எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

— அ. வரதராஜா பெருமாள் —                                      

(பகுதி – 1) 

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த இலங்கை  இதுவரை பத்து செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு சேனநாயக்காக்கள்மூன்று பண்டாரநாயக்காக்கள்ஜெயவர்த்தனா, பிரேமதாசாராஜபக்சாமைத்திரி மற்றும் ரணில் ஆகியோர். இவர்கள் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு வேளையும் பொருளாதாரத்தில் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது என்றே மக்கள் நம்பினர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதார ஓட்டத்தின் திசையைத் திருப்பினார் என்பது உண்மையே. அவருக்குப் பின் ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஜே.ஆர் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையை அடுத்தடுத்து விமர்சித்த போதிலும் அவர் வகுத்து விட்ட பொருளாதாரப் பாதையிலிருந்து விலகாமலே செயற்பட்டார்கள். இருந்த ஆட்சியை மாற்றி புதிதாக அதிகாரக் கதிரைகளில் அமர்ந்த ஒவ்வொருவரும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான தத்தமது திட்டங்களை அறிவிக்கின்ற பொழுது நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையான மக்களின் நலன்கள் சார்ந்த வகையாகவே அவை மேற்கொள்ளப்படும் என்றனர். ஆனால்இலங்கையின் பொருளாதாரத்தில் இந்த ஆட்சியாளர் எவரும் தாம் கூறிய வகையாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை – முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். 

மீண்டும் ராஜபக்‌ஷாக்கள்… 

மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ள ராஜபக்ஷாக்கள் ஆட்சிக்கு வருவதற்கான தேர்தலின் போதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனும் தங்களது ஆட்சியின் போது நாட்டில் வறுமை ஒழிக்கப்படும், வேலையின்மை என்பது இல்லாமற் போகும்பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் அதிசயிக்கத் தக்க வளர்ச்சிகளை அடையும் என்றெல்லாம் கூறினார்கள். ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்களில் முந்தைய ஆட்சியாளர்களால்த்தான் நாடு குட்டிச் சுவராகப் போய்விட்டது என்றார்கள்: ஆட்சிக் கட்டிலேறி சரியாக நாலாவது மாதம் கொரோணா கிருமிகள் நாட்டுக்குள் புகுந்து விட்டன. அதைத் தொடர்ந்து வீழ்ந்து கிடந்த பொருளாதார நிலையை மீளச் சரிப்படுத்துவதற்கான தமது முயற்சிகளையெல்லாம் கொரோணா தடை செய்துவிட்டது என அதன் மீது பழியைப் போட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காக என்னவெல்லாம் செய்தாலும் அவை ஒவ்வொன்றும் பிழைக்கிறதே என தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  

கோளாறு கொரோணாவால் ஆனதல்ல 

சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு மாறி மாறி ஆட்சிக்கட்டிலேறிய ஒவ்வொரு கூட்டத்தினரும் நாட்டின் அரசியற்பொருளாதார அடித்தளங்களை கட்டியெழுப்புவதில் கடைப்பிடித்து வந்துள்ள கோளாறான கொள்கைகளும் குழறுபடியான நடைமுறைகளுமே இன்றைய அளவுக்கு இலங்கையின் பொருளாதாரத்தின் கூறுகள் மோசமான கட்டத்தை அடைந்திருப்பதற்குக் காரணங்களாகும். ஆட்சியாளர்கள் கோளாறான கொள்கைகளையும் ஒன்றுக்கொன்று இசைவற்ற வகையிலான நடைமுறைகளையும் கடைப்பிடித்தால் நாட்டின் அரசியற் பொருளாதாரம் எதிர்பாரா நெருக்கடிகளையும் விலக்க முடியா சிக்கல்களையும் கொண்டதாகவே அமையும் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து பாகங்களுக்கும்அனைத்து இன மக்களுக்கும்மக்களிடையே உள்ள அனைத்து சமூக பொருளாதார பிரிவினருக்கும் உரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை இதுவரை இலங்கையை ஆண்ட எந்த ஆட்சியாளராவது கடைப்பிடித்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்டால் – இந்த நாட்டின் நியாயமான பிரஜைகள் அனைவருமே இல்லையென்றுதான் பதில் சொல்லுவார்கள்.  

