— மங்கள கௌரி விராஹநாதன்
(இசைப்பட்டதாரி ஆசிரியை)—
ஐரோப்பிய சங்கீதத்திலிருந்து நமக்கு கிடைத்துளள ஒரு இசைக்கருவியே வயலினாகும். இதற்கு பிடில் என்று பெயருண்டு. பண்டைக் காலத்தில் தனூர் வீணை என்ற பெயருடன் விளங்கியது எனவும் பின் வயலின் என்ற உருவில் அமைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேல் நாட்டுக்கும் கீழைத்தேயத்தும் பொருத்தமான நரம்புக் கருவியாகும். ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தந்தி வாத்தியமாகும்.
வயலின், வயலின் செலோ, வயோலா ஆகியன மேல்நாட்டு இசைக்கருவிகளென பொதுவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. (1786 – 1858) ஆண்டுகளில் கீழ்நாட்டில் வாசிக்கப்பட்டது. பழைய காலத்து பிடில்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. 17ம் நூற்றாண்டில் தற்காலத்து வயலின் போல் காணப்பட்டது. இப்பொழுதுள்ள வடிவத்தில் முதன் முதலில் இக் கருவியைச் செய்தவர் (Stradivasius) ஸ்ட்ராடி வேரியஸாவார். பிலிப்பையின்ஸ் தீவுகளின் தலைநகரமாகிய மணிலாவில் மூங்கிலாலேயே பிடில் செய்து விற்றார்கள். குறுத் (Cruth) எனும் வயலினில் 6 தந்திகளுண்டு.
Phono Violin (பொனோ வயலின்) என்பது அமெரிக்காவில் முற்காலத்தில் செய்யப்பட்ட ஒரு வித பிடிலாகும். கூம்பு வடிவத்தில் ஒரு குழாய் நாதப் பெருக்கியாக உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் இதில் கேட்கும் நாதம் சற்று குறைவாகவேயிருக்கும். ஸ்டிறிங் (Stringed Violin) 7 தந்திகளுடைய பிடிலாகும். இதில் 3 தந்திகள் இரட்டிக்கப்பட்டிருக்கும். பிடில் செய்வதற்கு சாரல்கள் உள்ள மரம் ஏற்றது. மேபிள் மரம், மிகவும் உத்தமமானதாகும். பிடில் முழுவதும் மரத்தினாலே செய்யப்பட்ட வாத்தியமாகும். ஸிகமூர், ஸில்வர் பைன் ஸிடர், ஸ்ப்பரூஸ் போன்ற மரங்களும் பிடில் செய்வதற்கு உபயோகப்பட்டது.
நரம்புகளினாலும் உலோகங்களினாலும் செய்யப்பட்ட தந்திகள் இதில் உபயோகிக்கப்படுகின்றன. பிடில் முழு அளவு, முக்கால் அளவு அரையளவு வித்தியாசங்களுண்டு. நீளத்திற்கேற்ற வாலும் பிடில்களுக்குண்டு. குறிப்பிட்ட மரங்களை அளவாக வெட்டி பதப்படுத்தி நிழலில் உலர்த்தி உபயோகிக்கப்படுகிறது. இரண்டு நீண்ட சதுர மரத்துண்டுகளிலிருந்து மேற்பாகமும் அடிப்பாகமும் சமவளவாகக் குடையப்பட்டு விலாப்பலகையில் நடுவில் ஒட்டப்பட்டுள்ளது. சாதாரண பிடியிலுள்ள விலாப்பலகைகள் இதில் கிடையாது. இதில் சட்டம் (Bass bar) தனியாக ஒட்டப்படாமல் மேற்பலகையுடனேயே சேர்ந்துள்ளது.
