— அழகு குணசீலன் —
புலம்பெயர்ந்த தேசங்களில் பலர் இயற்கை மரணத்தை தழுவியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு பல்துறை ஆர்வலனாக ஜீவனின் மரணம் பெற்றிருக்கின்ற ஈர்ப்பு அதிகமானது. அதிசயிக்கத்தக்கது.
புலம்பெயர்ந்த தேசங்களையும் கடந்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூரிலும் ஜீவன் தனது கலைப்பயணத்தின் ஊடாகப் பேசப்படுகிறார்.
இதற்கு என்ன காரணம்?
ஜீவன் ஒரு முன்னாள் ஈழப்போராளி.
ஒரு ஊடகவியலாளர்.
ஒலி, ஒளி பரப்பாளர், படப்பிடிப்பாளர்.
நாடக, குறுந்திரை தயாரிப்பாளர்.
சிறந்த தொடர்பாளர்.
கட்டுரையாளர், பேச்சாளர், விமர்சகர்.
சினிமாவிலும் தேர்ச்சி பெற்ற பல்துறை ஆற்றல் கொண்டவர்.
இவற்றின் பிரதிபலிப்பாக மரணித்தும், மறக்காத நினைவுகளோடு பலரும் அவருடனான நினைவுகளை இரைமீட்கின்றனர்.
எனக்கும் ஜீவனுக்குமான முதல் சந்திப்பு எப்போது, எங்கு ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை.
எனது நினைவு சரியென்றால் 1990 நடுப்பகுதியில் சூரிச்சில் இடம்பெற்ற இரு கவிதை நூல்களின் விமர்சன நிகழ்வு என்று நினைக்கிறேன்.
சுவிஸ் ரவியின் “செட்டை கழற்றிய நாங்கள்”, மற்றும் காத்தான்குடி என்.ஆத்மாவின் “அதிகாலை நீல இருள்” கவிதை நூல்கள் அவை.
அந்த நிகழ்வுதான் சுவிஸில் நான் கலந்து கொண்ட முதலாவது கலை, இலக்கிய நிகழ்வு.
ஜீவனின், போராட்ட பின்னணி, கலை, இலக்கிய ஆர்வம், அப்போது மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பம் என்பனவற்றின் அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன்.
அதற்கு பின்னர் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கலந்துரையாடல்களில் இந்த உறவு தொடர்ந்தது.
எங்களை ஜீவனுடன் நெருக்கமாக பிணைத்த சில விடயங்களை குறிப்பிட்டால், அவற்றினூடாக அவரின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் ஏடு பத்திரிகை, லண்டன் ரி.பி.சி.வானொலி, பாரிஸ் ரி.ஆர்.ரி வானொலி, தொலைக்காட்சி என்பன அவற்றுள் சில. மேலும் “FLUCHT” அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான ஓவியப்போட்டி, ஜீவனின் குறும்படங்கள் போன்ற வற்றையும் குறிப்பிடலாம். (FLUCHT: ஜேர்மன் மொழியில் அகதியாதல், தப்பித்த்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டது)
ஓவியப்போட்டிக்கு பிரதான நடுவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவரை அழைத்திருந்தோம். மற்றைய இரு நடுவர்களுள் ஓவியக்கலை அழகியலில் ஈடுபாடு கொண்ட ஜீவனும் ஒருவர் என்று நினைக்கிறேன். எனினும் எனக்கு நிச்சயமாக குறிப்பிட முடியாதுள்ளது.
அன்றைய சூழலில் மாற்று சினிமா, மாற்று மொழி சினிமா குறித்த சிறந்த விமர்சகர்களாக ஐரோப்பாவில் இருந்த சில தமிழர்களுள் ஜீவனும் ஒருவர். அச்சுறுத்தல்களுக்கும், ஜனநாயகத்திற்கு முரணான கருத்துச்சுதந்திர தடைகளுக்கும் மத்தியிலும் ‘பரம்’ என்று அறியப்பட்ட பாலசுப்பிரமணியத்தை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ்ஏடு’ பத்திரிகையில் சினிமா விமர்சனம், அறிமுக கட்டுரைகளை ஜீவன் தொடர்ந்து எழுதினார்.
