— கேணல் ஆர். ஹரிஹரன் —
தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சுமார் மூன்று தசாப்தால போரின் போதும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) இரண்டு கிளர்ச்சிகளின் போதும் இலங்கை ஆயுதப் படைகள் விரிவடைந்தன. ஈழப் போரின் இறுதி மூன்று ஆண்டுகளில், சுமார் 20,000 விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களை ஒழிப்பதற்காக இலங்கை ஆயுதப் படைகள் சுமார் 300,000 முதல் 450,000 பேரை (சீருடை படைகளின் அனைத்துப் பிரிவுகளிலும்) ஈடுபடுத்தியிருந்தன.
2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டபோது, இராணுவத்தின் பலம் 125,000 ஆக மட்டுமே இருந்தது. இருப்பினும், 2009 மே மாதத்தில் இறுதி ஈழப் போர் முடிவுக்கு வந்த வேளையில், இராணுவத்தின் பலம் மும்மடங்காக அதிகரித்திருந்தது. விடுதலை புலிகள் இயக்கம் கடல்வழியாகவும் அதன் இருப்பைக் கொண்டிருந்ததால், இலங்கை கடற்படையும் சுமார் 48,000 பணியாளர்களாக விரிவடைந்தது.
இலங்கை விமானப்படை போரில் சுமார் 28,000 முதல் 30,000 பணியாளர்களைக் கொண்டிருந்தது. இறுதித் தாக்குதலின் போது, இலங்கை விமானப்படை மிக முக்கியமான வான்வழி ஆதரவையும் கண்காணிப்பையும் வழங்கியது. பொலிஸ், ஊர்க்காவல் படை உட்பட சுமார் 80,000 துணை இராணுவப் பணியாளர்களும் ஈழப் போரின் இறுதி அத்தியாயத்தில் பங்கெடுத்தனர்.
விடுதலை புலிகள் என்ற அச்சுறுத்தல்
இலங்கை அரசியலில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தொடர்ந்து நீடித்ததால், இலங்கை அரசாங்கம் அதன் வீங்கிய ஆயுதப் படைகளைக் குறைப்பதற்கு எவ்வித தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை. சொல்லப் போனால், நாடு இதற்கு நேர்மாறாகவே செயற்பட்டது. அது புதிய பணியாளர்களைத் தொடர்ந்து ஆட்சேர்ப்பு செய்தது, ஒரு பிரம்மாண்டமான நிரந்தர இராணுவத்தைப் பராமரித்தது. அத்துடன் அமைதிக்காலத்தில் தனது பாதுகாப்புச் செலவினங்களைப் படிப்படியாக அதிகரித்தது.
மாதக்கணக்கிலான உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் 2022 ஜனவரியில் இலங்கை திவாலாகிக் கொண்டிருந்தபோது, செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக இலங்கை அதன் இராணுவத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து 135,000 பணியாளர்களாக மாற்றும் என்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அறிவித்தது. 2030 ஆம் ஆண்டிற்குள் இதை 100,000 ஆகக் குறைப்பதே இலக்கு என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஜூலை 28 அன்று நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து, ஆறு மாதங்கள் கழிந்த நிலையிலும், அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பராமரிப்பதற்கு அதிக அளவிலான வளங்களை ஒதுக்குவது பொதுமக்கள் பார்வையில் நியாயமானதல்ல என்று கூறினார்.
அதற்கேற்ப, மீண்டுவரும் செலவினங்களை (recurrent expenditure) தற்போதைய 9 சதவீதத்தில் இருந்து கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சி முதலீடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதைய 4 சதவீதமாக இருக்கும் மூலதனச் செலவினங்களை (capital expenditure) அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மூலதனச் செலவினங்களுக்காக 2027 ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 40 சதவீத அதிகரிப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2025 டிசம்பர் 5 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் 2026 தேசிய வரவு செலவுத் திட்டத்தைக் குறிப்பிட்டே ஜனாதிபதி திசாநாயக்க இவ்வாறு உரையாற்றினார். 2026 நிதியாண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகளில், மொத்த அரசாங்கச் செலவினம் 8.9 டிரில்லியன் இலங்கை ரூபாயாக (30 பில்லியன் டொலர்கள ) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது 1.6சதவீத அதிகரிப்பாகும்.