பிடிலில் அடிப்பலகை அழுத்தமாகவும் கெட்டியாகவுமிருக்கும். வயலினில் பேசும் தந்திகளின் நீளம் (Speaking lenth of the string) 13 அங்குலமாகவிருக்கும். விரல் பலகை பிரடைகள், தந்தி தாங்கி, மேல் மெட்டு முதலியவற்றிற்கு கருங்காலி மரத்தைப் பயன்படுத்துவார்கள். வில் (Bow) செய்வதற்கு பிறேஸில் ஸ்னேக் பயன்படுத்துவர். வில்லிலுள்ள நார்கள் மிருகங்களின் உரோமத்தினாலும் மரத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளன. வில்லு மிகவும் அவசியமானதாகும். தந்திகளின் மேல் வில்லொன்றைக் குறுக்காகச் செலுத்துவதன் மூலம் ஒலி எழும்புகின்றது. இத்தாலியர் இதனை உருவாக்கினர். 11ம் நூற்றாண்டில் பிரென்சு (பிரித்தானியா) மன்னன் 9வது சாள்ஸ் 1560ம் ஆண்டில் 24 வயலின்கள் செய்வதற்கு ஆணையிட்டதாகக் கூறப்பட்டது.
பிடிலின் பாகங்களில் அடிப்பலகை மேற்பலகை, 6 விலாப்பலகைகள் f – holes (Sound holes) இவை க வடிவத்தில் அதாவது மேற்பலகையில் நடுவில் குதிரை எனப்படும் பாலம் (Bridge) இரு பக்கங்களையும் தாங்கிப்பிடித்திருக்கும். இரு பக்கங்களையும் சரியான நிலையில் வைத்திருக்கும். குதிரைக்கு இருபக்கங்களிலும் மேல் பலகையில் துளைக்கப்பட்ட நாதரந்திரங்களிருக்கும். மேல் பாகத்திலுள்ள தந்தி தாங்கி (Tail Piece) உள்ளது. இதன் நீளம் 4 ½ அங்குலமாயிருக்கும். தந்தி தாங்கியின் பாகம் ஒரு நரம்பின் உதவியினாலோ அல்லது ஒரு செப்புக் கம்பின் உதவியினாலோ பிணைக்கப்பட்டுள்ளது. இதனை (End pin) முடிவுத்தாங்கிப் பகுதி என அழைப்பர். மோவாய் தாங்கிப் பலகையாகும். 4 தந்திகள் சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்வதற்குப் பயன்படும் திருகாணிகளாகும். (Tail Piece) முடிவுப் பகுதியின் துவாரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.
பிடிலின் கழுத்துப் பாகத்தை எடுத்துக் கொண்டால் விரல்பலகை (Top nut) இது அடிப்பாகத்திலுள்ள சிறுமரத்துண்டு. இதிலுள்ள 4 காடிகளின் மேல் 4 தந்திகளும் சென்று பிரடைகளில் சுற்றப்பட்டிருக்கும். பிரடைகளின் நீளம் சுமார் 3 அங்குலமிருக்கும். நாதத்தைக் குறைப்பதற்காக குதிரையின் மேல் செருகி வைத்திருப்பார்கள். மேலே கூறிய பாகங்கள் யாவும் கண்களால் நேரே பார்க்கக்கூடிய ஸ்தூல பாகங்களாகும். உட்பாங்களான நாதக்குச்சி (Sound Post) சுமார் 2 ½ அங்குல உயரமிருக்கும். இது சரியாக இருந்தால்தான் நாதம் சுருதியுடனிருக்கும். மேல்நாட்டு சங்கீதமானது 3 ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு 12 சமவளவுள்ள அரை ஸ்வரங்களாகப் பிரிக்கப்பட்ட மேளங்களைக் கொண்டது. சுருதிக்கேற்றவாறு சாரீரத்தை மாற்றுவது போல வாத்தியத்திலும் சுருதியை மாற்றுவார்கள். பிடிலை சுருதி வாத்தியம், லய வாத்தியம், சங்கீத வாத்தியம், சாதக வாத்தியம், பிரதான வாத்தியம், அயனவாத்தியம், ஸ்திர வாத்தியம், சர வாத்தியம், கச்சேரி வாத்தியம், தேவாலய வாத்தியம் யுத்த களத்தில் உபயோகிக்கப்பட்ட வாத்தியம் பாமரஜனகான வாத்தியம் விளம்பர வாத்தியம், பிரதர்சன வாத்தியம், குருட்டு வாத்தியம், பக்க வாத்தியம் என்று பல பெயர்களுண்டு. வில் போட்டு வாசிக்கப்படும் தந்தி வாத்தியம் முதன் முதலில் இந்தியாவில்தான் உற்பத்தியாயிற்று என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். ராவணா அஸ்திரம் என்று கூறப்பட்ட இது வில்லைக் கொண்டு வாசிக்கப்பட்டது.