இலங்கைக்கான அரசியற் சுதந்திரத்தை காலனித்துவ பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பின் மேற்தட்டிலிருந்த குழாத்தினரிடமே ஒப்படைத்தார்கள். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிப் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கப் போராடியவர்களின் கைகளுக்கு இலங்கையின் ஆட்சியதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் மிக முன்னெச்சரிக்கையுடனேயே செயற்பட்டனர். ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சுதந்திர இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு சுயசார்பு பொருளாதாரமாக கட்டியெழுப்பும் சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மேற்கத்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்களினதும் அவர்களது பொருளாதார நிறுவனங்களினதும் தயவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தாங்கள் அனுபவித்த அரசியல் பொருளாதார சுகங்களை தொடர்வதிலேயே குறியாக இருந்தார்கள். அதற்குரிய வகையில் தமது அதிகார வாய்ப்பு வளங்களை குவிப்பதிலேயே அக்கறையாக செயற்பட்டார்கள்.      

இலங்கையின் பிரதானமான அரசியற் கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களிடையே சந்தேகங்களையும், பிளவுகளையும் வெறுப்புகளையும், விரோதங்களையும் விரக்திகளையும் வளர்த்து விட்டுள்ளன. அதன் மூலம் நாடாளுமன்றக் கதிரைகளை சுலபமாக கைப்பற்றலாம் – இலகுவாக ஆட்சியைப் பிடிக்கலாம் – பிடித்த ஆட்சியைத் தக்க வைக்கலாம் – மீண்டும் தேர்தலில் வெல்லலாம் – ஆட்சியைத் தொடரலாம் என்பதே இங்கு செல்வாக்கு மிக்க அனைத்து அரசியல்வாதிகளினதும் சூத்திரமாக உள்ளது. கடைப்பிடிக்கப்பட்ட கோளாறான பொருளாதாரக் கொள்கைகளோடு, குறிப்பிட்டவாறான தேர்தல் அரசியற் தந்திரங்களுமே நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மேலும் மிக மோசமான கட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. 

ஆழமாக அலசப்படாத பொருளாதாரம் 

பொதுவாக அரச அதிகாரத்தில் ஏற்படும் குழப்பங்கள்அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள்அரசியற் கட்சிகள் மற்றும் தேர்தல்கள் போன்ற விவகாரங்களே இலங்கையின் அரசியற் பொருளாதாரம் பற்றிய விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் சூடான சுவாரசியமான விடயங்களாக உள்ளன: இலங்கையின் பொருளாதார விவகாரங்களினுடைய அடிப்படையான அம்சங்கள் அவ்வாறான முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை. அரசியல் விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான குறிப்புகள் ஆங்காங்கே அவ்வப்போது உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவை விரிவாகவோ அல்லது ஆழமாகவோ நோக்கப்படுவதுமில்லை – ஆய்வு செய்யப்படுவதுமில்லை.  

ஆட்சிக் கதிரைக்கு ஆட்களை மாற்றி விட்டால் 

மக்களின் வாழ்வு நிலையின் காட்சிகள் மாறுமா

அரசின் ஆட்சி மாற்றம் பற்றி அவரவர் தீர்க்க தரிசனங்களை உரத்த குரலில் உறுதிபடக் கூறுபவர்கள்தாம் எதிர்வு கூறுகின்ற அல்லது விரும்புகின்ற ஆட்சிமாற்றத்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வகையான முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி திட்டவட்டமாக எதனையும் கூற முடியாதவர்களாகவே உள்ளனர்.  

இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள  ஆட்சியாளர்களை மாற்றி மற்ற ஆளும் வர்க்கக் குழுவினரை அதிகாரத்தில் அமர்த்தி விட்டால்பொருளாதார விடயங்களில் முன்னேற்றங்கள் தானாக நடைபெறும் என சிந்திப்பது எந்த வகையிலும் சரியானதாகாது. அடுத்த தேர்தலில்  ஆட்சிக் கட்டிலேறி விட வேண்டுமென துடிப்பவர்கள் முன்னரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். மூன்றாவதான ஒரு குழுவினர் ஆட்சிக்கு வந்து விட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா எனக் கேள்வி எழுப்பி அறிவுபூர்வமாக பதிலைத் தேடினால் அப்போதும் நம்பத்தகுந்த காட்சிகள் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை.   

நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார அம்சங்களும்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் முன்னேற்றங்களை அடையும் அநுபவிக்கும் நிலைமைகளை ஆக்குவதென்பது அவ்வளவு சுலபமாக ஒற்றைப்பாதைப் பயணத்தினால் சாதித்து விடக் கூடியதல்ல என்பது தெளிவான ஒன்றாகும். உள்நாட்டில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது யுத்தத்தின் காரணமாகத்தான் நாட்டினுடைய பொருளாதாரம் முன்னேற முடியாமல் இருக்கிறது. யுத்தம் முடிவடைந்தால் நாடு பொருளாதார செழிப்பை நோக்கி பாய்ச்சலில் செல்லும் என்றார்கள்‘. யுத்தம் முடிந்தும் 12 ஆண்டுகள் ஆகியும் அவ்வாறு நடைபெறவில்லை. இப்போது கொரோணாவைக் காரணம் காட்டுகிறார்கள்.  

இங்கு அரச அதிகாரத்தில் உள்ளவர்களிடையே நிலவும் குழப்பங்கள் ஒருபுறமிருக்கஅரச நிர்வாகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் நிறைந்துள்ளன – இலங்கையின் எட்டுத் திசைகளிலும் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன – கட்டுப்படுத்த முடியா வகையில் விலைவாசியேற்றம், வேலைவாய்ப்பில்லை என இலட்சக்கணக்கான இளைஞர்கள்  – எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் வறுமைக் கோட்டைத் தாண்ட முடியவில்லையே என நாட்டில் அரைவாசிக்கு மேற்பட்ட குடிமக்கள் – நாட்டில் அத்தியாவசிய பண்டங்களுக்குத் தட்டுப்பாடுஅதனால் கள்ளச் சந்தைகளின் பெருக்கம் –  கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி மிக மோசமான அளவுக்கு குறைந்திருக்கின்றமை, வெளிநாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியும் கடனும்  வளர் நெருப்பு போல் தொடர்ந்து உயர்கின்றமை என இன்னும் பல. இவ்வாறாக நாட்டின் பொருளாதார நிலைமை அலங்கோலமாகவும் நெருக்கடிகள் நிறைந்ததாகவும் உள்ளது. 

கொரோணாக் கிருமிகளின் பரவலால்த்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என பேசிக் கொள்பவர்களும் நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  நாட்டின் பொருளாதாரம் தற்போது கொண்டிருக்கும் நெருக்கடிகளும் சிக்கல்களும் கொரோணாக் கிருமிகளின் பரவலுக்குப் பின்னர்தான் ஏற்பட்டவையல்ல. கொரோணாவின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பரவிக் கிடந்த அவலங்களையும் நெருக்கடிகளையும் குறிப்பிட்ட அளவு உக்கிரப்படுத்தியுள்ளமை வெளிப்படையான ஒன்றே. கொரோணா கிருமிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் இந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளும் சிக்கல்களும் தானாக முடிவுக்கு வந்து நாட்டின் பொருளாதாரம் சீராகி விடும் என எவர் நம்பினாலும் அது தவறாகும். அரசாங்கம் அவ்வாறாக பொதுமக்கள் நம்பும் வகையாக பிரச்சாரம் செய்யலாம்,ஆனால் அதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் மனச்சாட்சிப்படி நம்புபவர்களாக இருக்கமாட்டார்கள். அவற்றையெல்லாம் ஆட்சியாளர்களின் அரசியற் தந்திரோபாயங்களின் முகாமைத்துவ யுக்திகளாகவே கருதிக் கொள்ள வேண்டும்.  

எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை  

கொள்ளவும் முடியவில்லை கொடுக்கவும் முடியவில்லை. 

இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையான வார்த்தைகளைத் தெரிவிக்கின்ற எவரையும் அரசியற் கட்சி சாரா அறிஞர்களிடையே காண முடியவில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் தமது கவலை தோய்ந்த மனங்களையே – விரக்திகளையே வெளிப்படுத்துகிறார்கள். அரசாங்கத் தரப்பினர் தமது ஆட்சிக் காலத்திலான பொருளாதார சாதனைகள் பற்றி அடுக்கினாலும் அவர்களின் வார்த்தைகளில் பதட்டங்களும் குழப்பங்களுமே தெரிகின்றன. அத்துடன் தமது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் பலயீனங்களையும் தோல்விகளையும் மறைக்க தமக்கு வசதியாக ஒரு பக்கமான தரவுகளைக் காட்டுகிறார்கள் அல்லது தப்பான தகவல்களை வெளியிடுகிறார்கள்.   

