— கருணாகரன் —
(நொயல் நடேசனின் வெளிகள் ஆயிரம் என்ற விமர்சன நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)
‘வரலாற்றைப் படித்துச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலக்கியப் புனைவுகளே மனிதர்களுடைய மனக்குகையின் வக்கிரங்களை அறிய வைக்கும் சாதனம். நமது சமூகம் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி விடுவதன் மூலம் நடந்தவை, மீண்டும் நடக்கின்றன’ என்று இந்த நூலில் மிகச் சரியாகச் சொல்கிறார் நடேசன். நடேசனுடைய இந்தக் கருத்து, இலக்கிய விமர்சனத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், அதற்கும் அப்பால் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பண்பாடு, சமூகவியல் என அனைத்துப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனம் அல்லது உள்ளார்ந்த மதிப்பீடு எனலாம்.
ஈழத் தமிழ்ச்சமூகம் தன்னை முன்கொண்டு செல்வதற்காக உயிரையும் அர்ப்பணித்துப் போராட முற்பட்டது. ஆனால் இன்று அதற்கு மாறாக மிகப் பின்சென்று, பல நிலைகளிலும் பலவீனப்பட்டுள்ளது. களையக் கடினமான அளவுக்குப் பிற்போக்கான தாழ்நிலை உளச்சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், பெருந்திரள் மக்களின் அறிவுச் சோம்பலும் சுயநலனுமே. உண்மையின் மீதான நாட்டமும் அறிதலின் வேட்கையும் தேடலுமின்றிச் சோம்பி, இருளடைந்து கிடப்பதையிட்ட கவலைகள் பெருந்திரள் மக்களிடமில்லை. அதனால்தான் அவர்களால் இருட்சிக்கல் நிறைந்த பாதாழத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. இதை உணர்ந்து கொண்டு, தம்மை மீட்டெடுப்பதற்குப் பதிலாக வெளியே காரணங்களையும் குற்றவாளிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் துயரத்தைக் குறித்த பிரக்ஞையோடு தன்னுடைய இலக்கிய வாசிப்புகளை இங்கே முன்வைத்திருக்கிறார் நடேசன்.
நடேசனுடைய வாசிப்புகள் ஒரு முகப்பட்டு, ஒடுங்கியவையல்ல. ஒரு நல்ல வாசிப்பாளருக்கு இருக்கக் கூடிய பொதுப்பண்புக்கு அமைய அல்லது தேடலின் அடிப்படையில் பரந்தது உலகளாவியது. என்பதால் சமனிலையுடன் அறிவியற் தருக்கத்தின் அடிப்படையில் பலவற்றையும் பேச முற்படுகிறார். (சிலவேளை சற்று விலகியும்) அப்படிப் பரந்த தளத்தில் இருப்பதால் அது பன்முகத்தையுடையதாக, அறிவுபூர்வமாக மாறியுள்ளது. இந்த நூலில் அதற்கான அடையாளங்களைக் காணலாம்.
இதைப் படிக்கும்போது க.நா.சுவின் ‘உலக இலக்கிய’த்தைப் படித்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதில் உலகளாவிய இலக்கிய அறிமுகத்தையும் அதனுடைய அடிப்படைகளையும் க.நா.சு செய்கிறார். நடேசன், ஈழத்து இலக்கியப் பிரதிகளை உலக இலக்கிய, அறிவியக்கப்பரப்பில் வைத்துப் பேசுகிறார்; மதிப்பிட முற்படுகிறார். அப்படிப் பார்க்கவும் பேசவும் வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாகும். உலகளாவிய பார்வையும் அனுபவச் சேகரிப்பும் இல்லையென்றால், எதுவுமே ஒடுங்கிச் சுருங்கித் தட்டையாகி உலர்ந்து விடும். அரசியலும் இலக்கியமும் கலையும் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான்.