கர்நாடக இசையை வயலின் வாத்தியத்தில் வாசிக்க முடியும் என்று கண்டுபிடித்தவர் பாலஸ்வாமி தீட்ஸிதராவார். மேல்நாட்டு இசையைக் கற்று பின்னர் கீழ்நாட்டு இசையிலும் தேர்ச்சி பெற்றார். கர்நாடக இசைக்கச்சேரிகளில் இன்றியமையாத பக்கவாத்தியமாகவும், தனி இசை (Solo) வாத்தியமாகவும் இருந்து வருகிறது. பெண்களின் குரலுக்கும் ஆண்களின் குரலுக்கும் தகுந்தவாறு சுருதி கூட்டி வாசிக்க முடியும்.
மேல்நாட்டார் தமது முகவாயைப் பிடிலில் பொருத்தியுள்ள கருவியுடன் இணைந்து நின்று வாசிப்பார்கள். வயலின் வாசிப்பில் பிடி வாத்தியம், ஜாரு வாத்தியம் என இரு வகையுண்டு. விரலடியே பிரதானமாக உபயோகிக்கப்படுவது பிடி வாத்தியமாகும். ஜாரு வாத்தியம் வாசிப்பதற்கு பல வருடங்கள் சாதகம் (பயிற்சி) பண்ண வேண்டும். ஜாருவும் பிடியும் ஓரளவுடன் கலந்துள்ள வாசிப்பே மனோகரமாயிருக்கும். வயலின் ஒரு பகுத்வனி வாத்தியமாகும். 2 ஸ்வரங்களை ஒரே சமயத்தில் இதில் இசைக்கலாம். கேள்வி ஞானமும் ஞாபக சக்தியும் மிக அவசியம். ஸ்வரஸ்தான அடையாளமின்மையால் செவியினால் கேட்டே கண்டுபிடிக்க வேண்டும். ஸ்வரங்களை காதினால் கேட்டு விரல் பலகையில் ஸ்வரஸ்தானங்களைப் பிடித்து வாசிக்க முடியும்.
கர்நாடக இசையில் வயலின் வாத்தியத்தை தரையிலிருந்து வாசிக்க வேண்டும். இடது காலை வலது தொடைப்பகுதிக்குள்ளே மடக்கி வலது காலை சிறிது மடக்கி நீட்டி நிமிர்ந்து சரியாக உட்கார வேண்டும். வயலினை எடுத்து மேல்ப்பகுதியை இடது தோள் மேல் சாத்திக் கொண்டு தன் தாடையில் தங்க வைத்து பின் இடது பக்க குதிகால் மேற்பிடித்துக் கொண்டு விரல்பலகையில் இடது கை விரல்களால் இணைத்து தந்திகளுக்கு அழுத்தம் கொடுத்து சுருதி சேர்த்து வில்லினை பாலத்திற்கும் விரல்பலகைக்குமிடையிலுள்ள தந்திகளில் குறுக்காகப் போட்டு வாசிப்பார்கள். வில்லிற்கு றொசின் எனப்படும் ஒரு திரவக்கட்டியினால் பூசிப்பாவிக்கப்படுகின்றது.