தேசங்களின் பொருளாதார அம்சங்கள் தொடர்பான அடிப்படை அறிவு கொண்டவர்கள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் கடந்தகால வரலாற்று ஓட்டத்தை அறிந்தவர்களிற் பெரும்பான்மையினர்இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பகிரங்கத்தில் தமது ஆத்திரங்களையும் விரக்திகளையுமே காட்டுகின்றனர். அத்துடன் அரசாங்கங்கள் மாறினாலும் இலங்கையின் பொருளாதார நிர்வாகத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் எதுவும் நடைபெறுவதில்லை என கண்டன பூர்வமான விமர்சனங்களை வெளிப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.   

அரசாங்கத்தில் உள்ள மற்றும் அதற்கு சார்பாக உள்ள அறிவார்ந்தோர் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட நடைமுறைகள் மீது தவிர்க்க முடியாது கண்மூடித்தனமான நம்பிக்கைகளை வெளிப்படுத்த முனைகிறார்களே தவிரஅவர்களால் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் விமர்சனரீதியான கருத்துக்களையும் கேள்விகளையும் திட்டவட்டமாக மறுக்கவோ அல்லது மாற்றான பதில்களை உறுதிபட தெரிவிக்கவோ முடியாதுள்ளது. 

முன்னர் ஆட்சியில் இருந்த கட்சியினர் – அணியினர் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் பற்றி முறையற்ற ஒப்பீடுகளை மேற்கொண்டு தமது கால ஆட்சியில் நிலவிய பொருளாதார நிலைமைகள் பற்றி பெருமையடிக்கிறார்கள்: இப்போதுள்ள ஆட்சியாளர்களால்த்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமாகியுள்ளதாக அறிக்கை விடுகிறார்கள் – விபரிக்கிறார்கள். இப்போதுள்ள ஆட்சியாளர்களோ கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தப்பான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக விளைந்த பாதகங்களின் சுமைகளையே தாங்கள் இப்போது சுமப்பதாகக் கூறி தப்பிக் கொள்ளப்பார்க்கிறார்கள்.   

இவ்வாறாக ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த கட்சியின் – அணியின் ஆட்சி அமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் – முன்னேற்றங்கள் நிகழும் என பிரகடனம் செய்கிறார்கள். ஆனால்அவர்கள் அவ்வாறான முன்னேற்றங்களை உண்மையில் சாத்தியமாக்கக் கூடிய மூல உபாயங்களையோ செயற்திட்டங்களையோ மக்கள் அறியும் வகையில் வெளியிடுபவர்களாக இல்லை. ஒவ்வொரு தடவையும் முன்னைய ஆட்சியினர் பரவாயில்லை‘ என்று நினைக்கும் வழக்கத்தையே பொது மக்கள் தொடர வேண்டியவர்களாக உள்ளனர்.   

அடிப்படையில் இலங்கை கொண்டுள்ள பொருளாதாரக் கட்டமைப்புமாறிமாறி வரும் அரசாங்கங்கள் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள்நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரச நிறுவனங்கள் ஆகியன தொடர்பாக பாரபட்சமற்றரீதியில்பகுத்தறிவு பூர்வமான முறையில் நோக்குகையில் எவராலும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக திருப்திப்படவோ, பாராட்டவோ அல்லது எதிர்காலம் நிச்சயமாக முன்னேற்றகரமாக அமையும் என நம்பிக்கைகளை வெளிப்படுத்தவோ முடியாதுள்ளது என்பதே உண்மையாகும்.

பகுதி – 2 

சுயசார்பு நிலையை அடைய முடியவில்லை 

அடிப்படை வாழ்வுரிமைகளுக்கு உறுதியில்லை 

இலங்கையானது ஒரு பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இருப்பதற்குப் போதிய அளவுக்கு வயல் வளங்கள்வன வளங்கள்பல்வகை மண் வளங்கள் என நிலவளங்களையும் – அத்துடன்கடல் வளங்கள், நதிகள், ஏரிகள்குளங்கள் என பல்வகை நீர்வளங்களையும் கொண்டது. மேலும், நாட்டின் மத்தியிலே பரந்த பசுமையான மலைகள் அவற்றிலிருந்து எட்டுத் திசைகளிலும் நீரோட்ட நரம்புகளாய் நதிகள் பாய்கின்றன. உலகின் பெருந்தொகையான நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு வகை விவசாய உற்பத்திகளையும் ஆண்டு முழுவதுவும் மேற்கொள்வதற்கு உரிய வகையில் இலங்கை மிகச் சாதகமான காலநிலைமைகளையும்  கொண்ட நாடு.   

