இலங்கை மட்டக்களப்பில் கம்பன் விழா -2026

இலங்கை மட்டக்களப்பில் கம்பன் விழா -2026

— சோலையூர் குருபரன் —

      கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ்பாடும் ‘கம்பன் விழா’ உலகின் பல நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வருடா வருடம் மிகச் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா- போபால் கம்பன் கழகமும்  இலங்கை, மட்டக்களப்புக் ‘கதிரவன் கலைக் கழகமும்’ (தமது 50 ஆவது ஆண்டு பொன் விழாவினை ஒட்டியும்) இணைந்து, 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9,00 மணிக்கு மட்டக்களப்பு, கிரான்குளம், Sea Moon Garden மண்டபத்தில் ‘கம்பன் விழா-2026’ மிகச் சிறப்பாக நடத்துகின்றன. 

 இது கதிரவன் கலைக் கழகத்தின் இரண்டாவது கம்பன் விழாவாகும். இதில் இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்குபற்றித் தமது ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்க இருக்கின்றனர். அத்தோடு முத்தமிழும் முழங்க இருக்கிறது. 

காலை அமர்வு ‘அயோத்தி’ அரங்கிலும் (காலை 9.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை) மாலை அமர்வு ‘இராவணேஸ்வரர்’ அரங்கிலும் (பி.ப 2.30 மணி தொடக்கம் 5.30மணி வரை) நடைபெறவுள்ளன. கம்பன் புகழ் பாடும் கதிரவன் கலைக் கழக நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழ் நாட்டில் தேரழுந்தூரில் பிறந்தவர். தொடக்கத்தில் சடையப்ப வள்ளல் என்ற குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டார். அவரின் கவித்திறமையைக் கேள்விப்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) கம்பரைத் தனது அரசவைக் கவிஞராக்கி ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார். அக்காலத்தில் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. மன்னருக்கும் கம்பருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரச சபையில் இருந்து விலகிச் சென்று பாண்டிய, சேர மன்னர்களின் அரச சபையில் இருந்து பல கௌரவங்களைப் பெற்று, இறுதிக் காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  நாட்டரசன் கோட்டையில் வாழ்ந்து மறைந்ததாக அறியப்படுகிறது. நாட்டரசன் கோட்டையில் கம்பருக்கு வழிபாடுகளும் சிறப்புகளும் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு முறைப்படுத்தப்பட்ட இலக்கிய விழாவாக (கம்பன் திருநாள்) முதன்முதலில் தொடங்கியது 1939-இல் தேவகோட்டையில் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பன் திருநாள் 1939-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பங்குனி உத்திரத்தன்று சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழறிஞரான ‘கம்பன் அடிப்பொடி’ சா. கணேசன் என்பவரால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது. கம்பராமாயணத்தின் சிறப்பையும், கம்பரின் கவித்திறத்தையும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சா. கணேசன் அவர்கள் இந்த விழாவைத் தொடங்கினார்.  தேவகோட்டையில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பின்னர் காரைக்குடி கம்பன் கழகமாக உருவெடுத்தது. இந்த விழா சிறப்பாக நடைபெறவதற்கு தேவகோட்டை, காரைக்குடிப் பகுதியைச் சேர்ந்த  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரும் ஆதரவு வழங்கி இருந்தார்கள். இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு விழாக்கள் எடுப்பதற்கு ஆதுவே காரணமாக அமைந்தது.

இலங்கையில் கம்பன் விழா வெறும் இலக்கிய நிகழ்வாக மட்டுமன்றி, ஒரு மாபெரும் பண்பாட்டு இயக்கமாகவே நடைபெற்று வருகிறது. இலங்கையில் 1979 இல் கம்பன் விழாவினைத் தொடக்கி வைத்தவர் ‘ஈழத்துக் கம்பன்’ என அழைக்கப்படும் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள். இவ்விழா யாழ்ப்பாணம் நல்லூரில் மிக எளிமையான முறையில் தொடங்கப்பட்டது. இதனைக் கம்பவாரிதி இ. ஜெயராஜ், தமிழருவி சிவகுமரன், கதிரவன் த.இன்பராஜா போன்றோர் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணக் கம்பன் கழகம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பௌர்ணமி காலத்திலும், கொழும்பு கம்பன் கழகம் கொழும்பில் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களிலும் (பெரும்பாலும் பங்குனித் திங்களில்) சர்வதேச ரீதியில் அறிஞர்களை அழைத்துப் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றன. மட்டக்களப்பில் கதிரவன் கலைக் கழகம் மார்ச்சு மாதத்தில் முத்தமிழ் விழாவாக மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்த விழாக்களில் கவியரங்கு, கருத்தரங்கம், இசை நிகழ்வுகள், நடனம், வழக்காடு மன்றம் போன்றவை இடம்பெறுகின்றன. குறிப்பாக, கம்பராமாயணத்தைச் சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இந்தக் கம்பன் கழகங்களையே சாரும்.

கதிரவன் த.இன்பராஜா தலைமையிலான கதிரவன் கலைக் கழகம் முத்தமிழ் இலக்கியம் தொடர்பான பல போட்டி நிகழ்வுகளையும், கவிதைச் சமர், பட்டிமன்றங்கள், சமூக வீதி நாடகங்கள், நூல் வெளியீடுகள், ஆதரவற்றோருக்கான உதவிகள், அமைப்புக்கள் ஆகியவற்றையும் நடாத்தி வருகின்றார்.

தமிழ்க்கவிதை இலக்கியத்துக்கு உயிர் கொடுத்து, பொம்மைகளாக உலாவந்த பாத்திரங்களுக்கு உயிர்ப்பித்து அவற்றை நம் கண்முன்னே உயிர்ப்புடன் நடமாடவிட்டவர் கம்பர். தமது கவிதைகளை வெண்பா, விருத்தப்பா, அகவல்பாவில் பாடி அவற்றுக்குப் பெருமை சேர்த்தார். கவிதை இலக்கியத்தில் படிவம், உருவம், எள்ளடக்கம், உத்தி, எளிமை,  எதுகை, மோனை, உவமை, உருவகம், தற்குறிப்பெற்றம், உயர்வு நவிற்சி, முரண்நிலை, முரண்நகை என்பவற்றில் பரிசோதனைகள் செய்து, புதிய உத்வேகம் கொடுத்தவர். இத்தகைய கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு மட்டக்களப்பில் இந்தியா- போபால் கம்பன் கழகமும் கதிரவன் கலைக் கழகமும் இணைந்து ‘கம்பன் விழா’ எடுப்பது பாராட்டுக்குரியது. விழா சிறப்பாக அமைய இனிய நல்வாழ்த்துகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *