“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​ அங்கம் – 08)

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​ அங்கம் – 08)

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

             — செங்கதிரோன் —

பாம்பு ஒருவருக்குத் தீண்டிவிட்டால் அவரைச் சற்றும் தாமதியாமல் பாம்புக்கடி வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும். பாம்பு தீண்டிய செய்தியைக் கொண்டுவரும் ஆளை-தூதனைக் கண்ட மாத்திரத்திலும், அவன் கூறும் முதல் வாக்கியத்தைக் கொண்டும், தூதன் வந்து செய்தி சொல்லும்போது தாம் இருந்த நிலையைக் கொண்டும், செய்தி சொல்லும் நேரத்தைக் கொண்டும் பாரம்பரியப் பாம்புக்கடி வைத்தியர்கள் தீண்டியது விஷப்பாம்புதானா, பாம்பு தீண்டியவருக்கு எந்தளவு விஷம் ஏறியுள்ளது, அக்கடி மரணத்தைத் தரவுள்ள-சிகிச்சை செய்யமுடியாத – காப்பாற்றமுடியாத ‘காலக்கடி’ யா என்றெல்லாம் அறியும் அறிவும் திறமையும் படைத்தவர்களாம். இவ்விடயத்தை எல்லாம் பார்த்துத்தானாம் பாம்பு தீண்டிய நோயாளியைச் சிகிச்சைக்காகப் பாரமெடுப்பார்களாம். சிகிச்சையளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று தீர்மானித்தால் நோயாளியை வீட்டுக்குக்கொண்டு செல்லும்படி திருப்பி விட்டுவிடுவார்களாம்.

செய்தி கொண்டுவரும் தூதன் எந்தத் திசையிலிருந்து குரல் கொடுக்கிறான், எப்படிக்குரல் கொடுக்கிறான் என்பதை வைத்தும் தீர்மானங்களை எடுப்பார்களாம். கடிவாயைப் பார்த்து என்ன சாதிப்பாம்பு தீண்டியிருக்கிறது என்றும் சொல்வார்கள். நோயாளியின் உடல்மொழியை – அறிகுறியை வைத்தும் கண்டு பிடிப்பார்களாம்.

விஷப்பாம்புகளில் நாகசாதி, புடையன்சாதி, வழலைச்சாதி, சுருட்டைச்சாதி என்றெல்லாம் உண்டு. தீண்டிய பாம்பின் வகையைப் பொறுத்து வெவ்வேறு உடல் அறிகுறிகளும் பாம்பின் வகைக்கேற்ற வெவ்வேறு சிகிச்சை முறைகளும் உண்டாம்.

சில சாதி நாகபாம்புகள் செல்லும் இடங்களில் புனுகுவாசம் – காய்ச்சிய பாலின் வாசம் – தாளம்பூ வாசம் வீசும்.

பாம்புக்குப் பற்கள் முப்பத்திரண்டு. மேல்வாயிலும் கீழ்வாயிலும் முன்புறமாகப் பக்கத்திற்கொன்றாக நான்கு நச்சுப்பற்கள் நீண்டு உள்வளைந்திருக்கும். இந்நான்கு நச்சுப்பற்களும் காளி, காளாஸ்திரி, நீலி, நீலிகண்டி எனப்படும்.

பாம்பு தீண்டும்போது இந்த நான்கு பற்களும் ஒருமித்துப் பதியாது. தீண்டும் வேகம், தீண்டும்போது பாம்பின் வாய் பொருந்திய இடம் என்பவற்றைப் பொறுத்து பதியும் பல்லின் எண்ணிக்கைகள் வேறுபடும். பதியும் பற்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தீண்டப்பட்டவரின் உடலில் ஏறும் விஷத்தின் அளவு வேறுபடும்.