இலங்கையின் கல்வி நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களினுடைய வாழ்வு நிலையின் உயர்ச்சிக்கும் வேண்டிய அனைத்து அறிவையும் இலவசமாக போதிப்பதற்கு உரிய வகையில் பரவிக் கிடக்கின்றன. அதேபோல மக்களுக்கு அடிப்படையான சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கும் நிறுவனங்களும் பரவலாக உள்ளன. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நகரங்களை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான கிராமங்களை இங்கு வீதிகளும் போக்குவரத்துக்களும் நன்கு இணைத்துள்ளன.     

இவ்வாறெல்லாம் இருந்த போதிலும்ஒரு நாட்டுக்கு அவசியமான அடிப்படையான பொருளாதாரத்துறைகளாகிய விவசாயத் துறையிலும் உருவாக்க உற்பத்தித் தொழில் துறையிலும்  (Manufacturing Industries) மிகவும் பின்தங்கிய நாடாகவே இலங்கை உள்ளது. அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவை அடைந்து விட்டது என்று சொல்லப்படுவதை வைத்துக் கொண்டு இலங்கை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டதென அர்த்தம் கொள்ளக் கூடாது. இலங்கையின் பிரதானமான அனைத்து உணவுப் பொருட்களின் தேசிய மொத்த உற்பத்தி அளவுகளைப் பார்க்கையில் இலங்கை அவற்றில் தன்னிறைவு நிலைக்கு அண்மையாகக் கூட இல்லை. இலங்கை சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் இன்னமும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பண்டங்களை பெருந்தொகையில் இறக்குமதி செய்கின்ற நிலையிலேயே உள்ளது.‘ 

செழிப்பான விவசாயத்துக்கான வளமெல்லாம் இருந்தும் 

ஏன் கையை இந்தத் தேசம் ஏந்துகிறது வெளிநாடுகளிடம்!.  

3 மில்லியன் மெற்றிக் டன் அரிசியை இலங்கை உற்பத்தி செய்கின்ற அதேவேளை சுமார் 1½ மில்லியன் மெற்றிக் டன் கோதுமையை இறக்குமதி செய்தே அதனை தீட்டிய வெள்ளை மாவைப் பெற்றுக் கொள்கிறது. காலை மற்றும் உணவில்  இந்த வெள்ளை மா கணிசமான பங்கை வகிக்கிறது. பாலுணவுப் பொருட்களில் அரைவாசியை இறக்குமதி செய்தே சமாளிக்கிறது. பருப்பு மற்றும் கடலை வகைகளின் தேவைகளுக்கு முக்கால்வாசிக்கு மேல் இறக்குமதி செய்வதாகவே உள்ளது. சீனி, சாப்பாட்டு எண்ணெய் வகைகள், வெங்காயம்உருளைக்கிழங்குஎன உணவுத் தயாரிப்புக்கான பிரதானமான பொருட்களும் துணைப் பொருட்களும் மிகப் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாகக் கூறினால் 2019 ஆண்டுக்கான கணக்கில் 30000 கோடி ரூபாக்களுக்கு மேல் இலங்கை உணவுப் பண்டங்களின் இறக்குமதிக்காகச் செலவளிக்கின்றது. இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தும் – செழிப்பான விவசாயத்துக்கான எல்லா வளங்களையும் கொண்டிருந்தும் உணவுப் பண்டங்களுக்கான தேவைகளை பெரும் தொகையில் இறக்குமதி செய்வதன் மூலமே ஓரளவுக்கு திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.          

அரிசிதீட்டிய (கோதுமை) வெள்ளை மாவுதேங்காய்சிறியவகை மீன்கள், மைசூர் பருப்புமரவள்ளிக் கிழங்கு, மலிவாகக் கிடைக்கும் கீரை வகைகள் ஆகிய குறிப்பட்ட சில வகை உணவுப் பண்டங்களிலேயே இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தமக்கான சக்திக்கும் சத்துக்களுக்கும் தங்கியுள்ளனர். இந்த வகை உணவுப் பண்டங்களே பெரும்பான்மையான மக்களால் தமது வருமானத்துக்குள் வாங்கக் கூடிய வகையில் மலிவான விலையில் கிடைக்கின்றன. தேவையான அளவு மரக்கறிகளையோசத்து நிறைந்த பருப்பு மற்றும் கடலை வகைகளோ, அடிக்கடி இறைச்சி வகைகளையோ தமது உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருளாதார வல்லமை இங்கு விகிதாசாரரீதியில் சிறுபான்மையான எண்ணிக்கை கொண்ட மக்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது. தேநீருக்கு தவிர பால் அடிப்படையிலான உணவுத் தயாரிப்புகளை நுகர்பவர்கள் இங்கு மிகக் குறைவு. உண்மையில் அவை செலவுச் சுமையான பண்டங்களாகவே உள்ளன.  