அப்படிப் பார்க்கும்போது, ஒரு வகையில் இதொரு Literary guide book. போலுள்ளது. எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், அரசியலாளர்கள், வரலாற்றாளர்கள் என மொத்தச் சமூகத்துக்கும் உதவக் கூடிய Guidebook. இதில் விமர்சிக்கப்படும் அல்லது மதிப்பிடப்படும் ஒவ்வொரு பிரதியும் ஒவ்வொருவருடைய எழுத்தும் அவற்றின் வரலாற்றுப் பின்னணி, சமூக அரசியற் சூழல் போன்றவற்றோடு உலக இலக்கிய – கோட்பாட்டுப் போக்குகளையும் இணைத்தே பார்க்கப்படுகிறது. இவற்றை மேலும் விரித்து, மேலும் ஆழமான விமர்சனப் பார்வையை முன்வைத்து நடேசன் எழுதியிருக்கலாம். அப்படி எழுதப்பட்டிருந்தால், இந்த நூலின் தன்மையும் பெறுமானமும் இன்னொரு பரிமாணத்தை அடைந்திருக்கும். ஆனால் நடேசனுடைய நோக்கம், இறுகிக் கிடக்கும் கட்டாந்தரையில் ஈரத்தைப் பாய்ச்சி, முதல் உழவைச் செய்வதேயாகும். அந்த அடிப்படையிற்தான் இவை அவருடைய noelnadesan.comஇணையத் தளத்திலும் முகநூலிலும் எழுதிப் பகிரப்பட்டன. இதற்கே கடுமையான உழைப்பு வேண்டியுள்ளது. அந்த உழைப்புக்குரிய மதிப்பை அளித்து, இதைத் தமிழ்ச் சமூகம் எந்தளவுக்கு உள்வாங்கிக் கொள்ளும் என்பது கேள்வியே.
தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.
க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம், சி.சிவசேகரம், எம்.ஏ. நுஃமான், முருகையன், மு. பொன்னம்பலம் என ஈழத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்தை முன்னெடுத்தோரின், பங்களித்தோரின் காலம் (1960 – 1980 களின் நடுப்பகுதி வரை) ஒன்றிருந்தது. இதற்கு நிகராக அரசியல், சமூகவியல் போன்றவற்றிலும் கருத்தாடல்கள் செழுமையோடு நிகழ்த்தப்பட்டன. இதனுடைய அடுத்த கட்டமாக இந்த விமர்சனங்களும் விவாதங்களும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்த – புதிய தலைமுறை அதில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அது பெரிய அளவில் நடக்கவில்லை. இளங்கோ (டிஸே தமிழன்), ஜிஃப்ரி ஹாசன், அருண்மொழிவர்மன், கிரிசாந், மிஹாத், றியாஸ் குரானா, ரூபன் சிவராஜா போன்ற சிலரே ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமும் சில மட்டுப்பாடுகள் உள்ளன.
விமர்சனங்கள் முன்வைப்பதையும் விவாதங்கள் நிகழ்த்துவதையும் எதிர்ச் செயற்பாடாகக் கருதும் மூடத்தனமொன்று வளர்ந்து பெருகியுள்ளது. அவ்வாறாக இயங்குவோர் எதிராளிகளாகக் கட்டமைக்கப்பட்டனர்; அப்படிப் பார்க்கப்படுகிறார்கள். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று நெஞ்சை நிமிர்த்திய சமூகம், மாற்றுச் சொல் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல், பயங்கரமான எதிர் ஆயுதமாக அதைக் கண்டு அஞ்சிச் சுருண்டு விடுகிறது, பதறுகிறது. அதை எதிர்கொள்ளத் துணிவற்றுப் பழித்துரைக்கிறது. இதனால் விமர்சனமும் விவாதங்களும் ஒடுங்கிச் சிறுத்து விட்டன. இந்த இறுகிய – இருளடைந்த – போக்கில் ஒரு சிறிய அசைவையேனும் நிகழ்த்த வேண்டும், நிகழ்த்திப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு நடேசன் போன்ற சிலர் முயற்சிக்கின்றனர். அந்த முயற்சியின் வெளிப்பாடே இந்த நூலாகும். ஏறக்குறைய இத்தகைய முயற்சிகள் – விமர்சனங்கள் – ஒளியூட்டும் முயற்சிகளேயாகும்.
