38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு

38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு

38வது பெண்கள் சந்திப்பு:

— விஜி – பிரான்ஸ் — 

இம்முறை பெண்கள் சந்திப்பு ஜேர்மனி பேர்லின் நகரில் ஒக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் (24-26) தொடர்ச்சியாக  நடைபெற்றது. இம்முறை  பெண்கள் சந்திப்பு முழுவதும் “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள்“ (Intersectionality) என்கின்ற கருப்பொருளின் கீழ் விடயங்கள் பேசப்பட்டன. அதாவது பலவிதமான இன, மத, சாதி, வர்க்க, நிற, பாலின   ஒடுக்குமுறைகளுக்குள் பெண்கள் மீதான பன்மைத்துவ அதேநேரம் ஒருமித்த ஒடுக்குமுறைகள் பற்றிய அவதானங்களும், ஆய்வுகளும் தலைப்புகளாகக் கொண்டு உரைகளும், உரையாடல்களும் அமைந்திருந்தன.    

முதல்நாள்:

வழமைபோல் “பெண்கள் சந்திப்பு”  இன் முதலாவது நிகழ்வாக  ஜேர்மன் பெண்கள் சந்திப்புக்குழுவைச் சேர்ந்த “கமலா” அவர்கள்   வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து  “உமா” அவர்கள் பெண்கள்சந்திப்பு பற்றிய ஒரு சிறிய அறிமுகம்  செய்தார்.  பெண்கள் மனம்திறந்து, சுதந்திரமாக  பேசுவதற்கு  பெண்கள் சந்திப்பின் அவசியம் பற்றியும், அதற்காக 1990 ஜேர்மனியின் கேர்னே நகரில் ஆரம்பிக்கப்பட்ட   பெண்கள் சந்திப்பானது   இதுவரை ஐரோப்பாவின் பல நகரங்களிலும், கனடாவிலும் 38 சந்திப்புக்கள் வரை தொடர்வதாக குறிப்பிட்டார்.

         தொடர்ந்து சுயஅறிமுகம் செய்யப்பட்டது.

முதலாவது நிகழ்வாக இந்த வருடம் எம்மைவிட்டுப்பிரிந்த எங்கள் தோழியான புஸ்பராணி பற்றிய நினைவுகூரல்/commemorating comrade  Pushparani:

தோழி புஸ்பராணி அவர்களின் போராட்ட குணம், போராட்ட வரலாற்றில் அவரின் பங்கு, தனிப்பட்ட வாழ்வின் போராட்டம்  பற்றியும் தமிழீழப் போராட்ட வரலாற்றில் சிறைக்குச்சென்ற முதலாவது பெண்கள் வரிசைசையைச் சேர்ந்தவர்   என்பதையும்  மற்றும் அவரது “அகாலம்” நினைவுக் குறிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறி, இவ்வாறான பெண் ஆளுமையை பெண்கள் சந்திப்பு இழந்து நிற்கிறது  என்றும் அவரது நினைவுகூரலை விஜி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பலரும் புஸ்பராணி பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள்.

அடுத்த நிகழ்வாக இப்பெண்கள் சந்திப்பின் கருப்பொருளான

“பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள் பற்றிய அறிமுகம் /Introduction on Intersectionality:

  இவ் அறிமுகம் ஜேர்மனியயைச்  சேர்ந்த உமா அவர்களால் செய்யப்பட்டது . Intersectionality என்பதை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதை, முதன் முதலில் அமெரிக்க பெண்ணியவாதியான Kimberlé Crenshaw அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கருதுகோளில் இருந்து உருவானதொன்றாகும். அவர் அமெரிக்க வெள்ளைப் பெண்ணியவாதிகளினால்  கறுப்புபெண்ணியவாதிகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை  முன்வைத்ததைத் தொடர்ந்து இக்கருதுகோள் விரிவாக்கம்பெற்றது. உதாரணமாக ஒரு தலித் பெண் சாதியத்துக்கெதிராகவும், அதேநேரம் ஆணாதிகத்துக்கெதிராகவும், வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராட வேண்டியிருப்பதை குறிப்பிட்டார். மேலும் உலகளாவிய ரீதியில் இவ் ஆய்வுமுறையானது பேசப்படுபடுவது போல் ஜேர்மனியிலும் பேசப்படுவதையும் விளக்கினார். 

தொடர்ந்த இடைவேளைக்குப் பின்னர்  பிரித்தானியாவில் இருந்து கலந்துகொண்ட நிர்மலா அவர்களால் “புதிய பூமி எழுந்து வரட்டும் ” என்கின்ற பாடல் படப்பட்டது. 

தொடர்ந்து , 

“இனவழிப்புக்குள்ளாகும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும், மதரீதியான பாகுபாடுகளும்/ Religious discrimination and the discrimination faced by the genocidal communities” 

 என்கின்ற தலைப்பில் அயர்லாந்தில் இருந்து வந்து கலந்துகொண்ட தோழர்  ஷிபானா நியாஸ் அவர்கள் ஒரு நீண்ட ஆழமான உரையை நிகழ்த்தினார்.

Intersectionaty என்கின்ற பகுப்பாய்வு முறையின் ஊடாக ஒருவரது அடையாளத்தின் பல்வேறு கூறுகளான இனம், பாலினம், வர்க்கம், மதம், பாலியல் நோக்கு, மற்றும் திறன் ஆகியவை ஒரேநேரத்தில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டும், வேறுபட்டும் மாறுபட்ட  அனுபவங்களை உருவாக்குகின்றன என்பதை விளக்கினார். இதற்கு இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும்  முஸ்லீம் சமூகத்தின் மீதான வெறுப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதையும், இலங்கையை பொறுத்தவரை சிங்கள பௌத்த  தேசியத்துக்காக   சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மீது எவ்வாறு ஒடுக்குமுறை நடாத்தப்பட்டதென்றும், மேலும்  சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மீது எவ்வாறு  இனப்படுகொலை நடத்தப்பட்டது  என்றும், அதே நேரம் தமிழ் தேசியத்துக்காக LTTE  யினர் இன்னுமொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்திய இனச்சுத்திகரிப்பு, பள்ளிவாசல் படுகொலைகள் என்பவற்றையும்  விபரித்தார். 

மதிய உணவின் பின்னர் தொடர்ந்த பெண்கள் சந்திப்பில்:

==++=+=+++=======

“ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்கள்  நீதியைப் பெறுவதற்காக எதிர்கொள்ளும் சவால்கள்/Challenges to Accessing Justice for Women with Intersectional Identities”

இந்தத் தலைப்பில் இந்தியாவில் இருந்து வந்திருந்த கிருபா முனுசாமி அவர்கள் பேசினார். 

“நீதி என்பது எல்லோருக்கும்  சமமானதல்ல” என்பதை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்களுக்கும் மேட்டுக்குடி சமூகங்களுக்குமிடையிலான நீதியின் பாரபட்சத்தையும், அதை அடைவதற்கான வழிமுறைகளின் வேறுபாட்டையும் அனுபவ ரீதியாக விளக்கினார். மேலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு  நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளே தடைசெய்யப்பட்டுள்ளன. அதையும் தாண்டி மிகவும் கடுமையான போராட்டத்தினூடாக உச்சநீதிமன்றத்தை சென்றடைந்தாலும் அங்கும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதை பல வழக்குகளுக்கு என்ன நடந்தது என்கின்ற உதாரணத்துடனும் தனது களச்செயற்பாட்டு  புள்ளிவிபரங்களோடும் விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து,,, 

“சாதி இப்ப மறைஞ்சு  போச்சு” என்கின்ற  பாடலை சாந்தியும் உமாவும் இணைந்து பாடினார்கள்.