உடலை சக்தி மிக்கதாகவும் ஆரோக்கியமானதுமாக வைத்திருப்பதற்கு உரிய உணவு வகைகளை வேண்டுவது இங்குள்ள பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரையில் ஆடம்பரமான வாழ்க்கைக்கான விருப்பங்கள் என்று கருதிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர் – அடுத்த நாள் உயிரோடு இருப்பதற்கும் உழைப்பதற்குமாக சீவிப்பவர்களாக அவர்கள் உள்ளனர்.  இவற்றைக் கூறுகையில்இலங்கை மக்களின் பொருளாதார வாழ்வு நிலையை மிகவும் எளிமைப்படுத்துவது போல் தெரியக்கூடும். ஆனால் பொருளாதார ரீதியில் இங்கு கீழ்மட்ட நிலையில் பரந்துபட்டு வாழும் மக்களில் 50 சதவீதமானோரின் வாழ்க்கை நிலைமைகளின் உண்மைகளைத் தெரிந்தோர் ஆழமாகச் சிந்திப்பின் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  

இலங்கையின் உழைப்பாளர்களில் 25 சதவீதமானோர் விவசாயத்தில் ஈடுபட, 20 சதவீதமானோர் ஆக்க உற்பத்தித் தொழிற் துறையில் உள்ளனர். இதைப் பார்த்து விட்டு இலங்கையில் இத்துறை வளர்ச்சியடைந்த ஒரு துறையாக இருக்குமோ என கேள்வி எழுப்பக் கூடாது. இலங்கை ஆக்கத் தொழிற் துறையில் மிகவும் பின் தங்கிய ஒரு நாடு. பிளாஸ்டிக் பொருட்கள் தொடக்கம் பேப்பர் உற்பத்திகள்இரசாயனங்கள் மற்றும் அவற்றை மூலப் பொருட்களாகக் கொண்ட பண்டங்கள்மருந்து வகைகள், இயந்திரங்கள்அவற்றிற்கான உபகரணங்கள்கருவிகள், உலோகங்கள் மற்றும் உலோக உற்பத்திகள்மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள் என பெரும்பாலும் ஆக்க உற்பத்திப் பண்டங்களை இறக்குமதி செய்வதாகவே இலங்கை உள்ளது.  

இலங்கையின் மொத்த உள்நாட்டு ஆக்க உற்பத்திகளில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பண்டங்களின் உற்பத்தியாகவே உள்ளது. மற்றொரு மூன்றில் ஒரு பங்கு ஆடை வகைகளின் உற்பத்தியாக உள்ளது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால்ஆடைகள் உற்பத்திக்குத் தேவையான துணிகள் தொடக்கம் நூல்கள்பட்டன்கள் என அனைத்தும் இறக்குமதி செய்யப்படுவனவாகவே உள்ளன.  

இலங்கையின் சேவைத் துறையிற் கூட இறக்குமதிகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களும்அவற்றோடு தொடர்பான போக்குவரத்துகளும், அவற்றிற்குத் தேவையான நிதிச் சேவைகளுமே மிகப் பெரும்பங்கை வகிக்கின்றன. இலங்கையின் 55 சதவீதமான உழைப்பாளர்கள் சேவைத்துறையில் உள்ளனர். இதில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோர் அரச ஊழியர்களாக இருக்கின்றமையும் கவனத்திற்குரிய ஒன்றாகும். மொத்தத்தில் இங்கு காணப்படுவது என்னவென்றால் இலங்கையின் இயற்கை வளங்களும் சரி மனித வளங்களும் சரி இலங்கையை ஒரு சுயசார்பான பொருளாதாரமாக கட்டியெழுப்புவதற்கான வகையில் அவற்றின் உழைப்பின் ஈடுபாடு ஒழுங்கமைக்கப்படவில்லை நெறிமுறைப்படுத்தப்படவில்லை அதற்கான செயற் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.  

ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம் 

அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் 

உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் தேசிய வருமானங்களைஅவற்றின் கொள்வனவு ஆற்றலின் அடிப்படையில் கணித்து ஒப்பிடுகையில்மத்திய வருமான தராதரம் கொண்ட நாடு எனும் நிலைக்குள் இலங்கை காலடி எடுத்து வைத்து விட்டதாக ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றனர். இலங்கையின் மத்திய வங்கியின் அறிக்கைகள் அவ்வாறான அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் வகையாகவே பொருளாதார தரவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புக்கள் தமது கணிப்புகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றன. இலங்கையின் பொருளாதார ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர் இலங்கையை மத்தியதர வருமானம் கொண்ட நாடு என பொதுவாக வரையறுக்காமல் கீழ் மத்தியதர வருமான நாடு எனக் குறிக்கின்றனர். இந்த வகையில் இலங்கையை வறிய நாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியாது என்பதில் அனைவருமே பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.  

இலங்கையின் தலாநபர் வருமானக் கணிப்புநகரங்களின் வளர்ச்சித் தோற்றம்போக்குவரத்து மற்றும் தொடர்பு சாதனங்கள்கல்விநிலை, மருத்துவ நிறுவனங்களின் சேவை, கடைநிலை கிராமத்து பிரஜையும் அரச கட்டமைப்பை அணுகுவதற்கு உள்ள தூரம் போன்றனவற்றின் புள்ளிவிபரங்களை புற நிலையாக நோக்கினால் இலங்கையை கீழ் மத்தியதர நிலை வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றென அடையாளம் காணுவதில் சந்தேகம் எழாது.  

ஆனால் நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையான குடும்பங்களின் வருமானம்உடல் ஆரோக்கியம், கிடைக்கின்ற வருமானத்தில் பெறுகின்ற வாழ்க்கைத் திருப்திவருமான உத்தரவாதம்தமது அடுத்த தலைமுறையினுடைய எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதம் பற்றிய அச்சங்கள் போன்ற தனிமனித பொருளாதார அம்சங்களையும் – நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அளவுதேசிய பொருளாதார கட்டமைப்பு உறுதியான அடித்தளங்களைக் கொண்டிருக்காமை, நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியின் அளவு போன்றவற்றை கூர்ந்து நோக்குகையில் இலங்கை வறியநாடு என்ற தரநிலையிலிருந்து விடுபட்டு மத்தியதர வருமான நாடு என்ற நிலைக்குள் காலடி எடுத்து வைத்து விட்டது எனக் கொள்வது எவ்வளவுக்கு சரியானது – உண்மையானது – அர்த்தபூர்வமானது என்ற கேள்வியினை உரத்து எழுப்ப வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையின் பொருளாதார அம்சங்களை உற்று நோக்குவது அவசியமாகும்.  

அரசியல் நலன்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே பொருளாதார கணிப்பீடுகள் அமைதல் வேண்டும். ஆட்சியாளர்கள் தமது வெற்றிகளை காட்டுவதற்காக பொருளாதாரம் தொடர்பில் தவறான புள்ளி விபரங்களை வெளிப்படுத்துவார்கள் – அதேபோல எதிர்க் கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான தமது அரசியலுக்காக பொருளாதார புள்ளிவிபரங்களை தவறான முறைகளில் தெரிவு செய்து பிரச்சாரம் செய்வார்கள். இவற்றின் தொடர்ச்சிகள் நாட்டில் பொருளாதார கல்வியையும் அறிவியற் துறைகளையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். பொருளாதார அறிவியல் மீது தேர்தல் நலன்கள் கொண்ட கட்சி அரசியலின் செல்வாக்குகள் அதிகரித்தால் இங்கு அப்பாவிகள் மட்டுமல்ல அறிஞர்களும் பொய்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.. எனவே, நேர்மையான பொருளாதார அறிஞர்கள் – ஆய்வாளர்கள் அவ்வாறான பொய்களையும் புரட்டுகளையும் விழிப்போடு புறம்தள்ளி சரியான உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் இங்கு மிக அவசியமாக உள்ளது.    

நாட்டின் எல்லைக்குள் மக்கள்வெவ்வேறு நிலையில் வருமான அளவுகளைக் கொண்டு வறிய நிலைகீழ் மத்தியதர நிலைமேல் மத்திய தர நிலை மற்றும் உயர் நிலை என்பனவற்றைக் கணிப்பிடலாம். ஆனால் சர்வதேச ரீதியில் அவற்றை அப்படியே பிரதியிட முடியாது. சர்வதேசரீதியாக உள்ள நிலைகளோடு இங்குள்ள மக்களின் வாழ்ககைத் தராதர நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே மக்களின் வாழ்க்கைத் தராதரத்தின் சரியான உண்மையான நிலையை மதிப்பிட முடியும். அதன் அடிப்படையிலேயே நாட்டினுடைய பொருளாதாரத்தின் தராதர நிலையையும் முடிவு செய்தல் வேண்டும்.  