அப்போது தமிழ் ஏட்டில் என்னால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதப்பட்டன. பண்டமாற்று போன்று இருவரும் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் விமர்சனங்களைச் செய்து கொள்வோம். நான் எழுதி, ஜெயந்தி மாலாவின் குரலில், ராம் ராஜ்ஜின் ரி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட “பூகோளம்” நிகழ்ச்சி நிறைவுறும் போது எங்கள் வீட்டு தொலைபேசி அலறும். அந்த அழைப்பில் வருபவர்களுள் ஜீவன் முதன்மையானவர். அவர் நிகழ்சி குறித்த கருத்துக்களை சூடு ஆறுமுன் சொல்லுவார்.
ஜீவன் மூன்று குறும்படங்களையும் போட்டிக்கு தயாரித்தார். ‘எச்சில் போர்வை’, ‘நிழல் யுத்தம்’ என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை பரிசுகளையும் பெற்றுக்கொண்டன.
ஜீவனை ஒரு அழகியல் கலைஞன் என்றும் குறிப்பிடலாம். காட்சிகளை அவர் படமாக்கும் விதம் அற்புதமானது. அவை வெறும், காட்சிகளோ, படங்களோ அல்ல. மனித எண்ணங்களை பிரதிபலிக்கின்ற – பார்வையாளர்களோடு நேரடியாக பேசுகின்ற கைவண்ணங்கள். அதனால்தான் ஜீவனின் கமரா மொழி பாலுமகேந்திரா பாணி என்று குறிப்பிட்டேன். ஜீவன் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய தலைசிறந்த கமராக்கலைஞன்.
இந்தப் பண்புகளை சிங்கப்பூரில் அவரே குறிப்பிடுகின்ற கோபாலு அண்ணர் முதல் பாலச்சந்தர் -பாலுமகேந்திராவின் அனுபவங்கள் வரை பெற்று தன்னை புடம்போட்டுக்கொண்டு சிறந்த கமராக்கலைஞனாக உயர்ந்தவர்.
பாரிஸ் ரி.ஆர்.ரி. தொலைக்காட்சியில் பிலிப் தேவா தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் ஜயந்தியும், நானும் பங்களிப்பு செய்தோம். எங்கள் கதைக்கும், குரலுக்குமான காட்சியை படமாக்குவதில் ஜீவனின் கமரா மிகவும் அற்புமாக பேசியது. சுமார் 25- 30 ஆண்டுகளுக்கு முன்னரான ஒப்பீட்டளவில் இன்றையதை விடவும் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த காலத்தில் ஜீவனின் கைவரிசை குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் பின்னர் டொச் மொழியிலும் புலமை பெற்றிருந்த ஜீவன் தனது உறவுகளை தமிழ்பரப்புக்கும் அப்பால் விரிவுபடுத்தியது வியப்புக்குரியதல்ல. அவர் எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தார்.
அவரது சிங்கள மொழியாற்றல், செய்தித்தொகுப்பு, ஊடக நுணுக்கங்கள் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பினரால் 1980 களில் நடாத்தப்பட்ட “தமிழ் ஈழத்தின் குரல்” வானொலியில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பவராகவும் இருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் இந்த பணி உதவியது.
இலங்கையின் இருதயம் என்று கருதப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் “புளொட்” அமைப்பு நடாத்திய நிக்கவரெட்டிய வங்கிக்கொள்ளையிலும் ஜீவன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயக்கத்திற்கு போனதால் தான் தனது வாழ்வு தொலைந்தது என்று கவலைப்படும், எல்லா இயக்கங்களினதும் ஆயிரக்கணக்கான அன்றைய இளைஞர்களுள் ஜீவனும் ஒருவர்.
இறுதியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட “உதயம்” கிழக்கின் வருடாந்த ஒன்று கூடலுக்கான நடன நிகழ்வொன்றை அவரே ஏற்பாடு செய்தும் தந்திருந்தார்.
நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை.
அஞ்சலிகள் ஜீவன்.