 அதனைத்தொடர்ந்து,,,   

“இடம்பெயர்வில் இன, வர்க்க ஒடுக்குமுறைகள் (Racial and class discrimination in migration)”

என்கின்ற தலைப்பில் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து கலந்துகொண்ட ஹரிகீர்த்தனா அவர்கள் உரையாற்றும் போது, 

இடப்பெயர்வில் இருக்கக்கூடிய பாதிப்புகள் இனம், நிறம், தேசியம், மதம், வர்க்கம், பாலினம், பாலியல் போன்ற பல பரிமாணங்களில் அதனது   பாதிப்பை பகுப்பாய்வு    செய்யப்படவேண்டியுள்ளது.

 உலகில் இடப்பெயர்வுகள் எப்போதிருந்தோ ஆரம்பித்திருந்தாலும்,   காலணித்துவ  காலங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு  லட்சக்கணக்கான    கறுப்பு மக்களை  அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டதே பெரும் இடப்பெயர்வாகும்.    ஏன் கறுப்பு மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்,  எவ்வாறு மிகமோசமாக நடாத்தப்பட்டார்கள்    என்பதையும், அதற்கு  நிற, இன, மத, வர்க்க வேறுபாடுகள் எவ்வாறு ஊக்கிகளாக   அமைந்தன என்பதையும் கூறினார். தொடர்ந்து  இலங்கையில்  நடைபெற்ற தமிழர்களின் இடப்பெயர்பு, முஸ்லிம்களின் இடப்பெயர்வு போன்றவைக்கு பின்னிருந்து காரணங்களையும் அதேநேரம் இடப்பெயர்ந்த மக்களுக்குள் நடந்த சாதிய, வர்க்க முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

தேநீர் இடைவேளையின் பின்னர்,

சுமதி சிவமோகனின் “மௌனத்தின் நிழல்கள்”  நாடகத்தில் இருந்து ஒருபகுதியை  பிரித்தானியாவில் இருந்து கலந்துகொண்ட நிர்மலா மற்றும்  ராணி  இருவரும்  நிகழ்த்திக்காட்டினர் .

முதலாவது நாள் பெண்கள் சந்திப்பின் இறுதி நிகழ்வாக “37வது  பெண்கள்சந்திப்பு பற்றிய ஒரு ஆய்வுரை”  அந்நிகழ்வினை நடாத்திய ஓவியா, மிதுனா  போன்றவர்களால் செய்யப்பட்டது.

    26.10.2025:

முதலாவது நிகழ்வாக,,, 

“பெண்ணிலைவாத செயல்வாதத்திற்குள் திருநர்களின் பங்களிப்பு/ The Role of Transgenders in Feminist Activism”

இலங்கையில் இருந்து ஏஞ்சல் குயின்ரஸ் அவர்கள் பேசினார்கள். 

ஒரு குயர் சமூகத்தை சேர்ந்தவள் என்கின்ற வகையில் என்னுடைய அனுபவ ஆய்வினூடாக இதைப் பார்க்கும்போது பெண்ணிய அமைப்புகளும் பெண்ணியமும் குயர் சமூகத்து செயற்பாடுகளுக்கு மிக நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருக்கின்றது என்றார். மேலும் குயர் சமூகங்களுக்கிடையேயும் Intersectionality  ஆய்வுமுறை முக்கியமானது. ஏனெனில் இங்கும் இன, வர்க்க, ஆணதிக்க, சாதி வேறுபாடுகளுக்கமைய ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதை  சுட்டிக்காட்டி பேசினார்.

தேநீர்  இடைவேளையின் பின்னர் மீண்டும்  

“புது பட்டு வரி போட்டு ”  என்கின்ற பாடலை சாந்தியும் உமாவும் இணைத்து பாடினார்கள் .  

பால்நிலை வன்முறை மற்றும் கூட்டுப் பராமரிப்பு

Gendered Violence and Collective Care

நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த கார்த்திகா நடராஜாவும் இந்கிலாந்தில் இருந்து வந்திருந்த மினோயா பற்குணம் அவர்களும் இணைந்து இத்தலைப்பின் கீழ் 

“Speech, workshop & discussion”  என்ற ஒழுங்கில் நிகழ்வினை நிகழ்த்தினர். 