அதிகாரத்தால் பொய்களுக்கு சாயமடிக்கலாம்  

உண்மைகளை ஒளித்து வைக்க முடியாது  

நாட்டின் அரச துறைகளில் மற்றும் முறைசார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் – தொழிலாளர்களே ஒப்பீட்டு ரீதியில் நிரந்தர மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப்பெறுபவர்கள். இவர்கள் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு அடைகின்ற வாழ்க்கைத் தரத்தை உலகின் ஏனைய அதேவகை நாடுகளில் அதே துறைகளில் உள்ளவர்களின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பு நோக்குதல் வேண்டும். அதன் அடிப்படையில் நோக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதார தராதர நிலையை அண்ணளவாக அடையாளம் காண முடியும். 

நுகர்வுப் பண்டங்களினது சராசரி சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் வாழ்க்கைச் செலவின் அளவுகளையும்அரச துறைகள்  மற்றும் முறையான தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்ற சம்பள அளவுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கையில் இலங்கையை சர்வதேச பொருளாதார வகைப்படுத்தலில் மத்திய வருமான தராதரத்தைக் கொண்ட நாடுகளின் வகையை அடைந்து விட்ட ஒரு நாடு என கொள்ள முடியாதுள்ளது.   

இலங்கையில் மாறிமாறி வந்த எந்த அரசாங்கமும் தங்களது ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைத் தராதரத்தில் மெய்யான அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு உரிய வகையில் நாட்டின் பொருளாதார துறைகளில் தேவையான வளர்ச்சிகளை ஏற்படுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சியின் போது அனைத்து நாடுகளிலும் மக்களின் அடிப்படைத் தேவையான பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படுவது இயல்பே. ஆனால் அந்த அதிகரிப்பு வீதத்தை விட மக்களின் அனைத்து பிரிவினரிடையேயும் வருமான அதிகரிப்பு வீதம் அதிகமாக அமைந்தாலே பரந்துபட்ட பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது பொதுவாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.  

மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும் போது மக்கள் வெவ்வேறு பண்டங்களை நுகர்வதிலும் அளவுரீதியாக விகிதாசார மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிது புதிதாக உற்பத்தியாகி சந்தைக்கு வரும் பண்டங்களும் மக்களின் நுகர்வுகளுக்கு உரியனவாகும். இவ்வாறான பொருளாதார செயன்முறைக்கு உரிய வகையில் நாட்டு மக்களில்  எவ்வளவு வீதாசாரத்தினரினுடைய மெய்யான வருமானம் உயர்கிறது என்பதைக் கொண்டுதான் அந்த நாடு பொருளாதாரரீதியில் முன்னேற்றமடைகிறதா அல்லது தேக்க நிலையில் இருக்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பதைக் கூற முடியும்.   

மக்களின் பணரீதியான வருமான உயர்ச்சியை விட அடிப்படைத் தேவையான பண்டங்களின் தொடர்ச்சியான விலையேற்றம் அதிகமாயின் மக்கள் விரக்திக்கு உள்ளாவார்கள்அரசின் மீது ஆத்திரம் கொள்வார்கள். இதனைப் புரிந்து கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களை அமைதிப்படுத்தும் நோக்குடன், அனைத்து வகைப்பட்ட உழைப்பாளர்களினதும் பணரீதியான வருமானம் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்திருக்கின்றமை தங்களது ஆட்சியின் சிறப்பு என அவ்வப்போது அறிக்கைவிடுவதைக் காணலாம். ஆனால் அதைவிட அதிகமாக அடிப்படைத் தேவைப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளதையோமேலும் முன்னர் இலவசமாக அல்லது குறைந்த செலவோடு பெறப்பட்ட கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் இப்போது பெரும் செலவுடைய விடயங்களாக மாறிவிட்டதையோ பெரிதுபடுத்த மாட்டார்கள். சில வேளைகளில் அதைப்பற்றிப் பேசினாலும்அதற்கான காரணங்களாக தம்மையும் மீறிய புறக்காரணிகளின் விளைவுகளே என நியாயப்படுத்துவார்கள். தலை விழுந்தால் எனக்கு – பூ விழுந்தால் உனக்கில்லை என்பதே வெற்றிகரமான தேர்தல் அரசியல்வாதிகளின் நியாயம்.  

(தொடரும் பகுதி 3)