இதில், மீண்டுவரும் செலவினம் 5.7 டிரில்லியன் இலங்கை ரூபாயாகவும் (19.1 பில்லியன் டொலர்கள்), மூலதனச் செலவினம் 3.3 டிரில்லியன் இலங்கை ரூபாயாகவும் (10.9 பில்லியன் டொலர்கள் ) மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் வரவு – செலவுத் திட்டத்தில் பெரும்பாலானவை மீண்டுவரும் செலவினங்களுக்கே செல்கின்றன, மேலும் இந்த ஆண்டு அந்த நோக்கத்திற்காக 1.29 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது. மூலதனச் செலவினத்திற்காக சுமார் 203 மில்லியன் டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பாலான தொகையும் (சுமார் 540 மில்லியன் டொர்கள் ) மீண்டுவரும் செலவினங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநர குமார திசாநாயக்க, முப்படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த முடிவிற்கு தனது அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“எங்களது தொலை நோக்குப்பார்வை என்னவெனில், 2030 ஆம் ஆண்டிற்குள் சிறிய அளவிலான, ஆனால் மிகவும் பயனுள்ள மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகும். எங்களது இராணுவத்தின் அளவை 100,000 ஆகவும், விமானப்படையை 18,000 ஆகவும், கடற்படையை 40,000 ஆகவும் வரம்பிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மனிதவளக் குறைப்பில் முன்னேற்றம்
2023 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட இராணுவ அளவைக் குறைத்தல் மற்றும் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்ட வடிவத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டைக் கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்ட போதிலும், உள்நாட்டுப் போர் காலத்தில் வீங்கியிருந்த ஆயுதப் படைகளை 2030 ஆம் ஆண்டிற்குள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, உயர் தொழில்நுட்ப பாதுகாப்புச் சொத்தாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில், ஆயுதப் படைகள் என்பது அரசாங்க வேலைவாய்ப்பிற்கான ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே, பெருமளவிலான வேலையின்மையையும். அதைத் தொடர்ந்து வரும் சமூக சீர்குலைவுகளையும் தடுப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சு திட்டமிடப்படாத ஆட்குறைப்புகளைத் தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, இயல்பான ஓய்வு பெறுதல்கள் மற்றும் கடுமையான ஆள்சேர்ப்புத் தடை ஆகியவை பின்பற்றப்பட்டு வருகின்றன.
இது ஓய்வுபெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட புதிய ஆள்சேர்ப்பின் அளவைக் குறைவாக வைக்க உதவியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைவதற்கு, கட்டமைப்பு மாற்றங்கள் படிப்படியான அமலாக்க அட்டவணையைப் பின்பற்றுகின்றன. வரலாற்று ரீதியாக மொத்த பொதுப் பாதுகாப்புச் செலவில் பாதியைக் கொண்டிருந்த பணியாளர்களின் செலவுகளை இது ஆக்ரோஷமாகக் குறைப்பதை உள்ளடக்கியுள்ளது.
அறிக்கைகளின்படி, செயலில் உள்ள படைப்பலத்தை 200,000 க்கும் அதிகமான பணியாளர்களிலிருந்து 135,000 ஆகக் குறைக்கும் இடைக்கால இலக்கை இராணுவம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் வீரர்களின் எண்ணிக்கையை மேலும் 100,000 ஆகக் குறைப்பதே இறுதி நோக்கமாகும்.
மறுபுறம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை இவ்வளவு பெரிய அளவிலான ஆட்குறைப்புகளை எதிர்நோக்கவில்லை. அவை தங்களது தரவரிசைகளையும் வீரர்களின் எண்ணிக்கையையும் உகந்த முறையில் மறுசீரமைக்க வேண்டும். இலங்கை கடற்படை 40,000 வீரர்களைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படையைப் பராமரிக்கும் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது.
மறுபுறம், இலங்கை விமானப்படை அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களின் (Exclusive Economic Zone) கடல்சார் ரோந்து மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக சுமார் 18,000 முதல் 30,000 வரையிலான எண்ணிக்கையை உறுதிப்படுத்தி வருகிறது.
தொழில்நுட்ப நவீனமயமாக்கலின் வரவு – செலவுத் திட்ட நிதர்சனங்கள்
மறுசீரமைப்பு திட்டவடிவத்தின்படி, ஊதியத்தில் மிச்சப்படுத்தப்படும் பணம் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாதுகாப்பு நவீனமயமாக்கலின் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக உள்நாட்டு நிதி நிலையின் நிதர்சனங்கள் பாதுகாப்பு ஒதுக்கீடுகளை 437 பில்லியன் இலங்கை ரூபாயாக அதிகரிக்கச் செய்துள்ளன.
இது இலங்கை சர்வதேச பங்காளித்துவத்தை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இலங்கை பெருமளவிலான சர்வதேச நன்மதிப்பைப் பெற்றுள்ளது, இது இருதரப்பு உதவியாக மூலதன உபகரணங்களைப் பெற உதவியுள்ளது. மேம்பட்ட இராணுவப் பொருட்கள், அதிர்ச்சி சிகிச்சை பராமரிப்பு அமைப்பு (trauma care system) மற்றும் கடற்படைக வாகனங்களை வழங்குவதற்காக இந்தியா 5 மில்லியன் டொலர்கள் பாதுகாப்பு உதவித் தொகுப்பை வழங்கியுள்ளது.
இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் வான்வழி கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக, கடற்படையின் டோர்னியர் (Dornier) கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் இந்தியா மாற்றீடு செய்து கொடுத்துள்ளது.
