைடர் சஞ்சிகைக்கு கூறியுள்ளனர். 

இன்றுவரை உலகெங்கும் ஒழிக்கப்பட்ட ஒரே தொற்றுநோய் இந்த பெரியம்மை என்று கூறப்படுகின்றது. அதாவது இப்போது பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்து எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. அது தேவையில்லை. சர்வதேச பொதுச்சுகாதாரத்தைப் பொறுத்தவரை இந்த நோய் ஒழிக்கப்பட்டமை ஒரு மாபெரும் சர்வதேச பொதுச் சுகாதார சாதனையாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் பிரயந்த் பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான பேராசிரியர் கிரிஸ்டன் ஹொகெனெஸ். 

போலியோ(இளம்பிள்ளை வாதம்) தடுப்பு மருந்து  

போலியோவுக்கான தடுப்பு மருந்து வெளிவந்தபோது மக்கள் அதனைப் பெறுவதற்காக அது வழங்கப்படும் நிலையங்களை சூழ்ந்து வரிசையில் நின்றதாக கூறப்படுகின்றது.  

iron lungs (இரும்பு நுரையீரல்?) என்ற பெயரில் ஒரு இயந்திரத்தால் போலியோவால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு அப்போது செயற்கைச் சுவாசம் வழங்கப்பட்டது. உண்மையில் அது மிகவும் கடுமையான நடைமுறையாக பேசப்பட்டது. அத்தகைய iron lungs இயந்திரங்களின் படங்கள் தொற்றுநோய்கள் குறித்த உலக சரித்திரத்தில் மனித மனங்களில் அப்படியே பதிந்து போய் விட்டது என்று ஹொகேனெஸ் கூறுகிறார். 

போலியோமைலைட்டிஸ் என்னும் இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளையே பாதித்தன. பெருமெடுப்பில் பரவும் இது,  ஏற்கனவே நோய் தொற்றியவர்களை தொடர்புகொள்ளல் அல்லது மாசடைந்த நீர், உணவு ஆகியவற்றால் பரவியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. பலருக்கு அது நிரந்தரமான முடக்கம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

போலியோ நோய்க்காக குழந்தைகள் பிறந்த இரண்டு மாதங்களில் இருந்து 4 தடவைகள் சொட்டு மருந்துகள் தற்போது கொடுக்கப்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை 1979 முதல் இந்த நோய் எவருக்கும் தாக்கவில்லை என்று கூறப்படுகின்றது. உலகில் பல முன்னேறிய நாடுகள் போலியோவை கட்டுப்படுத்திவிட்டன. உலக நாடுகளைப் பொறுத்தவரை, போலியோ நோயாளர் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டது. 2018 இல் உலகெங்கும் 33 பேருக்கே இந்த நோய் பரவியுள்ளது.  

இந்த நோய்க்கான தடுப்பு மருந்துகொடுக்கும் நடவடிக்கையை ஆப்கானில் தீவிரவாதிகள் எதிர்த்திருந்தனர். தடுப்பு மருந்து கொடுக்கும் ஊழியர்களை அவர்கள் கொலையும் செய்தனர். 

எம்.எம்.ஆர் முக்கூட்டு நோய்த்தடுப்பு மருந்து 

இன்று குழந்தைகளுக்கு இந்த முக்கூட்டு நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது. அதாவது தட்டம்மை (சின்னமுத்து மற்றும் மணல்வாரி என்றும் இது அழைக்கப்படும்), கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி மற்றும் அம்மைக்கட்டு என்றும் இது அழைக்கப்படும்) மற்றும் ரூபெல்லா (ஜேர்மன் தட்டம்மை அல்லது மூன்றுநாள் தட்டம்மை) ஆகியவற்றுக்கான தடுப்பு மருந்து இது. இந்த நோய்களை உருவாக்குவது வைரசுக்கள்தான் இவற்றுக்கான கூட்டு மருந்தாக இது கொடுக்கப்படுகின்றது. இரு முறை வழங்கப்படும் இந்த மருந்தின் முதல் பகுதி 12 முதல் 15 மாதங்களிலும் அடுத்தது 4 அல்லது 6 வயதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. மிகவும் மோசமான வைரஸான சின்னமுத்துக்கு எதிராக இந்த மருந்து மிகவும் சிறப்பாக செயற்படுகின்றது.  

சின்னமுத்துவை பொறுத்தவரை வேகமாகப் பரவும் அது, பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், நோயாளியை சுற்றவரவுள்ள 90 வீதமானவர்களுக்கு பரவிவிடும். நோய் தீவிரமடையும்போது நிமோனியா, மூளை வீக்கம் ஏற்பட்டு நோயாளி இறக்கும் நிலைவரை போகலாம். இந்த நோய்க்கான தடுப்பு மருந்து 1963 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர்வரை வருடாந்தம் 30 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை உலகெங்கிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர்.  