ஒருபல் பதிந்தால் பாம்பின் விஷமானது தோலையும், இருபற்கள் பதிந்தால் தசையையும், மூன்றுபற்கள் பதிந்தால் நரம்பு மண்டலத்தையும், நான்குபற்களும் பதிந்தால் இவையெல்லாவற்றையும் தாக்கும். பாம்பு தீண்டியவருக்கு மிளகைச் சாப்பிடக் கொடுத்தால் உறைக்காது. பாம்பு தீண்டினால் தீண்டப்பட்டவரை வைத்தியரிடம் கொண்டுசெல்லுமுன் முதலுதவிச் சிகிச்சைகளாக கடிவாயின் மேற்பகுதிக்கு விஷம் ஏறும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடிவாய்க்குச் சற்று மேலேயுள்ள உடற்பகுதியில் இறுக்கிக் கட்டுதல் – கடிவாயைக் கீறி விஷ இரத்தத்தை வெளியேற்றல். – வாயில் புண் இல்லாதவர்களைக் கொண்டு கடிவாயிலிருந்து விஷ இரத்தத்தை உறிஞ்சி எடுத்து வெளியே துப்புதல், – நோயாளியைக் கூடுமானவரை படுக்கவைத்தல், – வேப்பெண்ணெய், பசுநெய், எலுமிச்சம்புளி, மனித மூத்திரம் என்பவற்றில் எதையாவது உட்கொள்ளக் கொடுத்தல் என்பவைகள் உள்ளன.

மேற்கூறப்பெற்ற விபரங்களடங்கியதாக பாம்புக்கடி – அதற்குரிய வைத்தியம் பற்றியெல்லாம் ஒரு ‘வாகடம்’ மே வாசித்து முடித்தாள் கனகம்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசவநாதம் எழுதிய புத்தகமொன்றில் பாம்பு தீண்டியவர்களுக்கு வாழைத்தண்டுச் சாறைப் பருக்க வேண்டும் என்று எப்போ ஒருநாள் வாசித்ததும் கோகுலனின் ஞாபகத்திற்கு வந்துபோனது.

தாயார் சொன்னவிடயங்களையெல்லாம் எந்தக் குறுக்கீடுகளுமின்றி அமைதியாகக் கேட்ட கோகுலன், “அம்மா! திருக்கோயில் விஷக்கல்லைப் பற்றிச் சொல்லல்லயே!” என்றான்.

“சொல்லாம உடுவனா மனே! அதத்தானே நீ முதல்ல கேட்ட. இனி அதத்தான் சொல்லப்போறன்” என்ற கனகம் தனது விளக்கத்தைத் தொடர்ந்தாள்.

திருக்கோவில், பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பொத்துவிலிருந்து வடக்கே 20 கட்டைத் (மைல்) தூரத்திலுள்ளது. பிரதான வீதியிலிருந்து வலதுபுறம் கடற்கரையை நோக்கித் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் வீதி பிரியும் சந்தியிலிருந்து சுமார் 30 யார் தூரத்தில் வீதியின் வலது புறத்தில் நடப்பட்ட விஷம் அகற்றும் லிங்கவடிவிலான கல் உள்ளது. வீதியின் எதிரே மறுபுறத்தில் சிறுநாகதம்பிரான் ஆலயமும் உள்ளது. விஷக் கல்லின் உயரம் நில மட்டத்திலிருந்து ஒரு அடி இருக்கும்.

பல வருடங்களுக்கும் முன்னர் “ஜெயின் மௌலானா” எனும் இஸ்லாமிய மதப்பெரியார் ஒருவரினால் நடப்பட்ட கல் இதுவென்றே ஊர்மக்களால் வழிவழியாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது பூர்வீகம் பொத்துவில் என்றும் பேசப்படுகிறது.