அமெரிக்கா இலங்கை விமானப்படைக்கு 3 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள உபகரணப் பரிமாற்றத்தை நிறைவு செய்துள்ளது. இது முக்கியமான வான்வழி இயக்கம் சார்ந்த உபகரணங்கள், சி-130 விமான உதிரிப்பாகங்களை வழங்கியுள்ளதுடன், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பீச்கிராஃப்ட் கிங் ஏயார் 360 ஈ.ஆர். விமானங்களை இணைப்பதற்கும் வழிவகுத்துள்ளது.
சீனாவின் உத்தி
மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் இலங்கைக்கு நவீன கடல்சார் கண்காணிப்புச் சொத்துக்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், சீனா இலங்கையின் ஆயுதப் படைகளின் அளவைக் குறைத்தல் மற்றும் தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு பன்முக அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. சீனாவின் பங்களிப்பின் மூன்று அம்சங்கள்; பொருளாதார வசதி, வன்பொருள் விநியோகம் மற்றும் விரிவான இராணுவப் பயிற்சி ஆகியவையாகும்.
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மிகப் பெரிய தனிப்பட்ட இருதரப்பு கடன் வழங்குநராக சீனா இருந்தது. எனவே சீனா தனது கடனை மறுசீரமைக்க ஒப்புக் கொண்டது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பிணைத் தொகுப்பைப் (bailout package) பெற இலங்கைக்கு உதவியது. இது இலங்கை அதன் ஆயுதப் படை சீர்திருத்தத்தை மேற்கொள்ள மறைமுகமாக உதவியது.
மலிவான, அதிநவீன பாதுகாப்பு வன்பொருள்களுக்கு இலங்கை சீனாவைச் சார்ந்திருக்கிறது. இது இலங்கை கடற்படை தனது கடற்படைப் படகுகளை மேம்படுத்த உதவியுள்ளது. உதாரணமாக, சீனா தனது விசேட தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கூடுதல் போர்க் கப்பல்களை வழங்கியது.
கடல்சார் வணிகப் பாதைகளைக் கண்காணிக்கவும் கடத்தலைத் தடுக்கவும் இவை இலங்கை கடற்படைக்கு மிகவும் அவசியமானவை.
சிறிய எண்ணிக்கையிலான நிரந்தரப் படையினரைக் கொண்டு தந்திரோபாய இயக்கத்தைப் பராமரிக்க இலங்கை விமானப்படை சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹார்பின் வை – 12 விமானங்களைச் சேர்த்துள்ளது.
சீனா நேரடிப் பொருள் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயல்பாட்டு உபகரணச் செலவுக்கு மானியம் வழங்குவதற்காக 10 மில்லியன் யுவான் (1.4 மில்லியன் டொலர்கள் ) விநியோகத் தொகுப்பு இதில் அடங்கும். இலங்கை இராணுவம் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை 100,000 இலக்கை நோக்கிச் சுருக்கும் போது, அதன் நவீனமயமாக்கப்படும் அமைப்புகளை இயக்குவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த, தொழில்நுட்பத் திறன் கொண்ட அதிகாரிப் படை தேவைப்படுகிறது.
இந்த பயிற்சி இடைவெளியை நிரப்ப சீனா முன்வந்துள்ளது: மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் மூலோபாய படிப்புகளுக்காக கணிசமான எண்ணிக்கையிலான இளநிலை, நடுத்தர மற்றும் மூத்த இலங்கை இராணுவ அதிகாரிகளை சீனா அதன் பாதுகாப்பு அகாடமிகளில் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் மாறும் மூலோபாயச் சூழலில் ஆயுதப் படைகள் தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், வீங்கிய ஆயுதப் படைகளைக் குறைக்கும் பணியை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், ஒரு இராணுவத்தின் அளவைக் குறைப்பது என்பது நுட்பமான ஒரு பணியாகும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் போன்ற உணர்திறன் மிக்க மூலோபாய மண்டலத்தில் செயல்பட அதைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றால் அது மேலும் கடினமானது.
ஆயுதப் படைகளைக் கையாள்வது குறித்து அமெரிக்க இராணுவ ஜெனரல் உமர் பிராட்லி கூறியதை ஜனாதிபதி திசாநாயக்க நினைவில் கொள்வார் என்று நம்புகிறேன். அவர் கூறினார் ; “ஒரு இராணுவம் என்பது ஒரு நுட்பமான பொறிமுறையாகும், இது எளிதில் அகற்றப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்படக்கூடிய ஒரு இயந்திரக் கட்டமைப்பு அல்ல. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைப்பாட்டையும் பலவீனப்படுத்தாமல் உங்களால் ஆயுதப் படைகளைக் குறைக்க முடியாது.”
(கேணல் ஹரிஹரன் தெற்காசியா மற்றும் பயங்கரவாதம் குறித்த ஓய்வுபெற்ற இராணுவ உளவுத்துறை நிபுணர் ஆவார். இவர் 1987-90 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த இந்திய அமைதி காக்கும் படையின் உளவுத்துறை தலைவராகப் பணியாற்றினார்.)