இந்த நூலில் 50ஆண்டுகளுக்குட்பட்ட ஈழத்து இலக்கியப் பிரதிகள் சில விமர்சனத்துக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. எஸ்.பொவின் ‘தீ’, ‘சடங்கு’ மற்றும் ‘நனவிடை தோய்தல்’, தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ மு.பொவின் ‘சங்கிலியன் தரை’ தொடக்கம் தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ வரையில் 17 நாவல்கள் எடுத்துப் பேசப்பட்டுள்ளது. அவ்வாறே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சாத்திரி, மு. சிவலிங்கம், தமயந்தி, கோமகன் தொடக்கம் அனோஜன் பாலகிருஸ்ணன் வரையானோரின் சிறுகதைகளைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. கூடவே கவிதை மற்றும் தன்வரலாறு உள்ளிட்ட அ-புனைவு நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார் நடேசன். இதில் தீ, சடங்கு போன்ற பிரதிகள் மீள்வாசிப்புச் செய்யப்பட்டுள்ளன. தீ, சடங்கு என்ற இரண்டு நாவல்களும் 1960 களில் வெளிவந்தவை. அப்போது இரண்டைப் பற்றியும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதனால் பரந்த வாசிப்புக்குள்ளாகின. அது எஸ்.பொவுக்கு பரந்த அளவில் அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. மட்டுமல்ல, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு புதிய போக்கையும் உணர்த்தியது. அப்படியே செல்விலக்கியத் தகுதியையும் பெற்று விட்டன. பின்னாளில் எழுதும் சாரு நிவேதிதா, ரமேஸ் பிரேதன் போன்றோருக்கு முன்னோடியாக எஸ்பொவும் அவருடைய எழுத்துகளும் இருக்கின்றன.
இப்பொழுது நடேசன் இவற்றை மீள எடுத்துப் பேசியிருப்பதன் மூலம் மீளவும் ஒரு அசைவு இவற்றின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதோடு முந்திய விமர்சனங்களுக்கும் – பார்வைகளுக்கும் – நடேசன், இளங்கோ (டிஸே தமிழன்) போன்றோர் முன்வைக்கும் இன்றைய பார்வைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் வாசகர்களாகிய நாம் உணர வாய்த்துள்ளது. கிளாஸிக்குகளுக்கு இவ்வாறான ஒரு சிறப்புத் தகுதி – வாய்ப்பு – எப்போதும் உண்டு. அவை தலைமுறைகள் தோறும் வாசிக்கப்படுகின்றன. காட்சிக் கலைகள் என்றால் தொடர்ந்து பார்க்கப்படுகின்றன. இதன்வழியே தலைமுறை தலைமுறையாக ஒரு பயில்தலும் நிகழ்கிறது. அந்தப் பயில்தலின் இத்தகைய விமர்சனங்களும் ஒன்று. என்பதால் நடேசனும் இவற்றில் தன்னுடைய கவனத்தைக் கொண்டுள்ளார். மட்டுமல்ல, அண்மைக்காலத்தில் வந்த புதிய பிரதிதிகள், இளைய படைப்பாளிகளின் முதற்பிரதிகளுக்குக்கூட நடேசன் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். இது எழுதுவோருக்கும் வாசகர்களுக்கும் தன்னுடைய வாசிப்புக்கும் அவர் அளிக்கின்ற ஜனநாயக மதிப்பாகும்.
படைப்புக்கு நிகரானதே விமர்சனமும். என்பதால்தான் அதை ‘விமர்சனக் கலை’ எனக் கூறுவதுண்டு. விமர்சனம் இரண்டு வகையில் உதவும் – தொழிற்படும். ஒன்று, பிரதியை அல்லது முன்வைக்கப்பட்டுள்ள படைப்பை – ஆக்கத்தை – நிகழ்வை அல்லது இயக்கத்தை – அது பல கோணங்களில் பகுத்து ஆய்வு செய்வதாக. இரண்டாவது, பிரதியில் அல்லது படைப்பில் – ஆக்கத்தில் – நிகழ்வில் அல்லது இயக்கத்திலும் அதற்கு வெளியிலும் என இரண்டிலும் சமனிலை கொண்டு ஊடாடிப் பல திறப்புகளைச் செய்வதாக. நடேசனுடைய முயற்சி இதை நோக்கியதாக உள்ளது. இனி இதைக் குறித்து விவாதிப்பதும் உரையாடுவதும் பொதுவெளிக்குரிய கடமையும் பண்புமாகும். ‘வெளிகள் ஆயிரம்’ என்று இந்த நூலுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஆமாம்,வெளி என்பதே அனைத்துத் திசைகளையும் அனைத்துக் கோணங்களையும் தன்னுள் கொண்டு விரிந்தது. என்பதால் அதற்குத் திசைகள் பல்லாயிரம். அத்தகைய வெளிகள் ஆயிரமாயிரத்தைக் கொண்ட(திசைகள் பல்லாயிரத்தை உடைய) சிந்தனையும் அணுகுமுறையும் சிறப்புக்குரியது. மகிழ்ச்சி.