ஆனால், 1940 ஆம் ஆண்டு வாக்கிலிருந்து திருக்கோவிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலேயே பரம்பரையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அதனை மிகவும் பயபக்தியுடன்தான் செய்துவருகின்றனர். நாகதம்பிரான் கோயிலுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் பூசை நடத்தி வழிபாடியியற்றுகின்றனர். விஷக்கல்லையும் அவ்வப்போது பாலாபிஷேகம் செய்து பன்னீரால் கழுவிக் சாம்பிராணிப்புகை மற்றும் கற்பூரதீபம் காட்டிப் பராமரித்து வருகின்றனர். இந்தப் பரம்பரையின் முதல் ஆள் சின்னத்தம்பி என்று சொல்லுகிறார்கள். இவர் இப்போது விஷக்கல்லைப் பராமரித்து வருகின்ற திருக்கோயிலைச் சேர்ந்த பூபாலபிள்ளைக்குப் பெரியப்பா உறவுமுறை.

தாயாரிடமிருந்து இந்த விபரங்களைக் கேட்ட கோகுலன் இடை மறித்து “அம்மா! இந்த ஆக்களையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“சின்னத்தம்பிய எனக்குத் தெரியாமனே! பூபாலப்பிள்ளய எண்டா எனக்குத் தெரியும். விஷக்கல்லுப் பூபாலபிள்ள எண்டுதான் அவரச் சொல்லிற. கொட்டான் ஆள். சின்னத் தாடி வச்சிருப்பார்” கனகம் பதில்கூறிவிட்டு மேலும் விபரங்களைத் தொடர்ந்தாள்.

பாம்பு தீண்டியவரைச் சிகிச்சைக்காக விஷக்கல்லுக்குக் கொண்டு போகும்போது அத்தர், பன்னீர், ஊதுபத்திகள், சாம்பிராணி, பசுப்பால் போன்ற பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும். விஷக்கல் வைத்தியம் செய்பவர் முதலில் கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டு நோயாளியின் உடம்பில் ஏறியிருக்கும் விஷம் இறங்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுவார். பின் கடிவாயைக் கூரான போத்தல் ஓடு அல்லது கூரான வேறு ஏதாவதால் சற்று ஆழமாக்கீறி இரத்தம் வரச்செய்து கடிவாயை விஷக்கல்லில் பொருத்தி அமர்த்திப்பிடிக்க கல்லும் கடிவாயை இழுத்துப் பிடிக்கும். கல் விஷம் முழுவதையும் உறிஞ்சி முடித்ததும் கடிவாயைத் தானாகவே விடும். சிகிச்சையின்போது சிலவேளைகளில் நோயாளியை ஒருவர் அல்லது இருவர் பிடித்துக் கொள்வர்.

விஷக்கல்லுச் சிகிச்சை முடிந்ததும் நோயாளியை அருகிலுள்ள கிணற்றில் முழுகவார்த்து மூலிகை மருந்துக்களையும் அருந்தக் கொடுப்பர். சிகிச்சை முடிந்தபின் விஷக்கல்லைப் பாலாபிஷேகம் செய்து பன்னீரால் கழுவி ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகைகள் காட்டி மீண்டுமொரு சிகிச்சைக்கு அதனை ஆயத்தம் செய்வர்.

திருக்கோயில் “விஷக்கல்” குறித்த இவ்வளவு விபரங்களையும் தனது தாயார் மூலம் அறிந்து கொண்ட கோகுலன், “பாம்பு கடிச்ச எல்லாரயும் திருக்கோவில் விஷக்கல்லுக்குத்தான் கொண்டு வருவாங்களா அம்மா” என்று கேட்டான்.

கோகுலன் இக்கேள்வியைக் கேட்டதற்கான காரணமும் இருந்தது. அவன் அன்று காலை கிணற்றடியில் கேட்ட கதைகளின்படி தாமரைக்குளத்துச் சேனையில் வைத்துப் புடையன் பாம்பு கடித்த ஆளைத் திருக்கோவில் விஷக்கல்லுக்குக் கொண்டுபோகாமல் பொத்துவிலுள்ள மாத்தயாவரிட்டதானே கொண்டு போனார்கள் என்பதை மனதில் வைத்துத் தான் இக்கேள்வியைக் கேட்டான்.