முதலில் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு தன்னுடைய கள ஆய்வில் கோலம் போடுவதினூடாக புரிந்துகொள்ள முயற்சிசெய்ததாகவும், அதில்  பெண்களின் மனநிலையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் மேலும் பல கள ஆய்வுபற்றிய விடயங்களை மினோயா அவர்கள் பகிர்ந்துகொண்டார். 

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு அணுகுதல் என்கின்ற விடயத்தை,  

hard roadblocks, soft roadblocks என்கின்ற இரண்டு வழிகளினூடாக அணுகமுடியும் என்று விளக்கியதோடு அதனது வேறுபாட்டினை அறிய சந்திப்பில் இருந்த அனைத்து பெண்களையும்  இணைத்து ஒரு செயற்பாட்டு நிகழ்வையும்  நடாத்தினார்கள். அதிலிருந்து தொடர்பாடலில் எவ்வாறு தடை ஏற்படுகிறது என்பதையும், எவ்வாறான கேள்விகளை கேட்டு அவர்களை தொடர்ச்சியாக உரையாட வைக்கமுடியும் என்பதையும் கலந்துரையாடல் மூலம் வெளிக்கொண்டுவந்தார் கார்த்திகா அவர்கள். 

இதன்பின்னர்,  

“உரத்துப்பேசுவோம்” என்கின்ற கவிதா நிகழ்வு நடைபெற்றது. இக்கவிதா நிகழ்வில் 

உமா, லிவிங் ஸ்மைல் வித்தியா, சுகிர்தராணி போன்றவர்களின் கவிதைகளை கமலா, சாந்தா, உமா, விஜி நால்வரும்  ஆற்றுகைப்படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து , 

“தமிழ் சினிமாவில் விளிம்பு நிலை சமூகங்களின் சித்தரிப்பு / Portrayal of marginalized communities in Tamil cinema” 

என்ற தலைப்பில் இங்கிலாந்தில் இருந்து கலந்துகொண்ட அஞ்சனா  அவர்கள் பேசுகையில் 

தமிழ் சினிமாவில் பெண்களுக்கான இரண்டாம்பட்ச நிலை பற்றி அன்றிலிருந்து இன்றுவரையான சினிமாக்களை எடுத்து பன்மைத்துவ பாகுபாடுகள் குறித்து ஆய்வுசெய்தார். அதாவது தமிழ் சினிமாக்களில் நிற பாகுபாடு, சாதியம், பாலின பேதம்  காரணமாக பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் LGBTQ சமூகத்தினரையும் எவ்வாறு சித்தரிக்கின்றார்கள் என்பதை விரிவாக உதாரணங்களோடு  ஆராய்தார். மேலும் இன்றைய கால இயக்குனர்களான பா.ரஞ்சித், மாரி செல்வராஜா, வெற்றிமாறன் போன்றவர்களின் சமூகத்திற்கு தேவையான சிறந்தபடங்கள் பற்றியும், அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்பதோடு  அவர்களிடம் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான கரிசனை பற்றியும், தேடுதல் பற்றியும் கேள்வியெழுப்பவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். முக்கியமாக இவர்களிடம்தான் இக்கேள்விகளை கேட்கமுடியும். ஏனெனில் எங்களுக்கு இவர்கள் நெருக்கமாக இருப்பவர்கள் என்று தனது உரையில்  குறிப்பிட்டார் .

இறுதியாக அடுத்த சந்திப்பு பிரான்சில் நடாத்துவதற்கு விஜி, வனஜா போன்றோர் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.  

முடிவாக

 இப்பெண்கள் சந்திப்பு நல்லதொரு விடயத்தை (Intersectionality) எடுத்து அதை பல்வேறு பெண்கள்  தரப்பினரின் பகுப்பாய்வின் மூலம் ஆழமான கருத்துரைகளை கொண்டமைந்தது மிக சிறப்பாகும். மற்றும் இச்சந்திப்பில் அதிகமாக இளையவர்கள் கலந்துகொண்டதும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியிலும் இப்பெண்கள் சந்திப்பை ஒழுங்கமைத்த பேர்ளின் பெண்கள் சந்திப்புக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.