வயலின் வாத்தியம் வாசிக்கும் முறையை பயிலுபவர்களுக்கு செய்கை முறை மூலம் நேரடியாகக் காண்பித்தால்தான் விளக்கம் புரியும். எழுத்து மூலம் எல்லோருக்கும் புரியாது. வயோலா, செல்லோ மிகப் பெரியது. சிறு நாற்காலியிலிருந்து தலைகீழாக வைத்து வாசிக்க வேண்டும். ஆரம்பத்தில் வயலின் வாத்தியம் வில் போட்டு வாசிக்க வேண்டும். ஆரம்பம் கஷ்டமாக இருந்தாலும் சுருதி ஸ்வரஸ்தானங்களை அவதானித்து நன்கு பயிற்சி பண்ண பின்னர் இலகுவாகவிருக்கும். இந்தியாவில் வயலின் வாத்திய மேதைகளான லால்குடி ஜெயராமன், எம்.எஸ் அனந்தராமன், எம்.எஸ் கோபாலகிருஷ்ணன், மைசூர் சௌடையா, ஜே.ஆர்.கிருஷ்ணன், டி.என் கிருஸ்ணன், குன்னக்குடி வைத்தியநாதன், கன்னியாகுமாரி கண்டதேவி விஜயலக்சுமி, மணிபாரதி இன்னும் பலருள்ளனர். இசைஞானி இளையராஜா தனது இசையமைப்புகளுக்கு நிறைய வயலின் வாத்தியத்தை கையாண்டார்.
இந்தியாவில் வடிவேலுப்பிள்ளை புதுக்கோட்டை நாராயண ஸ்வாமிஐயர் சீர்காழி நாராயண ஸ்வாமிப்பிள்ளை திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், பிடில் வெங்கோபராவ், திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை வயலினில் தீவிர சாதகம் பண்ணி திறம்பட வாசித்து கல்பித சங்கீதத்தையும் விமரிசையாக வாசிக்கலாம் என்பதை ஸ்தாபித்தார்கள். பயிற்சி சாதகம் பண்ணப் பண்ணத்தான் வாத்தியங்களில் நாதம் வந்து கொண்டே இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போ இசைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. முறையாகக் கற்று சாதகம் பண்ணினால் சிறுபராயத்திலிருந்தே மிகவும் திறமையாக பிடிலை வாசிக்க முடியும். முன்பெல்லாம் இலங்கையிலுள்ளவர்கள் இந்தியா சென்றே இசையைக் கற்றார்கள். வசதி வாய்ப்பு கிடைக்காதவர்கள் இலங்கையிலே கற்கலாம். எதற்கும் பயிற்சி முக்கியமாகும். வாய்ப்பாட்டும் தெரிந்திருந்தால் வாத்தியத்தில் பாடுவது போலவே இருக்கும்.
இலங்கையில் கர்நாடக இசை வயலின் வித்துவான்கள் எனப்படுவோர் டி.வி. பிச்சையப்பா, வி.கே குமாரசாமி, சண்முகானந்த சர்மா, சங்கரய்யர், தனதேவி, மித்ரதேவி, ஏ.சிவநாதன், ராதாகிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன், பாக்கியலக்சுமி, ஜீவன் யோசப் அருளானந்தம், விநாயகமூர்த்தி ஆகியோர் பிரபலமானவர்கள். வயலின் மேதைகள் பலர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவர்களது மாணவ மணிகள் வழி வழியாக இவற்றை இசைத்து வருகிறார்கள். 1824ம் ஆண்டில் எட்டயபுரம் சமஸ்தான வித்துவான் (Stringed instrument) தந்திகளான வயலின் இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். கி.பி 19ம் நூற்றாண்டிலிருந்து வயலின் இன்றியமையாத கருவியாகவுள்ளது. தற்போது இருவயலின்கள் சேர்ந்தமாதிரியும், 7 தந்திகளுடனும் மின்சார வயலின்களும் (Electric Violin) உள்ளன. புதுவடிவங்களில் பிடில் உருவாக்கப்பட்டு இசைக்கப்பட்டு வருகின்றன.
வயலின் சுருதிகள் எத்தனை கூட்டினாலும் 3 ½ ஸ்தாயில் வைத்து வாசிக்கும்போது மிக இனிமையாக இருக்கும். பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதற்கு வேறாக ஒரு பிடிலையும் தனியாக வாசிப்பதற்கு ஒரு பிடிலையும் பாவிப்பது நல்லது. வயலின் பெட்டிகள் (கறுப்பு நிறம்) அதற்கேற்றவாறு அமைந்திருப்பதைக் காணலாம். பிடில் வாத்தியத்தை பிடி கொடுத்து இசைத்தால் என்றும் இனிமையாகவிருக்கும்.
‘வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’