“இல்லமனே! விஷக்கல்லுக்குக் கொண்டுவராம வெளிப்பரிசாரியார்மாரிட்டயும் கொண்டுப்போய்க் காட்டிச் சுகமாகியும் இரிக்கி. காரதீவில அந்தநாக்களில பாம்புக்கடி வைத்தியத்துக்குக் கயிலாயபிள்ளப் பரிசாரியார் பேர்போனவர் எண்டு கதைப்பாங்க. தம்பிலுவிலில பாலாச்சி எண்ட பொம்பிளயும் பாம்புக்கடிக்கு வைத்தியம் பாத்தெண்டு கேள்விப் பட்டிருக்கன். தம்பிலுவிலில சரணமுத்துப் பரிசாரியாரும் விஷக்கடி வைத்தியத்திற்குப் பேர்போனவர். இப்ப அவர்ர மகன் கதிரமல வாத்தியார் தகப்பனத் தொட்டு பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்து வாறார். பொத்துவிலில சந்திராக்காட அப்பா மாத்தயாவர உனக்குத் தெரியுந்தானே. அத்தாண்ட அப்பாக்கு அண்ணன்முறதானே அவர். நமக்குச் சொந்தம். அவரும் பாம்புக் கடிக்கு வைத்தியம் பாப்பவர்தான்” என்று கோகுலனின் கேள்விக்கு விளக்கமாகப் பதிலளித்தாள் கனகம்.

கோகுலன் இந்த வயதிலேயே எல்லாவிடயங்களையும் எவ்வளவு கவனமாகக் கேட்டு அறிந்து கொள்ளுகிறான் என்றெண்ணிய கனகம் பெருமிதமடைந்தாள். கேள்வி அறிவும் முக்கியமானதுதானே என்று நினைத்துக் கொண்டாள். கோகுலனின் ஆர்வத்தைக் கண்ட கனகம் மேலும் சில தகவல்களையும் கூறிவைத்தாள்.

‘விஷக்கல்’ லைப் ‘பாம்புக்கல்’ லென்றும் அழைப்பார்கள். விஷத்தை இறக்கக்கூடிய சிறுசிறு பாம்புக்கற்களையும் மருந்து வேர்களையும் அப்பிரதேசத்தில் வாழ்ந்த குறவர்களிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். அப்போது திருக்கோவில் பிரதேசத்தில் ‘றூபஸ்குளம்’ மற்றும் ‘அலிகம்பை’ ஆகிய இடங்களில் குறவர் சமூகம் கூட்டமாக வசித்து வந்தது.

இந்தக் குறவர் கூட்டத்திலுள்ள ஆண்கள் ஊருக்குள்ளே வந்து ‘குரங்கு’ ஆட்டுவதையும் – பிரம்பினால் செய்த வட்ட வடிவமான மூடியுள்ள பெட்டிகளில் விஷப்பற்களைக் கழற்றிய நல்லபாம்புகளை அடைத்து வந்து ‘மகுடி’ வாசித்துப் பாம்புகளை ஆட்டுவதையும் – காட்டிலே வேட்டை நாய்களைக் கொண்டு மறித்துப் பிடித்த உடும்புகளை வெட்டி உரித்தும், காட்டுப் பன்றிகளை நெருப்பில் பொசுக்கியும் இறைச்சியாக்கிக் கொண்டுவந்து விற்பதையும் – பெண்கள் சோடிகளாக வீடுகளுக்கு வந்து கைச்சாத்திரம் சொல்லிப் பிழைப்பதையும் கோகுலன் கண்டிருக்கிறான். ஆனாலும், அவர்களிடம் விஷக்கல் மற்றும் வேர் மருந்துகளும் வாங்க முடியும் என்பது தாயார் இப்போது சொல்லித்தான் தெரியவந்தது.