2000 ஆம் ஆண்டில் பரவலாக கிடைக்கும் தடுப்பு மருந்து காரணமாக அமெரிக்காவில் சின்னமுத்து ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் மீண்டும் அந்த நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டது. 2019இல் அமெரிக்காவில் மாத்திரம் 1282 பேருக்கு சின்னமுத்து தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. 

சில தடுப்பு மருந்துகளை பொறுத்தவரை அவை எச்சரிக்கை நீர்ப்பீடனத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், நீங்கள் மீண்டும் சில காலத்துக்கு பின்னர் முதல் மருந்தை ஊக்குவிக்கும் மேலதிக தடுப்பு மருந்து எடுத்தாக வேண்டும். இதனைவிட முன்னைய மருந்து குறித்த தவறான சில கருத்துக்கள் காரணமாக சில பெற்றோர் தமது குழந்தைகளுக்கு அதனை வழங்குவது கிடையாது. அந்த நிலையில் இந்த வைரசு உலகெங்கும் ஒழிக்கப்படாத காரணத்தால் அது மீண்டும் பரவத்தொடங்கிவிடுகிறது.  

Tdap தடுப்பு மருந்து 

இந்த தடுப்பு மருந்து மூன்று நோய்களை ஏற்படுத்தும் பக்றீரியாவுக்கானது. டெட்டனஸ் (நரப்பிசிவு, தசைவற்பு, ஏற்புவலி என்று அழைக்கப்படும்), டிப்தீரியா (தொண்டை அழற்சி, தொண்டைக்கரப்பான்), கக்குவான் (குக்கல்) ஆகிய நோய்களுக்கான தடுப்பு மருந்து இது. இந்த பக்றீரியாக்கள் இறப்பை ஏற்படுத்தக்கூடியவை.  

கக்குவான் அல்லது குக்கல் இருமல் என்பது குழந்தைகளுக்கு இறப்பை ஏற்படுத்தக்கூடியது. பெரியவர்களுக்கும் இது ஆபத்தாக அமையலாம். இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை குழந்தைகள் எடுத்துக்கொள்வது மிக அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு இந்த நோய்கள் தொற்றாமல் இருக்க கர்ப்பிணித் தாய்மார் இதற்கான தடுப்பு மருந்தை எடுப்பர். கர்ப்பிணித் தாய்க்கு அருகில் இருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் இதற்கான தடுப்பு மருந்தை எடுத்திருத்தல் அவசியம்.  

HIV நோய்த்தடுப்பு மருந்து

இந்தத் தடுப்பு மருந்தின் வரலாறு மிகச்சிறியதுதான். 2006இல்தான் இது புழக்கத்துக்கு வந்தது. அமெரிக்காவில் இது அதிக அளவில் பரவும் ஒரு பாலியல் நோயாகும். ஒவ்வொரு வருடமும் அது ஒரு கோடியே நாற்பது லட்சம் பேருக்கு பரவுகின்றது.

இந்த வைரஸில் பலதரப்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில வகை புற்றுநோயுடன் தொடர்புடையவை. கர்ப்பப்பை, ஆண்குறி மற்றும் தொண்டையின் பின்புறத்தில் வரும் புற்றுநோய்கள் இதனால் ஏற்படலாம். நோய்த்தடுப்பு மருந்தை எடுப்பது கர்ப்பப்பை புற்றுநோயை 29 வீதத்தால் குறைப்பதாக கூறப்படுகின்றது.

புற்றுநோயை குணப்படுத்துவதற்கான ஒரு அண்மித்த நிலையாக இந்த தடுப்பு மருந்தை கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்து 2 அல்லது மூன்று தடவைகளில் வழங்கப்படும். அவர்கள் பெரியவராக பாலியல் உறவை கொள்வதற்கு முன்னதாக இவை கொடுக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.

உயிர்களை காப்பதால் நோய்த்தடுப்பு மருந்துகள் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் திட்டங்கள் காரணமாக உலகெங்கும் கக்குவான், தொண்டை அழற்சி, தட்டம்மை மற்றும் குளிர் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து வருடாந்தம் 20 முதல் 30 லட்சம் பேரினது உயிர் காக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நோய்த்தடுப்பு மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்தல், உரிய காலத்தில் எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையிலேயே அவற்றின் செயற்திறனும் அமைந்திருக்கின்றது.

நோய்த்தெடுப்பு மருந்தை எடுப்பதன் மூலம் உங்களை மாத்திரமல்ல, உங்கள் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் ஏனையவர்களையும் நீங்கள் பாதுகாக்கின்றீர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.