(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று 27.05.2025 அன்று திருகோணமலையில் வைத்துக் கைசாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி எனும் வேதாளம் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எனும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது.
இதனைப் பின்வருமாறு விளக்கலாம்.
கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008 இல் நடைபெற்றபோது வடக்கிலிருந்து பிரிந்த கிழக்கு மாகாணத்தில் அதாவது பிரிந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம், (இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டுமே போட்டியிடுவோம்) எனக் கூறி அப்போது இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தது. (பின்னர் பிரிந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது.)
2008 இல் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது.
இத்தேர்தலில் போட்டியிடாதிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனப் பிழையானால் போதுமெனக் கருதி கிழக்கு மாகாணத் தமிழர்கள் எக்கேடுகெட்டாலும் பறவாயில்லை பிள்ளையான் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காகத் திரை மறைவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமைக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முயற்சித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் “Haheeim is a good Muslim” (ஹக்கீம் ஒரு நல்ல முஸ்லிம்) என்பதாகும்.
இந்த அரசியல் சவால்களையெல்லாம் தாண்டி 2008 இல் பிள்ளையான் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கப் பெறுவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விருப்பமும் இந்திய அரசின் செல்வாக்கும் பின்னணியில் இருந்தன என்பது பலரும் அறிந்த விடயமே.
கிழக்கின் தனித்துவம் -கிழக்கின் அபிவிருத்தி-கிழக்கின் ஐக்கியம் என்னும் விடயங்களுடன் கருத்தியல் ரீதியாக இப்பத்தி எழுத்தாளருக்கு உடன்பாடுள்ளதெனினும், பிள்ளையானின் அரசியல் நடத்தைகளுடன் உடன்பாடில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் போன்று கிழக்கின் தனித்துவம் பேசும் இவர்களும் ‘படிப்பது தேவாரம்; இடிப்பது சிவன் கோயில்’ ஆகத்தான் நடந்து கொண்டுள்ளனர். அது வேறு விடயம். பிள்ளையானுடைய அரசியல் பலவீனங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்-தமிழரசுக் கட்சியின் அரசியல் கையாலாகாத்தனம் மறைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான அடுத்த மாகாண சபைத் தேர்தல் 2012 இல் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு 07 ஆசனங்களும் கிடைத்தன. ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடைபெற்று அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்மை ஏமாற்றுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே மறுபக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு வார்த்தை நடத்தி முதலமைச்சர் பதவிக்காலத்தின் முதல் அரைவாசிப் பகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் பின்னரைப் பகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் பகிர்ந்து கொள்வது எனும் உடன்பாட்டுக்கு வந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நஜிப் முதலமைச்சரானார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்குத் துரோகம் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓலமிட்டது. அரசியல் கையாலாகாத்தனத்தால் முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோட்டைவிட்டது.
அதன் பின்னர் இரண்டாவது சந்தர்ப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவைத் தட்டியது.
அது என்னவெனில், 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம் பெற்று, நல்லாட்சி அரசாங்கம் அமைந்து, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அரசாங்கத்தின் அங்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கியது.
அப்போதும்கூட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்கூடாகக் கொடுத்துவிட்டுப் பிச்சைபோட்ட மாதிரி அளிக்கப்பட்ட சபையின் பிரதித் தலைவர் பதவியையும் இரு அமைச்சர் பதவிகளையும் பெற்று அமைதியாகச் ‘சுகபோகம்’ கண்டது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் கையாலாகாத்தனத்தையும்-சுயலாப அரசியலையும்தான் வெளிப்படுத்தியது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் இதுதான் நடக்கப்போகிறது. அதற்கான முன்னாயத்தம்தான் இப்போது கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான 27.05.2025 அன்றைய உடன்படிக்கையாகும். ஆம்! வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் இது.
இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்களே.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி உட்பட வடக்கைத் தளமாகக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளையும் முற்றாக நிராகரித்து கிழக்கைத் தளமாகக் கொண்ட மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் காணவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத முன்னுரிமையோடு இப்போது கிழக்குத் தமிழர்களை எதிர்நோக்கியுள்ளது. கிழக்குத் தமிழர்கள் இப்போதிருந்தே தம்மைத் தனித்துவமான அரசியல் கட்டமைப்பாகத் தகவமைத்துக்கொள்ளல் அவசியம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவதால் பலனில்லை.