“திருக்கோவிலில விஷக்கல்லக் கொண்டுவந்து நாட்டினவர் ஜெயின் மௌலானா எண்ட முஸ்லீம் ஆள் எண்டு சொன்னிங்க. பொத்துவிலில வெள்ளிக்கிழமகளில சாறனும் நெஸனலும் உடுத்திட்டுத் தலையில ‘வலத்தொப்பி’யும் போட்டித்து ஒருவர் வாற எல்லா அம்மா. கதக்கயும் மாட்டார். வாயத்துறந்து ஒண்டும் கேக்கவும் மாட்டார். ஆனா அவரக்கண்டா எல்லா வீட்டிலயும் அவருக்குக் காசுக்காணிக்க போடுவாங்க. அவரயும் ஜெயின் மௌலானா எண்டுதானே சொல்ற. விஷக்கல்லக் கொண்டுவந்து திருக்கோவிலில நாட்டின ஜெயின் மௌலானாக்கும் பொத்துவிலில வெள்ளிக்கிழமகளில வீட்டுக்கு வீடு வந்து காணிக்க வேண்டிற்றுப்போற ஜெயின் மௌலானாவுக்கும் தொடர்பு இருக்காம்மா?” என்று கேட்டான் கோகுலன்.

“அது எனக்குச் சரியாத் தெரியா மனே! பொத்துவிலில வீட்ட வாற ஜெயின் மௌலானாவுக்குக் காணிக்க குடுத்தா பாம்புகீம்பு விஷப் பூச்சிகீச்சி ஒண்டும் வளவுக்குள்ள வரமாட்டா என்ற நம்பிக்க சனத்துக்கு இரிக்கி” என்றாள் கனகம்.

.       .       .

பாம்புக்கடி வைத்தியம் மற்றும் திருக்கோவில் ‘விஷக்கல்’ குறித்தும் இவ்வளவு விபரங்களையும் விளக்கங்களையும் தன் தாயார் தெரிந்து வைத்திருக்கிறாவே என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கோகுலன் வியந்தான். தாயாரிடமிருந்து இவ்வளவு விடயங்களையும் அறியக்கிடைத்த அந்த நாள் மிகவும் பயனுள்ள நாள் என்றும் எண்ணிக் கொண்டான்.

கடந்த காலத்து நினைவுகளில் நீச்சலடித்துக் கொண்டிருந்த கோகுலன் நினைவுக் குளத்தில் இருந்து வெளியேறி அன்று தான் சிந்தித்த சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்களுக்கான தேவைகள் ஐம்பத்தியிரண்டு ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையே என்றும் அவை ஒரு புறமிருக்க அவர்கள் முன்பு பயிர் செய்து பரம்பரையா வாழ்ந்து வந்த இடத்தில்தானும் மீளவந்து குடியேற அரசாங்கத் திணைக்களமே தடைபோடுகிறதே என்றும் ஆதங்கப்பட்டான். இந்தச் சண்டை வந்து சாதாரண சனத்திற்கு எவ்வளவு பாதிப்பு என்றும் கவலைப்பட்டான்.

கோகுலனின் மனைவி சுந்தரியின் “இந்தாங்க ரீ” என்ற குரல் கேட்டுத் திரும்பியவன் ‘ரீ’யைக் கைநீட்டி வாங்கி மடமடவென்று பருகினான். பருகிமுடிந்த பின் வெறும் ‘கப்’பை மனைவியிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு அவள் குசினிக்குள் நுழைந்தாள்.

பலாப்பழத்தின் ‘பிசின்’ கைவிரல்களில் ஒட்டிக்கொண்டது மாதிரி கனகர் கிராமத்தின் மீள்குடியேற்ற விவகாரம் அவனுடைய எண்ணத்திலிருந்து நீங்க மறுத்தது.

காலக்குதிரையில் மீண்டும் ஏறியிருந்து கடிவாளத்தைச் சுண்டினான்.

கடுகதியில் 1967 ஆம் ஆண்டை அடைந்த காலக்குதிரை திரும்பி அங்கிருந்து கோகுலனைக் காவிக்கொண்டு 1982 ஆம் ஆண்டை நோக்கித் துள்ளுநடை போட்டது.

(தொடரும் … அங்கம் 09)