கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? (வாக்குமூலம்-92)

கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? (வாக்குமூலம்-92)

 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

    — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

‘வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழு’ (Northern and Eastern Provinces civil Society Group) வின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய கூட்டமொன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் 18.11.2023 அன்று பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வாளர்களாகக் கருதப்படும் யதீந்திரா-நிலாந்தன்-தனபாலசிங்கம் (தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) ஆகியோர் உரையாற்றியிருக்கின்றனர்.

முதலில் எழுகின்ற கேள்வி என்னவெனில், இந்த ஒற்றுமை முயற்சியின் உள்ளார்ந்த நோக்கம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? 

ஏனெனில், தமிழ் அரசியல் கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-ஈரோஸ் ஜனநாயக முன்னணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-அகில இலங்கை தமிழர் மகா சபை-தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோ தெரியவில்லை. ஆனாலும் தமிழ் ஊடகங்களால் தமிழ் தேசியக் கட்சிகள் எனும் வகைப்படுத்தலுக்குள் அடக்கப்படாத தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினதும் சமத்துவக் கட்சியினதும் தலைவர்கள் இக் கூட்டத்தில் பார்வையாளர்களாகப் பங்குபற்றியுள்ளனர். ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்பதற்கான வரைவிலக்கணம் யாது? இதனை இக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியதாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே, தமிழ் ஊடகங்களால் ‘தமிழ்த் தேசிய கட்சிகள்’ என்று குறிசுடப்பட்டுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தமிழ் மக்கள் கூட்டணியும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆக தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எனும் தகுதியுடன் வடக்கு கிழக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் மொத்தம் பதின்மூன்று தமிழ் அரசியல் கட்சிகளில் ஏழு கட்சிகள் இக்கூட்டத்தில் (காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம்) கலந்து கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று குறிசுடப்பட்டவற்றில்  இலங்கைத் தமிழரசுக் கட்சி-‘ரெலோ’-‘புளொட்’-தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (பெயர் மாற்றம் பெற்றுள்ள முன்னாள் ஈ பி ஆர் எல் எப்) ஆகிய நான்கு கட்சிகளே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இந்த முயற்சியின் ‘முதற்கோணல்’ இது.        

இக்கூட்டத்தில் உரையாற்றிய யதீந்திராவின், ‘யுத்தம் முடிவுற்றபோது தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது பல கட்சிகள் இருக்கின்றன’. என்னும் கூற்றைவைத்துப் பார்க்கும்போது, யுத்தம் முடிவுற்ற நேரத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழரசுக் கட்சி-அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்-ரெலோ-ஈ பி ஆர் எல் எப் ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டே. 

அப்படியாயின் அப்போது (யுத்தம் முடிவுற்றபோது) இக்கூட்டமைப்புக்கு வெளியே நின்றிருந்த ‘புளொட்’-தமிழர் விடுதலைக் கூட்டணி-ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-ஈரோஸ் ஜனநாயக முன்னணி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகியன தமிழ் அரசியல் கட்சிகள் இல்லையா? (யுத்தம் முடிவுற்ற பின்னர் தேர்தல்கள் திணைக்களத்தில் அங்கீகாரம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளான சமத்துவக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இங்கு சேர்க்கப்படவில்லை) இதனை யதீந்திரா தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டத்தில் உரையாற்றிய நிலாந்தனின், ‘தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஓரணியாக நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம். ஐக்கியம் இல்லையேல் எதுவும் இருக்காது’. என்ற கூற்றை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான 2001 இலிருந்து 2009 வரையிலான காலப்பகுதியில் இக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் மனம் கொண்டிருக்கும் ஐக்கியமும் அதாவது உடையாத கூட்டமைப்பும் (பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அரசியல் பலமும்) அதற்குப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலமும் இருந்தபோதும் தமிழ் மக்களின் வாழ்வியலில் நேர்மறையான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையே? (இருக்கவில்லையே?) இதற்கு நிலாந்தனின் பதில் என்ன?

தனபாலசிங்கம் பின்வருமாறு உரையாற்றியுள்ளார்.

‘தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம், தேசத்தைக் கட்டி எழுப்புவதாக அமைய வேண்டும். மாறாக, வரும் தேர்தல் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாக அமையக்கூடாது. தேர்தல் இந்த இலக்கின் ஒரு பகுதியாக அமைந்திருக்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் கடந்த கால அனுபவங்கள் உண்டு. கட்சிகளுக்கு மட்டுமல்ல, புத்தி ஜீவிகள்-ஏன் பொதுமக்களுக்கும் அனுபவமுண்டு. ஆனால் கடந்த கால அனுபவங்களில் இருந்து எவருமே எதையும் கற்றுக் கொள்ளவில்லை. நிலைமைகள் பெரியளவில் மாறிவிட்டன. முன்னர் அரசியலை நோக்கியது போன்று இப்போது பார்க்க முடியாது’.

அப்படியாயின், 2001 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ எனும் ஐக்கியம், தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கமில்லாமல் வெறும் தேர்தல் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் அமைந்ததா? அதனால்தான் அது யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்து அதன்பின் புலிகளின் இராணுவப் பிரசன்னம் அற்றுப்போனதால் உடைந்துபோனதா?

எது எப்படியிருப்பினும், இக்கூட்டத்தின் உடனடி நோக்கம் என்னவெனில், புலிகள் 2001 இல் ஏற்படுத்திய கூட்டமைப்பிலிருந்து 2009 இல் யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை வெளியேற்றிவிட்டு ‘புளொட்’டை 2012இல் இணைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சி-‘ரெலோ’-‘புளொட்’-ஈ பி ஆர் எல் எப் ஆகிய நான்கு கட்சிகளும் உருவான ‘பழைய’ கூட்டமைப்பு அண்மையில் உடைந்து தமிழரசுக் கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தமக்குள் இணைந்து ‘குத்துவிளக்கு’ அணியெனும் ‘புதிய’ கூட்டமைப்பாகவும் உடைந்துவிட்டதால் இந்த உடைந்த துண்டுகளை மீண்டும் ஒட்டவைத்துப் ‘பழைய’ கூட்டமைப்பை மீண்டும் உருவாக்குவதாகவே இருக்கிறது. இந்த ‘ஒட்டு வேலை’ (Tinkering) எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பின்புலத்திலும் தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ள கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் ‘முன்னர் அரசியலை நோக்கியது போன்று இப்போது பார்க்க முடியாது’ என்ற அவரது கூற்றின் அடிப்படையிலும் விடயங்களை நோக்கும்போது, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியமல்ல இன்று தமிழ் மக்களுக்குத் தேவையானது.

கடந்த கால அனுபவங்களிலிருந்து படித்துக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், இந்தியாவை முழுமையாகவும் உளப்பூர்வமாகவும் அனுசரித்துப் போகக்கூடிய-இந்தியா நம்பிக்கை வைக்கக் கூடிய-13 ஆவது திருத்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கத்தை ஒருமித்த குரலிலும் ஒற்றைக் கோரிக்கையாகவும் வலியுறுத்தக்கூடிய மாற்று அரசியலை நோக்கிய வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் ஐக்கியமே இன்று தேவையானது.

எனவே, வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூகக் குழு’ தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளையென்றாலும் சரி அல்லது தமிழ் அரசியல் கட்சிகளையென்றாலும் சரி இவற்றை ஐக்கியப்படுத்தும் செயற்பாடுகளில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காது ‘மாற்று அரசியல்’ ஒன்றினை நோக்கி மக்களை ஐக்கியப்படுத்தும் களச்செயற்பாடுகளில் இறங்குவதே பயன் தரும். சும்மா தமிழ்த் தேசியக் கட்சிகளை அல்லது தமிழ் அரசியல் கட்சிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு உபதேசம் செய்வதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ‘பழைய’ வண்டிகளை (தமிழ்த் தேசிய கட்சிகளை) Tinkering செய்து சரிவராது. ‘புதிய’ வண்டியைத்தான் (மாற்று அரசியலை) வாங்கி ஓட்ட வேண்டும். இது அதிக விலையானதாக இருந்தாலும் அதிக வினைத்திறமையுடையதாக விளங்கும்.